குன்றத்தூர் ஒன்றியத்தில் தொல்லியல் ஆய்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 5, 2022

குன்றத்தூர் ஒன்றியத்தில் தொல்லியல் ஆய்வு

சென்னை, ஜூலை 5- காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் வடக்குப்பட்டு ஊராட்சி நத்தமேடு பகுதியில் 3 மாதங்களுக்கு முன்பு 7 அடி உயரத்தில் சிலை ஒன்று மண்ணில் பாதி புதைந்த நிலையில் இருப்பதை பார்த்த அந்த பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி மேத்தா வசந்தகுமாரிடம் தெரிவித்தனர். 

இது குறித்து அறிந்த தொல்லியல் துறையினர் அந்த பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அங்கு 3 தொல்லியல் மேடுகள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது. அங்கு கிடந்த பானை ஓடு மற்றும் கற்கள் கி.மு. 300 முதல் கி.பி 300ஆம் ஆண்டு வாழ்ந்த மக்கள் பயன்படுத்தியதும் தெரியவந்தது. 

இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு மேற்கொள்ள ஒன்றிய  தொல்லியல் துறையினர் திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில் அந்த பகுதியில் அகழ் வாய்வுகள் மேற்கொள்ள காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத் திடம் இருந்து தொல்லியல் துறைக்கு அனுமதி கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து வடக்குப்பட்டு கிராமத்தில் உள்ள நத்தமேடு பகுதியில் அகழாய்வுப் பணி தொடங்கப்பட்டது. சென்னை வட்டார தொல்லியல் துறை கண்காணிப்பாளர் காளிமுத்து தலைமை தாங்கி அகழாய்வு பணியை தொடங்கி வைத்தார். தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன், தொல்லியல் துறை ஆய்வாளர் ரமேஷ், வெற்றிச்செல்வி, உள்பட பலர் கலந்து கொண்டனர். 

அகழாய்வு குறித்து தொல்லியல் துறை கண்காணிப் பாளர் காளிமுத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வடக்குப்பட்டு நத்தமேடு பகுதியில் வரலாற்று சிறப்புமிக்க தொல்லியல் மேடு உள்ளது. இங்கு 30 மீட்டர் நீளம், 30 மீட்டர் அகலம் என்ற அளவில் அகழாய்வு செய்ய பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த அகழாய்வு பணி 3 மாதங்கள் வரை நடைபெறும். அகழாய்வின் போதுதான் என்னென்ன பொருட்கள் கிடைக்கும் என்பது தெரிய வரும். கிடைக்க பெறும் பொருட்கள் தடயங்களையடுத்து பணிகள் தொடர்ந்து நீடிப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்று தொல்லியல் துறை கண்காணிப் பாளர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment