இந்த மாதிரி ஆட்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டுமா? என்று தயக்கம் வருகிறது. ஆனால், சில உண்மைகளை பேசாமல் விட்டால், இப்படிப்பட்டவர்கள் ஏதோ தங்களுக்கு கொம்பு முளைத்திருப்பது போல ஆட்டம் போட்டுக் கொண்டே இருப்பார்கள் என்பது மட்டுமல்ல, நம்மவர்களும், ’ஏதோ அவர்கள் கொம்பு முளைத்த விஷேச பிறவிகள் தான்..’ என்று எண்ணத் தலைப்பட்டு விடுவார்கள் என்பதால் எழுதுகிறேன்.
முதலாவதாக நான் என்றுமே என்னை திராவிடன் என்று பிரகடனப்படுத்தி, உருவானவனில்லை.
சாவித்திரி கண்ணனாகிய நான்,என்னை எப்போதும் தன்மானமுள்ள மனிதனாக, சக மனிதர்கள் அனைவரையும் நேசிக்கக் கூடியவனாக உணர்ந்தே வளர்ந்துள்ளேன்.
ஆனால், எப்போது தினமணி வைத்தியநாதன், எஸ் குருமூர்த்தி,சோ ராமசாமி, ரங்கராஜ் பாண்டே,எஸ் வி சேகர் ..., போன்ற அனேக பார்ப்பனர்கள் தங்களை ஆரியனாக அடையாளப் படுத்திக் கொண்டும், நினைவுபடுத்திக் கொண்டுமே இருப்பதை அனுபவத்தில் நன்கு உணரத் தலைப்பட்டேனோ.., அப்போது தொடங்கி,’’அப்படியானால், நான் நிச்சயம் ஆரியனல்லாத இனத்தை சேர்ந்தவன்’’ என்று புரிந்து கொண்டேன்!
ஆரியனல்லாத தென் நாட்டவர் அனைவரும் பொதுத் தன்மையில் திராவிடர் என்றே அடையாளப்படுத்தப் படுகின்றனர்.எனில், நான் திராவிடன் என்ற அடையாளம் பெற்றுவிடுகிறேன்.
நன்று! நான் எவ்வாறு அடையாளப்பட்டாலும், ஒரு போதும் இழிவான காரியங்களை செய்ததுமில்லை, செய்யப் போவதுமில்லை!
’’திரும்பிய திக்கெல்லாம் ஆரிய பவன்கள்! ஏன் திராவிட பவன்கள் இல்லை.இருந்தால்,ஓசியில் சாப்பிட்டு ஓடிவிடுவார்கள் என்பதாலா?’’ என்று தனது டிவிட்டரில் பதிவிட்டிருக்கிறார், நடிகர் எஸ்வி சேகர்.
ஆரிய பவன்களையெல்லாம் எப்பவோ தூக்கிச் சாப்பிட்டுவிட்ட அண்ணாச்சியின் சரவண பவன்கள் தொடங்கி...,முனியாண்டி விலாஸ் வரை அனைத்துமே திராவிட உணவகங்கள் தானே! இப்போதெல்லாம் உங்களவாக்களே இங்கு தானே வந்து கொட்டிக்கிட்டு போறீங்க ..சேகர்!
என்ன ஜாதி,அல்லது இனத்தை அடையாளப்படுத்தி பிழைப்பு நடத்தும் அவசியம் அண்ணாச்சி போன்றவர்களுக்கும், முனியாண்டி விலாஸ் உள்ளிட்டவர்களுக்கும் உங்களவாக்களை போன்று இல்லை. நல்லது தானே!
ஆரிய பவன், அய்யங்கார் பவன், பிராமணாள் கபே, கிருஷ்ணய்யர் கபே, பிராமணாள் கேட்டரிங், பெங்களூர் அய்யங்கார் பேக்கரி, மாமி மெஸ் , பிராமணர்களுக்கு மட்டுமே வீடு வாடகை விடப்படும்... பிராமணர்களுக்கு மட்டுமே வேலை தரப்படும்...., என்றெல்லாம் சதா சர்வ நிலைகளிலும் ஜாதியை தூக்கி உங்களவாக்களைப் போல,மற்றவர்கள் யாரும் திரிவதில்லை!
அதென்ன, திராவிட பவன் என்று போட்டால், ஓசியில் சாப்பிட்டு போய்விடுவார்கள் என்ற பயமா? எனக் கேட்கிறீர்கள்..!
நீங்கள்,திராவிட நாட்டில் தான் ’ஆரிய பவன்’ நடத்துகிறீர்கள் ..திராவிடர்களை நம்பித் தான் ஆரிய பவன்களே உள்ளன! உங்கள் வாய்துடுக்கால் உங்களவாக்கள் பிழைப்பிலேயே மண்ணை அள்ளி போட்டுவிடுவீர்கள் போலிருக்குதே..!
ஓட்டல்கள் மட்டுமா? கோயில்களில் இருக்கும் உங்களவாக்களின் பிழைப்பே, தட்டில் திராவிடர்கள் போடும் காசை நம்பித் தானய்யா உள்ளது...!
வீணாக கொழுப்பெடுத்து,வார்த்தைகளைவிட்டால், இதில் எங்களுக்கு ஒன்றும் நட்டமில்லை சேகர்..!
ஏற்கனவே துடுக்காக பதிவிட்டு, காவல்துறை பாதுகாப்புடன் வலம் வந்தது மறந்துவிட்டதோ!
- சாவித்திரி கண்ணன்
No comments:
Post a Comment