அண்ணா பல்கலை.யில் ‘பி.பிளான்’ பட்டப்படிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 26, 2022

அண்ணா பல்கலை.யில் ‘பி.பிளான்’ பட்டப்படிப்பு

சென்னை,ஆக.26- திட்ட அமைப்பாளர்களை அதிக அளவில் உருவாக்கும் வகையில், சிஎம்டிஏ, டிடிசிபி நிதியில், அண்ணா பல்கலைக்கழகத்தில் ‘பி.பிளான்’ பட்டப் படிப்பை தொடங்க தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவில் நகர்ப்புற திட்டமிடல் திறன் தொடர்பாக நிட்டி ஆயோக் அளித்த பரிந் துரையில், திறன் பெற்ற திட்ட அமைப்பாளர்கள் (பிளானர்கள்) அதிகளவில் தேவைப்படுவதைச் சுட்டிக்காட்டியது. அதில், வரும் 2032ஆம் ஆண்டில் 3 லட்சம் நகர மற்றும் ஊரமைப்பு திட்ட அமைப்பாளர்கள் நாடு முழு வதும் தேவைப்படுவதாகவும், குறிப்பாக ஆண்டுக்கு சராசரியாக 6 ஆயிரம் இளநிலை திட்டமிடல் படித்தவர்கள், 2 ஆயிரம் முது நிலை திட்டமிடல் முடித்தவர்கள் என 8 ஆயிரம் பேர் தேவைப் படுவதாகவும் தெரிவித்தது.

மேலும், புதிதாக பெருநகரங் களில் 14 புதிய திட்டமிடல் மற்றும் கட்டடக்கலை பள்ளிகள் தொடங்கி, இளநிலை திட்ட மிடலில் ஆண்டுக்கு 75 பேரும், முதுநிலையில் 60 பேரும் சேர்க்கலாம். மற்ற இடங்களை பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் இதர மாநில அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள், இதர கல்வி நிறுவனங்களில் இள நிலை திட்டமிடல் படிப்புக்கு வழங்கலாம் என்றும் தெரிவித்தது.

இதையடுத்து கடந்த 2021ஆம் ஆண்டு டிச.21ஆம் தேதி, நகர்ப்புற திட்டமிடல் தொடர் பான ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாட்டில் நடைபெற்றது. அதில், ‘தமிழ்நாட்டில் 3 கல்வி நிறுவனங்கள் முதுநிலை திட்டமிடல் படிப்பை வழங்கி வருகின்றன. ஆனால் இளநிலை திட்டமிடல் படிப்பு எந்த கல்வி நிறுவனத்தாலும் வழங்கப்ப டவில்லை’ என்று சுட்டிக்காட் டப்பட்டது.

தமிழ்நாட்டில் தகுதிவாய்ந்த நகர திட்ட அமைப்பாளர்கள் பற்றாக்குறை இருப்பதால், ‘பி.பிளான்’ அதாவது இளநிலை திட்டமிடல் படிப்புகளை, தமிழ்நாட்டில் சில கல்வி நிறுவ னங்களில் தொடங்க நடவடிக்கை எடுக்க உயர்கல்வித் துறைக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதன் அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் ‘பி.பிளான்’ படிப்பை தொடங்க முடிவெடுக்கப்பட்டு, நடப்பு ஆண்டில் ஒற்றைச்சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. தொடர்ந்து இந்தாண்டு பிப்.25-இல் நடைபெற்ற நிட்டி ஆயோக் கூட்டத்தில், தற்போ துள்ள அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சில் (ஏஅய்சிடிஇ) விதிகள்படி, அண்ணா பல்கலைக்கழகம் அந்த படிப்பை தொடங்க உள்ளதாக உயர்கல்விச் செயலர் தெரிவித்தார்.

இந்நிலையில், வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துச்சாமி, சட்டப்பேரவையில் ‘‘சென்னை அண்ணா பல்கலைக்கழக கட்ட டக்கலை மற்றும் திட்டமிடல் பள்ளியில், இளநிலை திட்ட மிடல் பாடத்திட்டத்தை அறி முகப்படுத்த சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) மற்றும் நகர ஊரமைப்பு இயக்ககம் (டிடிசிபி)ரூ.10 கோடி வழங்கும்’’ என அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து, நடைபெற்ற கூட்டத்தில் அண்ணா பல்கலைக்கழகத்துடன் சிஎம்டிஏ, டிடிசிபி இணைந்து இந்த படிப்பை செயல்படுத்து வதற்கான முடிவு எட்டப்பட்டது. தொடர்ந்து, சிஎம்டிஏ உறுப் பினர் செயலர் அளித்த பரிந்துரை அடிப்படையில், தமிழ்நாடு அரசு உத்தரவுகளைப் பிறப்பித் துள்ளது.

5 ஆண்டு படிப்பு

அதன்படி 5 ஆண்டு படிப் பான ‘பி.பிளான்’ படிப்புக்கு, முதல்கட்ட அடிப்படை நிதியாக ரூ.10 கோடியும், அடுத்தடுத்த 4 ஆண்டுகளுக்கு ரூ.8.54 கோடியும் என ரூ.18.54 கோடி தேவை என்பதால், இந்த நிதியை சிஎம்டிஏவும், டிடிசிபியும் 80:20 என்ற விகிதத்தில் நிதி அளிக்க உத்தரவிட்டதோடு, முதல்கட்ட ரூ.10 கோடியை உடனே வழங் கவும், மீதமுள்ள நிதியை 4 ஆண்டு களாக வழங்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், ‘பி.பிளான்’ படிப்பை நடைமுறைப்படுத்த, அண்ணா பல்கலை. கட்டடவியல் மற்றும் திட்டமிடல் பள்ளியின் ஆய்வு அமைப்பான மனித குடியமர்வு மய்யத்தின் செயற்குழுவில் துணைத் தலைவராக சிஎம்டிஏ உறுப்பினர் செயலரை செயல் படவும், பாடத்திட்டத்துக்கான சார்பு குழுவில் உறுப்பினராக்கவும் ஒப்புதல் அளித்துள்ளது.

‘பி.பிளான்’ படிப்புக்கான ஆசிரியர்களை தேர்வு செய்யும் குழுவில் சிஎம்டிஏ உறுப்பினர் செயலர், டிடிசிபி இயக்குநர் ஆகியோரை உறுப்பினராக செயல்படவும் அரசு உத்தர விட்டுள்ளது. 

அதேபோல், இரு அமைப்புகளும் சேர்ந்து ‘பி.பிளான்’ படிப்புக்கான ஒரு ஆராய்ச்சி மற்றும் திட்டமிடல் இருக்கையை உருவாக்கவும் அரசு அனுமதியளித்துள்ளது. இதுதவிர, ஆண்டுதோறும் இரு அமைப்புகளில் இருந்தும், தலா 2 அதிகாரிகளை ‘டான்செட்’ தேர்வு இன்றி சேர அனுமதிக்க வேண்டும் என்றும் உத்தர விட்டுள்ளது.


No comments:

Post a Comment