அமிழ்தினு மினிய தமிழ்நிலைத் தோங்கிட
‘தமிழ்நாடு’ எனப்பெயர் சூட்டிய தென்னவர்
தமையே தொண்டறப் பணிக்கென ஈந்துசெந்
தமிழின நெஞ்செலாம் உறைந்தமா மன்னவர்
அறிஞர் எனப்பல் லாயிர வர்களுள்
குறிப்பிடத் தக்கவோர் குறிக்கோள் கொண்டவர்
நெறிபிற ழாமல் நீதியும் நேர்மையும்
பொறிபுல னாக்கிப் போற்றியே நின்றவர்
நாத்தமிழ் நயத்தால் மாத்திரள் மக்களை
ஈர்த்தசெங் காந்தச் சொற்றிற வேந்தர்
எப்பொருள் தலைப்பினும் அப்பொருள் சிறப்புற
செப்பிடும் திறனுடைச் சிந்தனை மாந்தர்
வீரியச் சொற்களை வீசியே வஞ்சக
ஆரியம் அரண்டு மிரண்டிட ஆர்த்தவர்
பேரிகை முழக்கி இந்தியை எதிர்த்துப்
போரினில் வென்றுதென் புலத்தமிழ் காத்தவர்
புராண வேத இதிகா சங்களின்
புரட்டுகள் புளுகுகள் பொசுக்கிய நெருப்பு
“திராவிட நாடு” தனிலே தன்திறன்
விரவிப் பொதிந்த வியனிதழ்ப் பொருப்பு
கடவுள் மதங்கள் ஜாதிகள் ஒழிந்திட
தடந்தோள் உயர்த்தித் தகவுரை பெய்தவர்
இடர்தரு மனுக்குலக் கோட்டை நீறிட
திடமிகு நாத்திகத் தீக்குட செய்தவர்
சீறியே திராவிட மக்களைத் தீண்டிய
ஆரியப் பாம்பின் விடப்பல் உடைத்தவர்
வீரியம் அகன்றிட வீழ்ந்தவர் விழிப்புற
‘ஆரிய மாயை’ எனும்நூல் கொடுத்தவர்
பல்லியல் நூல்கள் பலவும் படித்து
உள்ளுறை அறிவாய்த் தேக்கிய கொள்கலன்
இலக்கிய நடையில் எவருமே எட்டிடா
வழக்கிலே புதுமை வார்த்தசெஞ் சொல்வளன்
கண்டதும் கொண்டதும் தலைவர் பெரியார்
என்றே அவர்தம் தொண்டராய்த் திகழ்ந்தவர்
அன்றவர் வென்றுநாட் டாட்சியைப் பிடித்ததும்
சென்றுதம் பெரியார்க் களித்துளம் மகிழ்ந்தவர்
விரிவுல கினிலே பிறர்க்கென வாழ்ந்திடும்
விதிவழிக் கொள்கை வரித்தார் தமக்காய்
அறிவுல காசான் ஆய்ந்துகண் டெடுத்த
அறிஞராய் அண்ணா பிறந்தார் நமக்காய்!
- பெரு. இளங்கோ
No comments:
Post a Comment