சிறை இலக்கியம் படைத்த சிந்தனைச் செல்வர் தோழர் பாலன் (1) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 11, 2022

சிறை இலக்கியம் படைத்த சிந்தனைச் செல்வர் தோழர் பாலன் (1)

தொடர்ந்த சுற்றுப் பயணங்களில் - வழமையான கடமைகளைத் தாண்டி, நேரத்தை- வாழ்வியல் எழுத எண்ணி ஒதுக்கிடும் நேரத்தை - கண்டு பிடிப்பது பெரிய சவாலாக அமைந்து விடுகிறது!

தூக்கத்தைக் குறைத்தால் எழுத முடிய வில்லையே என்ற இந்த ஏக்கத்திலிருந்து விடு படலாம் என்றுகூட இப்போது படித்த - 'தோழர் பாலன்' என்று பலராலும் பாசத்தோடு அழைக்கப் படும் தோழர் கே.பாலதண்டாயுதம் அவர்களது சிறை வாசக் குறிப்புகள் தொகுப் பான "சிறையில் துளிர்த்த சிந்தனை அரும்புகள்"நூலைப் படித்தேன்.

இந்த நூலை சுற்றுப்பயணத்தில் எஸ்மா. ஏ.ஆர்.எஸ். என்ற ஆசிரியைத் தோழர் (ஆலாம் பாளையம் அந்தியூர் வட்டம் - ஈரோடு மாவட்டம்) அளித்தார்.

ஒப்பற்ற கொள்கை வீரனான தோழர் கே. பாலதண்டாயுதம் எதையும் மறைக்காமல் பேசும் பண்புள்ளவர் என்பதை அவர் சென்னையில் இருக்கும்போது சில நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் சென்று  பழகியபோது நேரில் கண்டு வியந்து மகிழ்ந்துள்ளேன்!

அவரது தியாக வாழ்க்கை, கொண்ட கொள்கை லட்சியங்களுக்காகவே தனது வாலிபத்தை சிறைக் கொட்டடியில் கழித்தும், மேலும் உறுதியான எஃகு உள்ளத்தோடு விடுதலை அடைந்து வெளியே வந்த போதும் - மாபெரும் லட்சியப் பீரங்கியாக  வாழ்ந்து - எதிர்பாராத மரணத்தால் நம்மிடமிருந்து பறிக்கப்பட்டவர்!

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 1938இல் போராட்டம் நடத்திய மாணவத் தலைவர் என்று பிரபலமானவர் அவர்.

55 வயது வரை மட்டுமே வாழ்ந்த அவரது வாழ்க்கை, விமான விபத்தால் முடிவுற்ற சோகத்தின் அதிர்ச்சி, இன்று நினைத்தாலும் வேதனையின் வெளிப்பாடுதான்!

பதவிச் சண்டை என்ற மலிந்த அரசியல் சந்தைக் கூச்சல்கள் நிறைந்த பொது வாழ்வுச் சூழலில், தனது வாழ்வையே கொள்கை உலைக் களத்தில் வார்த்தெடுக்கப்பட்ட ஓர் லட்சியப் போர்க் கருவியாக்கி வாழ்ந்தவரின், சிறை வாழ்வுச் சிந்தனைகள் சுருக்க கேப்சூல்களாக இருந்தாலும், அறிவின் வெளிச்சமாக தகத்தாய ஒளி வீச்சாக உள்ளது.

இந்த புத்தகத்தினை வாசிப்பதைவிட கற்க வேண்டியது முக்கியம் - பொது வாழ்வில் உள்ளோ ருக்கு  - என்ற பாடம் இந்நூலைப் படித்தவுடன் நமக்குக் கிடைக்கிறது!

தோழர் ப.பா. ரமணி தொகுத்த இந்த நூல் ஒரு சிறந்த சிறை இலக்கியமாகும்.

அரிய தொகுப்பு - ஓர் அருமையான சிந்தனை முத்துக் கோர்வை இது!

ஒரு பகுதி முன்பு தனி நூல்- இதில் புதிய இணைப்பும் தாங்கி, வெளியீட்டாளர்களான 'இந்திய கலாச்சார நட்புறவுக் கழகம் (ISCUF) கோவை', 'தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கோவை' ஆகியவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

அந்த சிந்தனை அரும்புகளின் அழகுக்கும் - அறிவுக்கும் சில இதோ:

"19.02.1958, புதன்கிழமை

நாளையுடன் ரேடியோவிற்கு எழுதி ஒரு மாத காலமாகிறது;  ஞாபகப்படுத்தி எழுத வேண்டும். 

மன உறுதியை பலப்படுத்த புதிது புதிதான  வாதங்கள் தேவை என்று கூறப்படுகிறது. எனக்கு அவை தினசரி வந்து குவிந்த  வண்ணமிருக்கின்றன. 

சிறு தோணியில் உலகத்தைச் சுற்றிய கேப்டன் ஜான்வாசும் ஒரு மனிதன்தான்; சகாராவில் டஸ்ஸிலி மலையில் 16  மாத காலம் சித்திர வேலை களைப் படம் பிடித்த ஹென்றி லேயுட்டும் மனிதன் தான்; கியூரி தம்பதிகள் ரேடியம் கண்டுபிடிப்ப தற்காகப் பட்டபாடு (சினிமாவில் நான் பார்த்து பிரமித்தேன்) மனிதர்கள் பட்ட பாடுதானே; கிறித்துவ மதத்தைப் பரப்ப வந்த ராபின்சன் தமிழ் இலக்கியத்தைக் கரைத்துக் குடித்தான் என்று பார்க்கும் பொழுது,   எல்லாவற்றிக்கும் உயர்ந்த லட்சியத்தைக் கொண்ட நான், ஜென்ம தண்டனை பெற்று இருக்கும் பொழுது அவர்களைக் காட்டிலும் எத்துணை எத்துணை மடங்கு அதிக ஈடுபாட்டுடன், உழைப்புடன் விளங்க வேண்டும். இது ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய விஷயம்.

இன்னுமொரு கருத்தும் இதை பலப்படுத்திற்று. "வலியைத் தாங்குவது யுத்த வெற்றிக்குச் சமம்" என்று கார்க்கி கூறுகிறார். உடலைக் கிழிக்கிறோம்; அதனால் மனிதனைச் சுற்றிலும் மரக்க வைத்து ஆபரேஷன் செய்யும் பொழுது, கிழிக்கும் சப்தம் கூட கேட்கிறது. உடம்பை ஒன்றும் செய்வதில்லை. மரக்க வைக்காவிடில் அல்லது மயக்க மருந்து கொடுக்காவிடில் பொறுக்க முடியாத வேதனை ஏற்படுகிறது; இது உணர்ச்சி சம்பந்தப்பட்டது. வேதனையை சகித்துப் பழகிவிட்டால், உணர்ச்சியும் மரத்துப் போய்விடுகிறது. 

வேதனையைப் பொறுக்க விரும்பாத நாமே உயிருக்கும், உடலுக்கும் தீமையான காரியங்களை இன்பத்திற்காகச் செய்கிறோம்.

இது மடமை என்பது தெளிவு. இதில் இன் னொன்றும் இருக்கிறது. வேதனையைச் சகிக்கப் பழகப் பழக உயர்ந்த மட்டத்தில், உயர் தரத்தில், நிலையான இன்பம் பெறுகிறோம்.

அளவு கடந்த உழைப்புச் சக்தியைச் செல விட்டவர்களே சமுதாயத்திற்குப் பெரும்பங்கு செலுத்துகின்றனர். நைட்ரஸ் ஆக்சைடு கண்டு பிடித்த பிரீஸ்ட்லி ஆனாலும் சரி, போர்முனையில் வெற்றி கண்ட சுபகோவ் ஆனாலும் சரி, சளைக்காமல் உழைத்தனர்; ஆகவே சளைக்காமல் உழைக்கக் கற்றுக் கொண்டால் அது மிகப் பெரிய சாதனை. அதற்குக் கொட்ட வேண்டிய கண்ணீரையும், செந்நீரையும் தங்கு தடையின்றி கொட்ட வேண்டும்; நிற்க.

