அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 12, 2022

அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள்

சென்னை,ஜூலை 12  அதிமுகவில் ஒருங் கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப் பாளர் என்ற இரட்டைத் தலைமை ரத்து செய்யப்பட்டு, அதிகாரம் மிக்க பொதுச் செயலாளர் பதவி மீண்டும் உருவாக்கப் பட்டுள்ளது.

பொதுச் செயலாளர் தேர்வை 4 மாதங்களுக்குள் நடத்தி முடிக்கும் வரை, இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்படு கிறார் என்பது உட்பட 16 தீர்மானங்கள் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப் பட்டுள்ளன. அதற்கேற்ப கட்சியின் சட்ட விதிகளில் திருத்தங்கள் செய்யப் பட்டுள்ளன.

அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நேற்று (11.7.2022) நடந்தது. இதில் 16 தீர்மானங்கள் முன் மொழியப்பட்டு பொதுக்குழு உறுப்பினர் களால் நிறைவேற்றப்பட்டது. முதல் 8 தீர்மானங்களை மேனாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும், அடுத்த 8 தீர்மானங் களை மேனாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனும் வாசித்தனர்.

தந்தை பெரியார், அண்ணா, ஜெயலலிதாவுக்கு விரைவில் பாரத ரத்னா விருது வழங்குமாறு ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தப்படுகிறது.

அதிமுகவில் பொதுச் செயலாளர் என்ற அதிகாரம் மிக்க, தெளிவான, வலி மையான அரசியல் தலைமை இல்லாமல், இரட்டைத் தலைமைஏற்பட்ட பிறகு, முடிவுகள் எடுப்பதிலும், செயல்படுத்துவ திலும் தாமதம் ஏற்பட்டது. வலிமையான ஒற்றைத் தலைமை என்பது காலத்தின் கட்டாயம்.

எனவே, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டைத் தலைமை ரத்து செய்யப் படுகிறது. மீண்டும், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் பொதுச் செயலாளர் பதவியை உருவாக்க தீர்மானிக்கப்படுகிறது.

பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுபவர்களுக்கு முறையான தகுதிகளை நிர்ணயிக்க சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்படுகிறது. அதன்படி, பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட, 10 ஆண்டுகள் தொடர்ந்து உறுப்பினராக இருக்க வேண்டும்.

தலைமைப் பொறுப்புகளில் தொடர்ந்து 5 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும். போட்டியிடுபவர் பெயரை 10 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிந்து, 10 மாவட்டச் செயலாளர்கள் வழிமொழிய வேண்டும். துணை பொதுச் செயலாளர்களை பொதுச் செயலாளர் நியமிப்பார்.

பொதுச் செயலாளர் விடுவிக்கப் பட்டாலோ, நீக்கப்பட்டாலோ, செயல் படாத நிலை ஏற்பட்டாலோ, புதிய பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்கும் வரை, பொதுக்குழுவால் இடைக்கால பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்படுவார். அதற்கேற்ப சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்படுகிறது.

தலைமை நிலையச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும், மேனாள்முதலமைச்சருமான பழனி சாமியை, கட்சியின்சட்டவிதிகள் படி, இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்து நியமிக்க, பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்களால் ஏகமன தாக முடிவு செய்து தீர்மானம் நிறை வேற்றப்படுகிறது. கட்சியின் நிர்வாகத்தை நடத்தஅவருக்கு பொதுக்குழு ஒருமன தாக அங்கீகாரம் வழங்குகிறது.

4 மாதத்துக்குள் பொதுச் செயலாளர் தேர்தல்

பொதுச் செயலாளர் தேர்தலை விரைவாக நடத்தி முடிக்க வேண்டியது கட்டாயம். ஜூலை11-ஆம் தேதி (நேற்று) வரை கட்சியின் உறுப்பினர்களாக பதிவேட்டில் உள்ளவர்கள் இத்தேர்தலில் வாக்களிக்க உரிமை உடையவர்கள். அவர்களுக்கு புதிய உறுப்பினர் உரிமை சீட்டு வழங்கப்படும்.

பொதுச் செயலாளர் தேர்தலை 4 மாதங்களுக்குள் நடத்த வேண்டும் என்பதால், தேர்தல் அதிகாரிகளாக மேனாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.

இடைக்கால பொதுச் செயலாளராக பழனிசாமி பொறுப்பேற்று, எம்ஜிஆர், ஜெயலலிதாவழியில் தலைமையேற்று வழிநடத்த தொண்டர்கள் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேகேதாட்டுவில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தடுக்க ஒன்றிய, மாநிலஅரசுகளுக்கு வலியுறுத்தல். நதிநீர் இணைப்பு திட்டத்தை விரைவாக செயல்படுத்த ஒன்றிய  அரசுக்கு அழுத்தம் தருமாறு திமுக அரசுக்கு வலியுறுத்தல்.

இலங்கை தமிழர் நலன் காக்கவும், மறுவாழ்வை மேம்படுத்தவும் ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்தல்.

நூல் விலையேற்றத்தை தடுத்து நிறுத்த ஒன்றிய, மாநில அரசுகளுக்கு வலியுறுத்தல்.

மேற்கண்ட தீர்மானங்கள் முன் மொழியப்பட்டு, பொதுக்குழு உறுப் பினர்களின் ஒப்புதலுடன் நிறைவேற்றப் பட்டன. சட்டவிதிகள் 20, 20-அ மற்றும் 20-அ விதியில் 1 முதல் 13 பிரிவுகள், 20-ஆ, 20-இ, விதி 43, 45 ஆகியவற்றில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment