சென்னை, ஜூலை 8 தமிழ்நாட்டிலேயே சென்னையில் தினசரி கரோனா பாதிப்பு மிக அதிக அளவில் இருப்பதால், மக்கள் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்குவதில் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் ஆண்கள் 1,563, பெண்கள் 1,202 என மொத்தம் 2,765 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 1011 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 93,599 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 34 லட்சத்து 37,193 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 2,103 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். நேற்று நோய்த்தொற்று பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார். தற்போது மாநிலம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டோர் உள்பட சிகிச்சைப் பெற்று வருவோரின் எண்ணிக்கை 18,378 ஆக உள்ளது.
உயிரிழந்தவர் விபரம்: திருவாரூரைச் சேர்ந்த 80 வயதான ஆண் ஒருவருக்கு கடந்த 24ஆம் தேதி கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. நீரிழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவர், 25ஆம் தேதி திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு காய்ச்சல், இருமல், சுவாசக்கோளாறு, உடல் வலி உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தன. இந்நிலையில், கரோனா தொற்று, நுரையீரல் பிரச்சினை, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் காரணமாக உயிரிழந்துவிட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு 2,743 ஆகவும், சென்னையில் 1062 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்பு தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. கடந்த இருநாட்களில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment