ஜாதிப் பாகுபாடுகள் தலைமுறை தலைமுறையாக இந்தியர்களைப் பிரித்து, கூறுபோட்டு வந்துள்ளன என்பது நமக்கெல்லாம் தெரிந்த கசப்பான உண்மையே. அமெரிக்க மாநிலங்களில் இயங்கிவரும் தொழில்நுட்ப நிறுவனங்களும் தற்போது ஜாதிகளின் படிநிலை அமைப்புப் பிரச்சினையை எதிர்கொண்டு வருவதாக ராய்டர்ஸ் (Reuters) என்னும் செய்தி பரிமாற்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.
கலிஃபோர்னியாவின் வடக்குப் பகுதி சிலிகான் பள்ளத்தாக்கு (Silicon Valley) என்று அழைக்கப்படுகிறது, இங்கு இயங்கிவரும் பல தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களுள் ஒன்றான 'ஆப்பிள்' (Apple),, தங்கள் பணியாளர்களை ஜாதிப் பாகுபாடு பாதிக்காத வகையில் நிறுவன நிருவாக விதிகளில் மாற்றங்கள் செய்து வருகிறது. மற்ற பிரபல தொழில்நுட்ப நிறுவனங்களுக்குApple' வழிகாட்டியாக, முன்மாதிரியாக இந்த விஷயத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் நீண்டகாலமாக நிலவிவரும் ஜாதி அமைப்புகள் குறித்து பல முன்னணி நிறுவனங்கள் அலசி ஆராய்ந்து பாடம் படித்து வருவதாகத் தகவல்!
சட்ட விரோதமான பாகுபாடுகள்...
பணிநியமனத்தின் போது தவிர்க்கப்பட வேண்டிய பாகுபாடுகள் என்று 'ஆப்பிள்' நிறுவனம் பதினெட்டு அம்சங்களைப் பட்டியலிட்டுள்ளது. இனம், மதம், பாலினம், வயது, மூதாதையர் மரபு ஆகியவை அவற்றுள் உள்ளன. இவற்றுடன் 'ஜாதி' என்கிற இன்னொரு அம்சத்தையும் Apple நிறுவனம் தற்போது சேர்த்துள்ளது - தவிர்க்கப்பட வேண்டியதாக, அமெரிக்க வேறுபாட்டுச் சட்ட விதிகளுக்கு முரணாக இந்தப் புதிய அம்சத்தின் சேர்க்கை உள்ளது. சட்ட விரோதமான பாகுபாடுகளுள் ஜாதிபேதம் இடம் பெறவில்லை. இந்த வேறுபாடு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக தெளிவான குறிப்பு ஏதும் அமெரிக்க சட்டப் பிரிவுகளில் இல்லை.
Apple நிறுவனம் ஜாதிபேதம் பார்க்கப் படக்கூடாதென்று புதிதாக ஒரு விதியை இப்போது சேர்க்க என்ன காரணம்? பணி நியமனங்களைக் கட்டுப்படுத்தி வழிநடத்த ஒரு தனி அமைப்பு கலிஃபோர்னியாவில் உள்ளது (Employment Regulator). இந்த அமைப்பு சிஸ்கோ சிஸ்டம்ஸ் (Cisco Systems) என்னும் நிறுவனத்தின் மீது தொடர்ந்த ஒரு வழக்கு தான் இதற்கு மூல காரணம்.
ஜாதி வேறுபாடு தவிர்க்கப்பட வேண்டும்
"சிஸ்கோ சிஸ்டம்ஸ்" என்னும் அந்த நிறுவனத்தில் தலித் ஜாதியைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர் பணிபுரிந்து வந்துள்ளார். உயர்ஜாதியைச் சேர்ந்த மேலதிகாரிகள் இருவர் தனக்கு பல விதங்களில் இடையூறு செய்து வருவதாக பணி நியமன கட்டுப்பாட்டு அமைப்பிடம் அந்தப் பொறியாளர் புகார் செய்துள்ளார். அவர் சார்பில் நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டது. ஆனால், குற்றச்சாட்டை நிறுவனம் ஏற்க மறுத்துள்ளது. தீவிரமாக விசாரித்ததில் அது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று தெரிய வந்துள்ளதாக அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது, அப்படியே நடந்திருந்தாலும் அது குற்றமல்ல என்றும், கலிஃபோர்னியாவில் ஜாதிக் குறியீடு சட்ட விரோதமானதல்ல என்றும் இந்த நிறுவனம் இறுமாப்புடன் பதிலளித்துள்ளது. இந்த விவகாரம் நாற்புறமும் பரவிவிட்டது. 2020ஆம் ஆண்டு ஜூன் மாதமே பல தொழில்நுட்ப நிறுவனங்கள் இதனால் விழித்துக் கொண்டன. Apple நிறுவனமும் ஜாதி வேறுபாடு தவிர்க்கப்பட வேண்டும் என்று தன் கோட்பாடுகளில் சேர்த்துக் கொண்டு விட்டது.
