* அறிவியலால் கண்டுபிடிக்க முடியாததை ஆத்மார்த்தம் வழியே
கண்டுபிடிக்கிறது என்கிறார் ஆர்.எஸ்.எஸ். தலைவர்!
* விஞ்ஞான மனப்பான்மையை வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனின்
கடமை என்ற அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான கருத்தல்லவா?
அறிவியல் கண்டுபிடிக்க முடியாததை எல்லாம் ஆத்மார்த்தம் வழிதான் கண்டுபிடிப்பதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் ஒரு பல்கலைக் கழகத்தில் பேசியுள்ளாரே- &- அப்படியானால் பிரதமர் மோடி பயன்படுத்தும் விஞ்ஞான கருவிகளை எல்லாம் கண்டுபிடித்தது ரிஷிகள், முனிவர்களா? என்ற அறிவார்ந்த கேள்வியை எழுப்பியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்
கி. வீரமணி அவர்கள்.
அறிக்கை வருமாறு:
கருநாடக மாநிலத்தில் உள்ள சத்திய சாய்பாபா பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழா உரையாற்றிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்தின் கருத்துக்கள் உண்மைக்கு மாறானவைகளாகவும், இளைஞர்கள், மாணவர்களிடையே திட்டமிட்ட மூடநம்பிக்கை மதவாதக் கருத்துக்களைப் பரப்பும் நோக்கத்தை கொண்டவைகளாகவும் உள்ளன.
நம் நாடு எல்லாத் துறைகளிலும் வளர்ந்தோங்கி வருகிறதாம்!
அறிவியல் கண்டுபிடிக்காததை
ஆத்மார்த்தம் கண்டுபிடிக்குமா?
அறிவியலால் கண்டுபிடிக்க முடியாதவையெல்லாம் ஆத்மார்த்தத்தின் வழியே (Spritualway) கண்டு பிடிக்கப்படுகிறதாம்!
அறிவியல் எந்த விடையும் கொடுக்காமல் ஆயிரம் ஆண்டுகளாக தோற்றுவிட்டதாம்!
பல்வேறு மொழி, இனம், கலாச்சாரங்களால் சண்டை சச்சரவுகள் (Contests) தான் உண்டாயிற்றாம்!
இப்படி திருவாய் மலர்ந்துள்ளார் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர்.
அரசமைப்புச் சட்டத்தில் கூறப்படும் (51A-h) விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும், அது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்பதை ஏற்காதவர்தான் ஆர்.எஸ்.எஸ். தலைவரா?
ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் இப்போதெல்லாம் பெரிதும் இளைஞர்கள், மாணவர்கள் மனதில் காவிச் சாயமேற்ற திட்டமிட்ட பிரச்சாரத்தைச் செய்து வருகின்றனர்!
தமிழக ஆளுநர் போட்டி அரசு நடத்துகிறாரா?
அதே பாணியில் - அதே வேலையை தமிழ்நாட்டு மக்களின் வரிப் பணத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டு, தனது அதிகார வரம்பை மீறி, மாநில அரசின் கல்வி அமைச்சர்களிடம்கூடக் கலக்காமல், பட்டமளிப்பு விழாவை ஒரு போட்டி அரசாங்கம்போல் நடத்தி வருகிறார் தமிழ்நாட்டின் அடாவடி ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள்!
ஆனால் அறிவியலுக்கு முன் மதம் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்டுக் கொண்ட, கொள்ளும் - வரலாறு நம் கண்ணெதிரே பல சாட்சியங்களைக் கொண்டு வந்து நிறுத்திக் கொண்டே உள்ளது!
மேலே உள்ள உலகத்தோடு (External World) ஒருங்கிணைப்பை அறிவியலால் செய்ய முடிய வில்லையாம்!
அதை "ஆத்மா - ஆத்மார்த்தம்" தான் செய்து கொண்டுள்ளதாம்!
கடவுள் கற்பனைக்கு
மூத்த அண்ணன்தான் ஆத்மா?
என்னே அபத்தவாதம்!
"ஆத்மா" என்பது கடவுள் கற்பனைக்கு மூத்த அண்ணன் என்பது பகுத்தறிவுவாதிகளாலும், அறிவியலாலும் - அவர்கள் எழுப்பும் அறிவார்ந்த கேள்விகளாலும் உடைபடும் புரட்டாக இருந்தபோதிலும், ஒரே பொய்யை மீண்டும் மீண்டும் திரும்பத் திரும்பச் சொல்வதால் அதை மெய்யாக்கி விடலாம் என்று இந்த "கோயபல்சின் குருநாதர்கள்" நினைக்கிறார்கள்!
