தமிழ்நாட்டில் 71 அரசு அய்டிஅய்-களில் புதிதாக `தொழில்நுட்ப மய்யம் 4.0' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 15, 2022

தமிழ்நாட்டில் 71 அரசு அய்டிஅய்-களில் புதிதாக `தொழில்நுட்ப மய்யம் 4.0'

விருதுநகர்,ஆக.15- தமிழ்நாட்டில் உள்ள 91 அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களில் (அய்டிஅய்) முதல் கட்டமாக 71-இல் டாடா நிறுவனத்துடன் இணைந்து `தொழில்நுட்ப மய்யம் 4.0' தொடங்கப்பட உள்ளது.

இதற்காக ரூ.2,877.43 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், 87.5 சதவீதம் டாடா நிறுவனம், 12.5 சதவீதம் தமிழ்நாடு அரசின் பங்களிப்பாகும். மேலும், 71 அரசு அய்டிஅய்-களிலும் தலா ரூ.3.73 கோடியில் 10,500 சதுரஅடி பரப்பில் புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது.

இதுகுறித்து அரசு அய்டிஅய் அலுவலர்கள் கூறிய தாவது:  தேர்ந்தெடுக்கப்பட்ட 71 அரசு அய்டிஅய்-களுக்கும் இயந்திரங்கள், பயிற்சிக் கருவிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளுக்காக தலா ரூ.31 கோடி வீதம், மொத்தம்ரூ.2,201 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் கட்டுமானங்கள் உள்ளிட்டவற்றுக்காக ரூ.2,862.01 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்துக்காக 218 புதியபணியிடங்களும், 

39 ஒப்பந்தப்பணியிடங்களும் தோற்றுவிக்கப்பட்டு, அவர்களது ஊதியம் உள்ளிட்ட செலவுகளுக்காக ரூ.15.42 கோடி என மொத்தம் ரூ.2,877.43 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. இப்புதிய மய்யத்தில் தொழில்நுட்பக் கருவிகள் பயன்பாடு, ரோபோ தொழில்நுட்பம், பெயின்டிங் தொழில்நுட்பம், தானியங்கி தொழிற்சாலைகளில் கணினி வழி பயன்பாடு, மின் வாகனம், இணையதள கருவிகள், நவீன உற்பத்தி முறைகள், கணினி வழி வடிவமைப்பு, நவீன குழாய் அமைப்பு போன்ற பயிற்சிகள் நடத்தப்பட உள்ளன.

இந்த பயிற்சியில் அய்டிஅய் படித்தவர்கள் மட்டு மின்றி, கலை, அறிவியில் கல்லூரிகள் மற்றும் 

பொறியியல் பட்டம் பெற்றவர்களும், பட்டயப் படிப்புப் படித்தவர்களும் சேரலாம்.

விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை அரசு அய்டிஅய்-களில் இப்பயிற்சி மய்யம் தொடங்கப்பட உள்ளது. ஓரிரு நாட்களில் புதிய கட்டடங்களுக்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற உள்ளது.  -இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


No comments:

Post a Comment