அண்மையில், சிஸ்கோ சிஸ்டம்ஸ் நிறுவனம் நீதிமன்றம் வரை போகாமல் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண முயன்றது, ஆனால் அதன் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டது. விரைவில் நீதி மன்ற விசாரணைக்கு இந்த வழக்கு நிச்சயமாக வந்துவிடும் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.
தரம் தாழ்ந்த பணிகளை...
இந்தியாவில் நீண்ட காலமாகவே படிநிலையமைப்பு மூலம் ஜாதிகள் பிரிக்கப்பட்டு வந்துள்ளன. ஒரு நபரின் சமூக அந்தஸ்து குலமரபைச் சார்ந்தே கணிக்கப்பட்டு வந்துள்ளது. புரோகிதர் வகுப்பான பார்ப்பனர்களை (Priestly Class) உயர்மட்டத்திலும் தீண்டத்தகாதவர்கள் என்று ஒரு பிரிவினரை அடிமட்டத்திலும் வைத்துள்ள கொடுமை நீடித்தே வருகிறது. தரம் தாழ்ந்த பணிகளை தீண்டத்தகாதவர்கள் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்கிற அவல நிலையும் பல நூற்றாண்டுக் காலமாக நீடித்து வருகிறது.
பணிநியமன விவகாரத்தில் அமெரிக்காவில் இத்தகைய வழக்கு தொடுக்கப்பட்டது இதுவே முதன்முறை எனலாம். இந்த விவாதம் இதற்கு முன் இந்த அளவுக்கு பேருரு எடுத்ததில்லை. மிகப் பெரிய சலசலப்பை ஏற்படுத்திவிட்டது CISCO SYSTEMS விவகாரம். அமெரிக்க தொழில் நுட்ப நிறுவனங்கள் இந்தியர்களை வலைவீசிப் பிடித்து பணியில் அமர்த்தி வருவது ஏன்? திறமைசாலிகள், ஆற்றல் மிக்கவர்கள் இந்தியர்கள் என்பதால்தானே!. எனவே, அவர்களை இழந்துவிட அமெரிக்க நிறுவனங்கள் தயாராக இல்லை. எனவே கோட்பாடுகளில், விதிமுறைகளில் அவசர அவசரமாக மாறுதல்கள் - ஜாதிக்குறியீடு / ஜாதி வேறுபாடு நீக்கம் போன்றவை.
அமெரிக்க நாட்டுச் சட்டம்
வேறுபாட்டு விதிமுறைகள் குறித்து அமெரிக்க நாட்டுச் சட்டம் என்ன சொல்கிறது என்பதை தெளிவாகக் கண்டறிவதில் பல சமூக ஆர்வலர்களும், தொழிலாளர் கூட்டமைப்புகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. ஜாதிப் பாகுபாட்டை பணி நியமனங்களின் போது தவிர்க்கும்படி எல்லா தொழில்நுட்ப நிறுவனங்களும் வற்புறுத்தப்பட்டு வருகின்றன.
இருப்பினும், முழுமாற்றம் ஏற்படவில்லை என்கிறது "ராய்டர்ஸ்" ஊடக நிறுவனம். ஆயிரக்கணக்கான இந்தியர்கள் அமெரிக்க நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் நிலையில் சில நிறுவனங்கள் மட்டும்தான் பணிநியமன விதிகளைத் தளர்த்தி வருகின்றன என்பது "ராய்டர்ஸ்" வழங்கும் தகவல்.
சட்டமே தெளிவாக இல்லாததுதான்....
