பெரியார் உலகைப் படைப்போம்; பாரெங்கும் அவர் இலட்சியத்தைக் கொண்டு சேர்ப்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தந்தை பெரியாரின் பிறந்த நாள் செய்தி யாக விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
இன்று (17.9.2022) அறிவாசான் தந்தை பெரியாரின் 144 ஆவது ஆண்டு பிறந்த நாள் பெருவிழா - திருவிழா!
திராவிட சமுதாயத்திற்கு மானமும், அறிவும் பிறந்து ‘ஜாதி - தீண்டாமை' என்ற பேதம் ஒழிந்து, சமத்துவமும், சமூகநீதியும் ஒடுக்கப்பட்ட கோடானு கோடி மக்களுக்கு உரிமைகளும் கிட்டிட தமது வாழ்நாளில் எதிர்நீச்சல் அடித்து, கரை கண்ட கலங்கா நெஞ்சர் கருஞ்சட்டைத் தலைவரின் பிறந்த நாள்!
அது நமக்கு வெறும் விழா மட்டுமல்ல - பெரும்பான்மையான நம் மக்களை, சனாதனப் படுகுழியில் வீழாது தடுத்து, சரியான வழிகாட்டும் கொள்கை வீரரின் லட்சிய விழாவும் ஆகும்!
நமக்குச் சூடேற்றும் சுயமரியாதை விழாவும் ஆகும்!!
தந்தை பெரியார் என்ற ஒப்பாரும் மிக்காரும் இல்லாத சுய சிந்தனையாளர், போராட்டக் களங்களிலும் நின்று வென்று காட்டி, வீர வரலாறு படைத்து, தனி சகாப்தம் கண்ட சரித்திர நாயகர் அல்லவா!
இலட்சிய எரிமலை!
உருவத்தால் அவர் மறைந்தாலும், உணர்வாலும், கொள்கையாலும் கொள்கை எதிரிகளை இன்றும் குலை நடுங்க வைக்கும் இலட்சிய எரிமலை அவர்! எனவேதான், மற்ற எதிர்ப்பாளர்களை அரவணைத்து அழித்த ஆரியத்தால், பெரியார் கொள்கைகளை அழிக்க ஒருபோதும் முடிவதில்லை.
சிலையானாலும் அவர் இன்றும் சிங்கமாகவே சிறு நரிக் கூட்டத்தினரை அச்சுறுத்துகிறார்!
அவர் நமது இனத்தின் சுவாசக் காற்றாக இருப்ப தால்தான், அவரைக் கண்டறியாத இளைஞர் கூட்டம் - அவரை ஒரு கருத்தியல் லட்சியப் போராயுதமாக ஏந்தி, ‘பெரியார்' என்ற அச்சொல்லில் ஒரு தனித் துணிவையும் - அநீதியை எதிர்க்கும் வீரத்தையும் பெற்று, திராவிடப் பாசறையின் ஒப்பற்ற லட்சியப் போர் வீரர்களாகத் திகழ்ந்து வருகின்றனர்!
பெரியார் உலகம் உருவாகிறது
இவ்வாண்டு, ‘‘பெரியார் உலக மயம் - உலகம் பெரியார் மயம்'' என்பதற்கான சரித்திரச் சின்னமாகத் திகழவிருக்கும் ‘‘பெரியார் உலகம்'' என்ற ஒரு புது உலகுக்கு அடிக்கல் நாட்டுகிறார் ‘திராவிட மாடல்' என்ற அடிக்கல் மேலே அழகு மாளிகை, அறிவு மாளிகை, சமத்துவ சமதர்ம சமூகநீதி மாளிகையை எழுப்பிக் கொண்டிருக்கும் நமது முதலமைச்சர்!
‘திராவிட மாடல்' ஆட்சியின்மூலம் உலகத்தோரை ‘பெரியார் மண்ணு'க்கு ஈர்த்து, சுயமரியாதை இயக்கத் தின் எதிர்நீச்சலால் ஏற்பட்ட விளைச்சலாம் சாதனைச் சரித்திர நிகழ்வுகளைக் காட்டி, மகிழும் அறிவுக் காட்சியகமாகவும், பல்நோக்குப் பயன்பாட்டுக்குரிய வகையிலும் திராவிட இயக்கம் - பெரியாரின் வர லாற்றை வருங்காலத்திற்கும் வகுப்பெடுக்கப் போகும் பயிலகம் - ஆய்வகமாகவும், அறிவுலகமாகவும், திருச்சி சிறுகனூரில் பெரியார் உலகம் அமைய விருக்கிறது.
வாழ்க பெரியார்!
வருக பெரியார் உலகம்!!
இத்திட்டத்தை தந்தை பெரியாரின் 150 ஆவது பிறந்த நாளுக்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளோம். நல் லோரின் பேராதரவுடன் இப்பயிர் செழித்து விளைந்து, கதிர் முற்றி, களத்து மேட்டுக்கு வருவது உறுதி! எதிர்ப்புகள் எப்போதும் எமக்கு நல்ல உரங்கள்தானே - அவற்றையும் வரவேற்கிறோம் வழமைபோல!
வாழ்க பெரியார்!
வருக பெரியார் உலகம்!!
No comments:
Post a Comment