தமிழ்நாடு, புதுச்சேரியில் 14ஆம் தேதி வரை மழை வானிலை ஆய்வு மய்யம் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 11, 2022

தமிழ்நாடு, புதுச்சேரியில் 14ஆம் தேதி வரை மழை வானிலை ஆய்வு மய்யம் தகவல்

சென்னை, ஜூலை 11 மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் 14ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரம் அடைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ளது. சராசரியாக 90 டிகிரி முதல் 100 டிகிரி  வரையில் வெயில் நீடித்து வருகிறது. இந்நிலையில், மேற்கு திசையில் இருந்து தரைப் பகுதி நோக்கி வீசும் காற்றின் வேகத்தில் மாறுதல் ஏற்பட்டுள்ளதால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் நேற்று (10.7.2022) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்தது.

அதிகபட்சமாக தேவாலாவில் 100 மிமீ மழை பெய்துள்ளது.  இதன் தொடர்ச்சியாக இன்று முதல் 14ஆம் தேதி வரை தமிழ்நாடு புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானபெய்யும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதைஒட்டிய மாவட்டங்கள், காரைக்கால், டெல்டா மாவட்டங்கள் அதை ஒட்டிய ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப் படும்.

மேலும், குமரிக் கடல் பகுதி, மன்னார் வளைகுடா, தென் தமிழ்நாடு கடலோரப் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் 12ஆம் தேதி வரை வீசும். 13ஆம் தேதியில் ஆந்திர கடலோரப் பகுதிகள், அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று  மணிக்கு 55 கிமீ வேகத்திலும் இடையிடையே 65 கிமீ வேகத்திலும் வீசும். அதனால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


No comments:

Post a Comment