"சட்டமே தெளிவாக இல்லாததுதான் குழப்பத்துக்குக் காரணம்" என்கிறார் தென் கலிஃபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியரும், சட்ட வல்லுநருமான கெவின் பிரவுன் (Kevin Brown) என்பவர். ஜாதிகள் சார்ந்த பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து வரும் அறிஞர் இவர். பல நிறுவனங்களில் நியமனக் கோட்பாடுகள் நிரந்தரமாக ஒருவிதமாக இருப்பதில்லை "ஜாதி வேறுபாடு சட்டப்படி தடுக்கப்படுமா என்பதை உறுதியாக பலரால் கூறமுடியவில்லை. எனவே, பல பிரபலமான தொழில்நுட்ப நிறுவனங்கள் தெளிவாகவும் உறுதியாகவும் முடிவெடுக்க முடியாமல் திணறி வருகின்றன" என்கிறார் பேராசிரியர் கெவின்.
"பணி நியமனங்களின்போது ஜாதி பற்றிய குறிப்பு களை அடியோடு நீக்கும்படி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே எங்கள் நிருவாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு விட்டோம்" என்கிறார்கள் ‘Apple’ நிறுவனத்தினர். "எந்தப் பணியாளருக்கும் ஜாதி வேறுபாட்டால் இடையூறு ஏற்படக்கூடாது என்பதில் நாங்கள் கண்டிப்பாக இருக்கிறோம். எங்கள் நிறுவனத்தில் சமத்துவம் பாதிக்கப்படாது. பணியாளர்களின் பயிற்சிக் காலத்தில்கூட ஜாதி சார்ந்த குறிப்புகளும் விவரங்களும் தவிர்க்கப்படுகின்றன" என்கிறார்கள் ‘Apple’ நிறுவன உயர்மட்ட அதிகாரிகள்.
கோட்பாடுகள் மீறப்படுவதில்லை
"அனைத்தையும் உள்ளடக்கிய எங்கள் நிறுவன விதிமுறைகள் எங்கள் பணியாளர்கள் அனைவருக்கும் புரியக் கூடிய வகையில் உள்ளன. உலகம் முழுவதும் எங்கள் நிறுவனம் புகழ் பெற்று விளங்குவது எங்களுக்குப் பெருமை. எங்கள் சிறந்த கோட்பாடுகள் மீறப்படுவதில்லை; மாற்றப்படுவதில்லை. எங்கள் நிறுவனம் அடைந்துள்ள புகழே இதற்கெல்லாம் சாட்சி" என்கின்றனர் ‘Apple’ நிறுவனத்தினர்.
IBM (அய்.பி.எம்) நிறுவனமும் ஜாதி வேறுபாட்டை அறவே நீக்கிவிட்டதாகத் தெரிவித்துள்ளது. CISCO SYSTEMS விவகாரம் ஏற்படுத்திய சலசலப்பால் இவர்களும் பணி நியமனங் களின்போது ஜாதி சார்ந்த குறிப்புகளைத் தவிர்க்க முடிவு செய்து விட்டனர். இருப்பினும் IBM நிறுவனத்திற்காக இந்தியாவில் பணிபுரியும் நிருவாகிகள் பற்றிய விவரங்களிலிருந்து ஜாதி சார்ந்த குறிப்புகள் இன்னும் நீக்கப்படவில்லை என்பதையும் அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். அதிலும் மாற்றம் ஏற்பட வேண்டும் - தாமதமின்றி.
ஜாதி வேறுபாட்டையும் தவிர்ப்போம்
"ஜாதி வேறுபாட்டை நாங்களும் எதிர்க்கிறோம், தவிர்க்கிறோம்" என்கிறார்கள் அமேஸான், டெல், ஃபேஸ்புக், மைக்ரோசாஃப்ட், கூகுள் ஆகிய பிரபல நிறுவனத்தினர். "மரபு, குடியுரிமை போன்ற விவரங்களைத் தவிர்ப்பது போலவே ஜாதி வேறுபாட்டையும் பணிநியமனங்களில் இனிமேல் தவிர்ப்போம் என்று உறுதியளித்துள்ளனர் - ஃபேஸ்புக்கின் உரிமையாளர்களான META நிருவாகிகள்.
