திராவிடர் கழகத்தின் சார்பில் அடுக்கடுக்கான நிகழ்ச்சிகள் செப்டம்பர் 6 ஆம் தேதி 'விடுதலை' சந்தா வழங்கும் விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 24, 2022

திராவிடர் கழகத்தின் சார்பில் அடுக்கடுக்கான நிகழ்ச்சிகள் செப்டம்பர் 6 ஆம் தேதி 'விடுதலை' சந்தா வழங்கும் விழா

திராவிடர் கழகத்தின் சார்பில் அடுக்கடுக்கான, அலை அலையான நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

ஆகஸ்டு 27 இல் 60 ஆண்டு 'விடுதலை' ஆசிரியருக்குப் பாராட்டு விழா!

88 ஆம் ஆண்டில் ஏறுநடைபோடும் - தந்தை பெரியார் தந்த அறிவுக் கொடையாம் - திராவிடர்தம் போர் வாளாம் ‘விடுதலை' வீறுநடைபோடுகிறது.

இந்த 88  ஆண்டில் 60 ஆண்டு ‘விடுதலை' ஆசிரியர் என்ற வரலாறு படைத்தவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள்.

உலக வரலாற்றில் ஓர் ஏட்டுக்குத் தொடர்ந்து 60 ஆண்டுகாலம் ஆசிரியராக இருந்தவர் நமது ஆசிரியர் மட்டுமே!

தமிழ்நாட்டில் ஆசிரியர் என்றாலே, அவர் ‘விடுதலை' ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தான்.

அதனைப் போற்றும் வகையில் வரும் 27.8.2022 சனியன்று மாலை, சென்னை பெரியார் திடலில் பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

விழாவில் அனைவரையும்  ‘தி மாடர்ன் ரேசன லிஸ்ட்’ பொறுப்பாசிரியர் வீ.குமரேசன் வரவேற்கிறார்.

விடுதலை நாளிதழ் நிருவாக ஆசிரியர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் நடைபெறும் விழாவில், ‘ஜனசக்தி' ஆசிரியர் தோழர் கே.சுப்பராயன், மூத்த ‘விடுதலை' வாசகர், திமுக மேனாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம், ‘ஃபரண்ட் லைன்' மேனாள் ஆசிரியர் மூத்த பத்திரிகையாளர் ஆர்.விஜய்சங்கர், ‘நக்கீரன்' ஆசிரியர் ‘நக்கீரன்' கோபால், ‘முரசொலி' மற்றும் ‘கலைஞர் தொலைக்காட்சி' தலைமை செய்தி ஆசிரியர் எழுத்தாளர் ப.திருமாவேலன், ‘தீக்கதிர்' ஆசிரியர் தோழர் மதுக்கூர் இராமலிங்கம், ‘புதிய குரல்' எழுத்தாளர் ஓவியா ஆகியோர் ‘பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் பார்வையில் 60 ஆண்டு கால ஆசிரியர் மானமிகு கி.வீரமணி’ என்ற பொதுத் தலைப்பில் உரையாற்றுகின்றனர்.

விழா நிறைவாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஏற்புரை ஆற்றுகிறார்.

விடுதலை மூத்த செய்தியாளர் வே.சிறீதர் நன்றி கூறுகிறார். ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப் புரை வழங்குகிறார்.

88 ஆண்டு ‘விடுதலை’யின் 60 ஆண்டு ஆசிரிய ருக்குப் பாராட்டு விழா- ஆசிரியர் அவர்களுக்கு நன்றிப் பெருவிழாவாக இது நடைபெறுகிறது. 

விழாவில் பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், திராவிடர் கழக,  மகளிரணி, மகளிர் பாசறை, கலை இலக்கிய அணி பொறுப்பாளர்கள், பகுத்தறிவாளர் கழக, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், இளைஞரணி, மாணவர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அணிகளின் பொறுப்பாளர்கள்  பங்கேற்கின்றனர்.

செப்டம்பர் முதல் தேதியன்று 

ஆய்வு கருத்தரங்கம்

‘‘அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை - அண்மையில் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு'' - ஓர் ஆய்வரங்கம் செப்டம்பர் முதல் தேதி மாலை 6.30 மணிக்கு சென்னை பெரியார் திடலில் நடைபெற உள்ளது. திராவிடர் கழக வழக்குரைஞரணி இதனை நடத்துகிறது.

திராவிடர் கழக வழக்குரைஞரணித் தலைவர் 

த.வீரசேகரன் வரவேற்கிறார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி  து.அரிபரந்தாமன், வழக்குரைஞர் சிகரம் செந்தில்நாதன் சிறப்புரை ஆற்றுகின்றனர்.

வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி இணைப்புரை வழங்குகிறார். வழக்குரைஞர் பா.மணியம்மை நன்றி கூறுகிறார்.

செப்டம்பர் 4 இல் திருவாரூரில் 

சனாதன எதிர்ப்பு -திராவிட மாடல் அரசு விளக்க மாநாடு

செப்டம்பர் 4 ஆம் தேதி மாலை திருவாரூர் தெற்கு வீதியில் ‘‘சனாதன எதிர்ப்பு - திராவிட மாடல் அரசு விளக்க மாநாடு'' திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெறும்.

4.9.2022 மாலை 3 மணிக்கு பகுத்தறிவு இசைநிகழ்ச்சி நடைபெறுகிறது. 

திருவாரூர் மாவட்டத் தலைவர் வீ.மோகன் வரவேற்புரையுடன் மாநாடு தொடங்குகிறது. 

மாநாட்டில் சட்டமன்ற உறுப்பினர், திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கே.கலைவாணன், திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், தமிழ்நாடு அரசு தாட்கோ தலைவர், மேனாள் அமைச்சர் உ.மதிவாணன், திருவாரூர் நகர திமுக செயலாளர் வாரை எஸ்.பிரகாஷ், எம்.சி., நாகை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன், நாகை மாவட்ட செயலாளர் பூபேஷ் குப்தா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இந்திய தேசிய காங்கிரசு கட்சி தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி,  இந்திய மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் டாக்டர் தொல்.திருமாவளவன், மதிமுக அரசியல் ஆய்வுமய்ய செயலாளர்மு.செந்திலதிபன் ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர்.

மாநாட்டில் திராவிடர் கழக,  மகளிரணி, மகளிர் பாசறை, கலை இலக்கிய அணி பொறுப்பாளர்கள், பகுத்தறிவாளர் கழக, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், இளைஞரணி, மாணவர்கழகம் உள்ளிட்ட பல்வேறு அணிகளின் பொறுப்பாளர்கள்  பங்கேற்கின்றனர்.

திமுக, காங்கிரசு, சிபிஅய், சிபிஎம், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

செப்டம்பர் 6 ஆம் தேதி 

'விடுதலை' சந்தா வழங்கும் விழா

88 ஆண்டு ‘விடுதலை'யில் 60 ஆண்டு ஆசிரிய ராகப் பணியாற்றி சாதனை படைத்த ஆசிரியர் 

கி.வீரமணி அவர்களுக்கு 60 ஆயிரம் சந்தாக்கள் வழங் கும் விழா செப்டம்பர் 6 ஆம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெறும். அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.

பெருந்திரளாகக் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்! பங்கேற்பீர்!!

No comments:

Post a Comment