ஹைட்ரஜன் குண்டின் பயங்கரத் தன்மையைப் பற்றி எவ்வளவோ எண்ணங்கள் உதித்தன; ஆனால் மக்கள் மனதில் என்ன பிரதிபலிப்பு ஏற்பட் டிருக்கிறது என்பதைப் பற்றி நான் சிந்திக்கவில்லை. அதி அற்புதமான விஞ்ஞான  சாதனை மக்கள் மனதில் மூட நம்பிக்கையைத்தான்  ஏற்படுத்தியிருக் கிறது; கடந்தகால மூடக்கருத்துக்களுக்கு புதிய ஊக்கம் கிடைத்திருக்கிறது. உதாரணம், பிரளயம் வரும் என்று சொன்னது சரியாகப் போயிற்று என்பார்கள் இந்தியாவில்.

இரண்டாவது அம்சம், "மனித ஜாதி அழியாது" என்ற குருட்டு நம்பிக்கைதான் இது வரையிலிருந்தது. ஆனால், சமூக வளர்ச்சியை வரலாற்று ரீதியில் பார்க்கும் பொழுது விசேஷ தன்னம்பிக்கை ஏற்படுகிறது; நெருப்பை மனிதன் கண்டுபிடித்தது மனித நாகரிக வளர்ச்சியில் எவ்வளவு, புரட்சி கரமான மாறுதலை உண்டாக்கிற்று. 'பிரோமோ தியஸ்' போன்ற காவியங்கள்  செய்யப்பட்டன. அன்று "இது நல்லதுக்கு அல்ல, நெருப்பிலேயே மனிதன் அழியப் போகிறான்” என்று பலர் எண்ணியிருப்பார்கள். காலதேச வர்த்தமானப்படி, அணுசக்தி கண்டுபிடிப்பு இன்றைய நிலைக்கு அத்தகையது ஒன்றுதான். 

சிங்காரவேலு, சூர்யநாராயண ராஜூ, ஆறுமுகம், பொன்னு இவர்களை நினைந்து விட்டால் எதுவும் நிகரில்லை துணிச்சல் பிறக்கிறது. 

புதுக்கோட்டை வாழ்க்கையை வெறுக்கத் தூண்டுகிறது.

என் கண்ணில் பாரதிக்கும், கார்க்கிக்கும் ஏதோ ஒப்புமை - என்னவென்று சுட்டிச் சொல்ல முடியவில்லை. தோற்றத்தில் பொன்னுவுக்கும், ஆஸ்ட்ரோவ்ஸ்கிக்கும் ஏதோ ஒரு ஒப்புமை என் மனதில் பட்டுக் கொண்டேயிருக்கிறது. எஸ்.ஆர்.கே.யுக்கும், பி.ஆர்.க்கும் இருப்பதைப் போல. துல்ஜாவுக்கும் பயில்வான் அருணாசலத்திற்கும், உத்தாண்டிக்கும் இருப்பது போல, மழுங்கின உணர்ச்சிகள்தான் என் மனதில் ஏற்படுகிறதே யல்லாமல் திட்டவட்டமான, தீர்க்கமான, குணாதி சயங்கள், அம்சங்கள் என் மனதில் பதியவில்லை. ஆகவே, இப்பொழுது பொன்னுவைப் பற்றி எழுதப் புகுந்தால் மூடுபனியைப் பார்ப்பது போல தெரிகிறது.

இனி பேனாவும் கையும்தான்; கடந்த காலத்தை நினைத்துப் பார்த்து, உயிர்ப்பித்து அவற்றை அழியாது பொக்கிஷமாக்க வேண்டும்.

இனி என் கண்ணில் பட்டது, காதில் கேட்டது  பேனாவிற்குத் தப்பக்கூடாது. தப்பாது, உறுதி இது!

தினசரி பத்திரிகையினை குறிப்புடன்  படிப்பதில் காலதாமதமாகி, பாக்கி விழுந்து விடுகிறது. ஒன்று கருத்தூன்றி வாசிப்பதில்லை; படிக்கும்பொழுது, முக்கியமானதைக் குறிக்கும் பயிற்சி இல்லை. மற்ற, நேரங்கால மாற்றத்துடன் படிக்கும் முறையிலும் மாற்றம் தேவை"

(நாளை வரும்)


No comments:

Post a Comment