உலகப் புகழ்பெற்ற ஊடக அமைப்பு அமெரிக் காவில் இயங்கிவரும் பிரபல தொழில்நுட்ப நிறுவனங் களுக்கெல்லாம் நேரில் சென்று, அவர்களுடைய பணி நியமனக் கோட்பாடுகளைப் பரிசீலித்து வருகிறதாம். எல்லா நிறுவனங்களும் Reuters அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு அளித்து தாங்கள் செய்துள்ள மாற்றங்களைக் காண்பித்து வருகின்றனவாம்.
ஜாதி வேறுபாடுகள் சட்ட விரோதமானவை என்று எழுபது ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் அறிவிக்கப்பட்டிருந்தாலும், ஜாதிப் பாகுபாடுகள் இன்றும் நீடித்து வருகின்றன. அதிக வருமானம் தரக்கூடிய உயர்ந்த வேலைவாய்ப்புகள் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு மறுக்கப்படும் நிலை இன்னும் மாறவேயில்லை.
உயர்ந்த வேலை வாய்ப்புகளில்....
ஜாதி சார்ந்த படிநிலை அமைப்பு குறித்த விவாதங்கள் இந்தியாவிலும் அயல்நாடுகளிலும் நடந்து வருகின்றன. ஜாதிப் பாகுபாடுகள் இப்பொழுதெல்லாம் அதிகமாக இல்லையே என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள். மதப் பிரச்சினைகளுடன் ஜாதி சார்ந்த பிரச்சினைகளும் இரண்டறக் கலந்து, எல்லாமே முடிவற்ற தர்க்கமாக மாறியுள்ளது என்கிறார்கள் பல அறிஞர்கள்.
தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த பல மாணவர்களுக்கு இந்திய அரசாங்கத்தின் ஒதுக்கீட்டு முறை நல்ல பலனை அளித்துள்ளது. அண்மைக் காலத்தில் ஏராளமான இந்திய மாணவர்கள் மேற்கத்திய நாடுகளில், தொழில்நுட்பம் சார்ந்த (I.T.) நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். பிரபலமான இந்தியப் பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி வழங்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு அயல் நாடுகளில் வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன.
அயல் நாட்டிலும் விட்டபாடில்லை!
அமெரிக்க தொழில்நுட்ப (அய்.டி) நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் பன்னிரண்டு 'தலித்' வகுப்பினரை அதிகாரிகள் அணுகி விசாரித்தபோது, "ஜாதி வேறுபாட்டுக் கொடுமை எங்களை அயல்நாட்டிலும் விட்டபாடில்லை!" - என்று வேதனையோடு கூறினார்களாம். பன்னிரண்டு ஊழியர்களும், "பெயருக்கு முன்னால் நாங்கள் போடும் இனிஷியல்களை விலாவாரியாக விளக்கச் சொல்கிறார்கள். வட்டம், மாவட்டம், மண்டலம், பூர்விகம், மதம் சார்ந்த பழக்க வழக்கங்கள், உணவுப் பழக்கம் இவற்றையெல்லாம் கேட்டு, துருவித் துருவி ஆராய்ந்த பிறகே வேலைவாய்ப்பு" என்று புலம்பினராம் பன்னிரண்டு இந்தியர்களும்.
"இப்படிப்பட்ட தகவல் சேகரிப்புகளின் விளைவு? பல ஊழியர்கள் முன்னுரிமை பெற்றுவிட்டனர். பலருக்குப் பதவி உயர்வுகளும் பல சலுகைகளும் வழங்கப்பட்டு நாங்கள் புறக்கணிக்கப்பட்டு வருகிறோம்" என்று REUTERS அதிகாரியிடம் கூறியுள்ளனர் - பாதிக்கப்பட்ட இந்தியப் பணியாளர்கள். அன்றாட நிருவாகப் பணிகளிலும், நிகழ்வுகளிலும் கூட அவர்கள் ஒதுக்கப்பட்டு வருகிறார்கள் என்கிறது REUTERS. - மாற்றங்கள் முழுமையடையவில்லை என்றே அவர்களுக்கும் தோன்றுகிறது.
ஊழியர்களும் அச்சத்துடன்
இந்தியப் பணியாளர்களின் குற்றச்சாட்டுகள் குறித்து REUTERS நிறுவனத்தால் நேரடி நடவடிக்கையில் இறங்க முடியவில்லை. காரணம்? தங்கள் பெயர்களை வெளியிட வேண்டாம் என்று பன்னிரண்டு ஊழியர்களும் அச்சத்துடன் கேட்டுக்கொண்டதுதான் காரணம்.
"வேலை பறிபோய்விடுமே என்று அவர்கள் பயந்ததால் நாங்களும் அத்துடன் வேறு வழியின்றி விட்டுவிட்டோம் - என்கிறார்கள் REUTERS அதிகாரிகள். ஜாதி வேறுபாட்டுக் கொடுமைகளைப் பொறுக்க முடி யாமல் ஏற்கெனவே இந்தியப் பணியாளர்கள் இருவர் வேலையை உதறிவிட்டு நாடு திரும்பிவிட்டதாகவும் அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்ததாம். "எனவே, அந்தப் பன்னிரண்டு ஊழியர்களும் வாய்திறக்கவே பயந்ததில் வியப்பேதுமில்லை என்கிறார்கள் REUTERS அதிகாரிகள்.
ஜாதி வேறுபாட்டுக் கொடுமை..
"ஜாதி வேறுபாட்டுக் கொடுமை அமெரிக்க மாகாணங்களில் பெருமளவில் இன்றும் நிலவி வருகிறது" என்கிறார், பொறியாளர் மயூரிராஜா என்பவர். கூகுள் நிறுவனத்தில் பணிபுரிபவர் இவர். கூகுள் நிறுவனத்தின் தலைமை அமைப்பான Alphabet Workers Union (AWU) என்னும் தொழிலாளர் கூட்டமைப்பிலும் உறுப்பினராக உள்ளவர் இவர். 'தலித்' வகுப்பைச் சார்ந்த ஊழியர்களுக்கு இலவசமாகச் சட்ட ஆலோசனை வழங்கியும் உதவி வருகிறதாம் AWU என்னும் கூட்டமைப்பு.
பணிநியமன விதிமுறைகளில் ஜாதி சார்ந்த தகவல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை 1600 கூகுள் பணியாளர்கள் உலகம் முழுவதும் உள்ள Google கிளைகளுக்கு அனுப்பியுள்ளனர். அந்தக் கோரிக்கையைப் படித்துப் பார்த்த REUTERS அதிகாரிகள், அதனை அப்படியே தலைமை நிருவாகி சுந்தர் பிச்சைக்கு மின் அஞ்சல் மூலமாக அனுப்பி வைத்துள்ளனர். ஜூலை மாதம் அனுப்பப்பட்டதை, கடந்த வாரம் மறுபடியும் சுந்தர் பிச்சைக்கு அனுப்பியுள்ளனர் - அவரிடமிருந்து பதில் எதுவும் வராததால்.
விவாதிக்க மறுத்து விட்டார்களாம்!
"பிறந்த நாடு, மரபு மற்றும் இனம் சார்ந்த வேறுபாடுகளுக்குள்ளேயே ஜாதி வேறுபாட்டு அம்சமும் சேர்ந்துள்ளது. எனவே, தனியாக விதிமுறைகளிலிருந்து எதை நீக்குவது?" என்று கூகுள் நிறுவனம் கேட்டு, REUTER அதிகாரிகளையே குழப்பியுள்ளது. கூகுள் நிறுவனத்தின் தற்போதைய பணிநியமனக் கொள்கைகள் குறித்து REUTER அதிகாரிகள் பல முறை கேட்டும், தெளிவாகவும் விரிவாகவும் விளக்கம் அளிக்கவே இல்லையாம், கூகுள் Google நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகள். இதுபற்றி மேலும் விவாதிக்கவும் மறுத்து விட்டார்களாம் அவர்கள்.
1,65,000க்கும் அதிகமான முழுநேரப் பணியாளர்களைக் கொண்ட ‘Apple’ ’ நிறுவனம் ஏற்படுத்திய அதிரடி மாற்றம் தான் எல்லோராலும் பாராட்டப்படுகிறது. அய்ஃபோன் (I - Phone) தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் இவர்கள், இனிமேல் பணி நியமனங்களில் ஜாதி சார்ந்த தகவல்கள் எதையும் கேட்கப்போவதில்லை என்று உறுதியாகத் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே பதினெட்டு சங்கதிகள் இவர்களுடைய "தவிர்க்கப்பட வேண்டியவை" பட்டியலில் உள்ளன. இது 19ஆவது இணைப்பு.
தவிர்ப்போம் என உறுதியளித்துள்ளன
பல நிறுவனங்கள் தங்கள் பழைய விதிமுறைகளை மாற்றியமைப்பதில் தயக்கம் காட்டுகின்றன என்கிறார்கள் சில பிரபல வழக்குரைஞர்கள்; "சட்டப்படி அமைக்கப்பட்ட கோட்பாடுகளில் மாறுதல்கள் சரியல்ல என்கின்றனவாம் சில நிறுவனங்கள்.
இந்தியர்களை அயல்நாட்டுக் கிளைகளில் பணிபுரிய நியமிக்கும்போது, இனிவரும் நாள்களில் ஜாதி சார்ந்த தகவலைத் தவிர்ப்போம் என்று Amazon மற்றும் Dell நிறுவனங்கள் உறுதியளித்துள்ளன.
CISCO SYSTEM வழக்கு விவகாரத்திற்குப் பிறகே கோட்பாடுகளிலும் விதிமுறைகளிலும் மாற்றம் செய்ததாகவும், இனிமேல் ஜாதி வேறுபாடு பார்க்கப் போவதில்லை என்றும் Dell நிறுவனம் கூறியுள்ளது.
நிறுவனங்களுக்குப் பயிற்சி...
Emtrain (எம்ட்ரெய்ன்) என்னும் அமெரிக்க நிறுவனம், பாரபட்சமான செயல்பாடுகளைத் தவிர்க்க ஏறத்தாழ 550 நிறுவனங்களுக்குப் பயிற்சியளித்து வருகிறதாம். இதை ‘anti-bias training’ என்கிறார்Emtrain அமைப்பின் தலைமை நிருவாகி ஜெனைன் யான்ஸி (Janine Yancey) என்பவர்.
"தேவையற்ற விதிமுறைகளாலும் தகவல் சேகரிப்புகளாலும் பணியாளர்களை இழந்துவிட எந்த நிறுவனமும் விரும்பாது. பணியாளர்களின் உற்சாகமின்மையால் உற்பத்தி பாதிக்கப்படும். ஜாதிப் பாகுபாட்டால் ஏற்படக்கூடிய விளைவுகள் தொழில் வளர்ச்சியைப் பாதிக்கும். எனவே, நிறுவனங்கள் அதைத் தவிர்க்கவே விரும்பும்" என்கிறார் ஜெனைன் யான்ஸி. மனிதவள மேம்பாடு சார்ந்த புகார்களும் ஜாதி வேறு பாட்டு விவகாரங்களால் வரக்கூடும் என்கிறார் அவர்.
சமூகநீதிக்காகப்போராடுபவர்களுக்கே வெற்றி!
தென் கரோலினாவைச் சேர்ந்த சட்ட வல்லுநர் பிரவுன் (Brown) - "இந்தப் பிரச்சினைக்கு நீதிமன்றங்கள் மூலமாகத்தான் சரியான தீர்வு காண முடியும். இன்று வரை இந்த ஜாதி வேறுபாட்டுப் பிரச்சினையும், தகவல் சேகரிப்புப் பிரச்சினையும் தீர்வடையாமலேயேதான் உள்ளன" என்கிறார்.
CISCO SYSTEMS நிறுவனத்தில் பாதிக்கப்பட்டிருந்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த அந்தப் பொறியாளருக்கு நீதி கிடைக்க தொடரப்பட்ட வழக்கால், அனைத்து அமெரிக்க அய்.டி. நிறுவனங்களிலும் அசாதாரணச் சலசலப்பு ஏற்பட்டுவிட்டது. காலப்போக்கில் வெற்றி சமூகநீதிக்காகப் போராடுபவர்களுக்கே!
(ஆதாரம்: பாரேஷ் தவே, கனிஷ்காசிங், சுதர்ஷன் வர்தான் - ஆகிய இதழியலாளர்கள் ஆகஸ்ட் 15 - 2022 அன்று மின்னஞ்சல் மூலம் கிடைத்த செய்திக் குறிப்பு).
No comments:
Post a Comment