ஸ்டீபன் ஹாக்கிங், ரிச்சர்டு டாக்கின்ஸ் போன்ற விஞ்ஞானிகள் மட்டுமல்ல, நம் நாட்டிலிருந்து, அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச் சென்று, அறிவியல் ஆய்வில் சாதனை படைத்த நோபல் பரிசு பெற்ற சந்திரசேகர், தற்போது வாழும் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் போன்றவர்கள் இவரது - ஆர்.எஸ்.எஸ். தலைவரது கருத்தை ஏற்பார்களா?
அவர்களுக்கு ஆத்மா, அறிவியலில் விடை இல்லை என்று எளிதில் கூறி விடுவாரா?
அறிவியலில் அனுமானத்திற்கு இடம் இல்லை
அறிவியல் என்பது ஆராய்ச்சிக்கு மட்டும் இடம் தந்து அனுமானத்திற்கு இடந்தரா; போதிய தரவுகள், சான்றுகளுடன் நிரூபித்துக் காட்டும் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட அறிவுத் தேடல் - அதற்கு முற்றுப்புள்ளி இல்லை.
புதுப்புது பிரபஞ்சங்கள் அண்டங்களைக்கூட (Universe) கண்டறிய தொடர்ந்து மனிதனின் அறிவு மேலோங்கிச் செல்லுகிறது!
பிரதமர் பயன்படுத்தும் கருவிகளைக் கண்டுபிடித்த முனிவர்கள் யார்?
ஏன், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் பிரிவான பா.ஜ.க. மோடி ஆட்சி பயன்படுத்துகிறதே, அந்த செயற்கை அறிவு (Artificial Intelligence) உபாயங்கள், கருவிகள் (ஆளுமையில்) - அவைகளை எந்த முனிபுங்கவர் கண்டுபிடித்தார்?
வேதங்களில்கூட விஞ்ஞானத்தைத் தேடிக் கண்டுபிடித்து வியாக்யானம் செய்வதே மதம் விஞ்ஞானத்திற்கு முன் மண்டியிட்டுள்ளது என்பதற்குத் தானே உரிய அடையாளம்?
இன்றும்கூட அறிவியலின் கண்டுபிடிப்பான மின்னணு தொழில் நுட்பம், இணையதளம், வாட்ஸ்அப், யூடியூப் பதிவுகள் மூலம்தானே மதக் கருத்துக்களுக்குப் புத்துயிர் ஊட்டி, தொலைக்காட்சிகள் மூலம் மதப் பிரச்சாரம் நடக்கின்றது. நம் நாட்டிலேயே 100 தொலைக்காட்சி அலை வரிசைகள் துவக்கப்பட்டுள்ளனவே! (சங்கரா தொலைக்காட்சி முதல் பல தொலைக்காட்சிகள்). பல மதங்களும் தொலைக்காட்சி வழியே பிரச்சாரம் செய்யும்போது, காவிகளின் ஆன்மிகம், ஆத்திகம் பரவிட அறிவியலைத்தானே நம்பி அதனிடம் சரணாகதி அடைந்துள்ளார்கள்?
செவ்வாய்த் தோஷமும்
செவ்வாய்க் கிரகம் கண்டுபிடிப்பும்
இந்த லட்சணத்தில் தோற்றது அறிவியலா? ஆத்மார்த்த போர்வை போர்த்தி, அறியாமை வியாபாரம் செய்து ஆரியக் கற்பனை மேலாதிக்கத் தினைப் பாதுகாக்க முனையும் முயற்சிகள் ஒரு போதும் வெற்றி பெறாது.
'ஈரேழு பதினான்கு லோகங்களையா' கண்டுபிடிக்க, விண்வெளிப் பயணங்கள் நடைபெறுகின்றன?
'செவ்வாய்தோஷம்' பரப்பும் மூடநம்பிக்கை முகவர்களின் முகமூடியை கழற்றி எறிந்து தானே செவ்வாய்க்கிரகம் சென்று அறிவியல் அடையாளம் காட்டுகிறது!
இதற்குப் பிறகு எவ்வளவு காலத்திற்கு இவர்களின் கோயபல்ஸ் பிரச்சாரம் - அறிவியல் தோற்று, ஆத் மார்த்தம் வெற்றி என்ற அபத்தமான பேச்சு செல்லும்?
அற்றம் காக்கும் கருவி அறிவே!
அறிவு அற்றங் காக்கும் கருவி; அறிவின் எல்லை எது - இன்னமும் அளக்க முடியாதது. அறிந்து கொள்ளுங்கள்; பொய்த் திரை கிழியும் நாள் தொலைவில் இல்லை.
விஞ்ஞானம் ஆதாரபூர்வமானது; கற்பனையோ அனுமானங்களோ அல்ல; அல்லவே அல்ல.
கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
14.7.2022
No comments:
Post a Comment