பெரியார் சிலையை உடைப்போம் என்ற இந்து முன்னணி பேர்வழி சிறையில் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 16, 2022

பெரியார் சிலையை உடைப்போம் என்ற இந்து முன்னணி பேர்வழி சிறையில்

சென்னை,ஆக.16- தந்தைபெரியார் சிலை குறித்து அவதூறாக பேசியவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை மதுரவாயலில் கடந்த ஜூலை 31ஆம் தேதி, இந்து முன்னணி சார்பில் இந்துக்கள் உரிமை மீட்பு பிரச்சார பயண நிறைவு பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்  பேசிய இந்து முன்னணியின் மாநில கலை இலக்கியச் செயலாளர் கனல் கண்ணன், ”சிறீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும்போது எதிரே கடவுள் இல்லை என்று சொன்ன ஈ. வெ. ராவின் சிலை இருப்பதாகவும், அந்த சிலை என்று உடைக்கப்படுகிறதோ அன்று தான் இந்துக்களின் எழுச்சி நாள்” என்றும் கூறியிருந்தார். இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

அவர் மீது காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. இதற்கிடையே கனல் கண்ணன், பெரியார் குறித்து அவதூறாக பேசும் காட்சிப்பதிவு, சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. இதனையடுத்து கனல் கண்ணன் மீது சென்னை சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்தனர்.

காவல்துறையினர் தேடுவதை அறிந்து கனல் கண்ணன் தலைமறைவானார்.  இதற்கிடையில், இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி, கனல்கண்ணன் தொடர்ந்த முன்பிணை கோரிய மனுவை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், அவர் தலைமறைவாகி புதுச்சேரியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்த நிலையில், சென்னை மத்திய குற்றப் பிரிவு சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் புதுச்சேரிக்கு  அவரை தேடி சென்றனர். இதனையடுத்து, புதுச்சேரியில் பதுங்கியிருந்த கனல்கண்ணனை, சென்னை சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர்கைது செய்தனர்.


No comments:

Post a Comment