சிந்தியுங்கள்! தோழர்களே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 20, 2022

சிந்தியுங்கள்! தோழர்களே!

10.04.1948 - குடிஅரசிலிருந்து....

நாம் சந்தேகிக்க வேண்டிய அவசியம் இல்லாத அளவுக்குத் தெளிவாக பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் உணர்ச்சி காங்கிரஸ் தியாகிகளுக்குள்ளாகவே தேர்தலில் தலைகாட்டியது என்றாலும், முக்கிய பலன் ஒன்றும் நாம் அடைந்துவிடப் போவதில்லை. இந்த ஆட்கள் நாளைக்குச் சுலபமாக மாறி மறுபடியும் பார்ப்பனர்கள் காலில் விழமாட்டார்கள் என்றும் நம்மால் கருத முடியாது. நாளை விடியற் காலையிலேயே கூட இவர்கள் பார்ப்பான் காலில் நுழைந்து வெளிவருவார்கள். ராஜகோபாலாச்சாரியை விரட்டிய சிப்பாய்கள்தானே இவர்கள்! பிறகு இவர்கள் தலைவரே இங்கு வந்தால் வெட்கக் கேடு என்று வடநாடு சென்று ராஜகோபாலாச்சாரியார் காலில் விழவில்லையா?

****

நாம் 100க்கு 95 பேர்கள், 100க்கு 3 பேரிடம் அல்லல் படுகிறோம். நம் மானத்தை, வீரத்தை, காணிக்கையாக வைத்து உயிர் வாழ்கிறோம். 

****

அரசியலில் புகுந்தாலே எவனுடைய யோக்கியதையும் கெட்டுப் போகுமே, கெட்டுப் போய்த்தானே இருக்கிறது. அரசியல் என்பது வடிகட்டின அயோக்கியத்தனம் என்று ஒரு மேல் நாட்டு அறிஞர் கூறியிருக்கிறார் என்று நான் அடிக்கடி கூறி வந்திருக்கிறேன். 

****

காந்தியார் உயிரோடு இருந்திருப்பா ரானாலும் இந்த 7,8 மாத அனுபவத்தைக் கொண்டு ஏதாவது அவர் செய்யக் கூடும். அமைப்பை மாற்றியமைக்கக்கூடும் என்று நாம் எதிர்பார்க்கலாம். அவரும் கொல்லப்பட்டு விட்டார்.

****

நேருவே பொது உடைமைத் தத்துவத்தை நசுக்கத் துணிந்து விட்டதாகக் கூறி பொது உடைமைவாதிகளே ஓடிப்போங்கள் என்று கூறி விட்டார். படேலோ, சமதர்மவாதிகளே வெளியேறுங்கள் என்று கூறிவிட்டார். சண்முகமோ முதலாளிகளைக் காப்பாற்றுவதுதான் ஏழைகளைக் காப்பாற்றுவதாகும் என்று சொல்லி விட்டார். வைத்திய நாதய்யரோ வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கோரும் வகுப்புவாதிகளே வெளியேறுங்கள் என்று கூறிவிட்டார். பொது உடைமை கூடாது என்றால், சமதர்மம் கூடாது என்றால், முதலாளிகள் கொள்கை வாழ வேண்டுமென்றால், வகுப்பு நீதி கூடாது என்றால், பின் எதற்காக ஒரு ஆட்சி இருக்கவேண்டும்.

பார்ப்பனர்களை ஆதரிக்க, அவர்கள் மதத்தைக் காப்பாற்றிக் கொடுக்க அவர் களின் கையாட்களான பணக்கார மிராசுதாரர்களைக் காப்பாற்ற மற்றும் பார்ப்பன அடிமைகளான முதலாளிகளை அவர் இஷ்டபபடி வேண்டுமளவும் சுரண்டுதல் செய்ய அனுமதிகள், மற்றும் காலிகளுக்கும் கொலைகார கொடுங்கோலர்களுக்கும் ஏதேனும் வசதிசெய்து கொடுக்க இன்றுள்ள உயர்வு தாழ்வுகளை அப்படியே நிலைக்கச் செய்ய, இதற்காகவா ஒரு ஆட்சி இருக்க வேண்டும்?

****

தற்போது ஏதாவது நல்ல காரியம் நடக்கிறதென்றால் அதெல்லாம் நாம் அந்தப் பக்கமே தலை வைத்துப் படுக்காமல் இருப்பதால்தான் என்பதை நீங்கள் உணரவேண்டும். 

அந்தப் பக்கம் தலைவைத்து விட்டோமோ அவ்வளவுதான் தாமதம். அப்புறம் நேற்றுச் சண்டையிட்டுக் கொண்ட இரண்டு பேருமே ஒன்று சேர்ந்து கொண்டு நம்மை ஒழிக்கப் பார்ப்பார்கள். ஆகவே ஒதுங்கியிருப்பதுதான் மிக நல்ல காரியம். ஒதுங்கியிருக்க வேண்டும் என்பதற்காக அல்ல. ஒதுங்கியிருந்தாலொழியத் திராவிடர் கழகத்தின் சமுதாயச் சீர்திருத்தத் திட்டம் சீக்கிரம் நிறைவேறாது என்பதற்காகத்தான்.

****

வெளியிலிருந்து மக்களுடைய உணர்ச்சியைக் கிண்டிவிட்டு அவ்வுணர்ச்சிக்குக் கட்டுப்பட்டு ஆட்சியாளர்களைச் சட்டமியற்றும் படி வற்புறுத்தி வருவதுதான் நமது திட்டம். அப்படிப்பட்ட திட்டத்தின் மூலம்தான் நமது லட்சியமும் விரைவில் கைகூடும். சமுதாய இழிவு நீக்கப் பிரசாரம்தான் நமது திராவிடர் கழகத்தின் முக்கியமான வேலை.

****

இனி இந்துவாக இருக்க மாட்டேன். நான் இனி சூத்திரனாக இருக்க மாட்டேன். இந்துமத அடையாளம் அணிய மாட்டேன் என்று முழக்கம் செய்தல் வேண்டும். 

இப்படி ஒவ்வொருவரும் கூறுவார்களானால், பார்ப்பனர்களே முன்வந்து மனுதர்மமே  மக்களுக்கு எழுதப்பட்டதல்ல. அது தேவாளுக்கு எழுதப்பட்டதாக்கும் என்றுகூறி தம்மையே மாற்றிக் கொண்டு விடுவார்கள்.

****

கருஞ்சட்டை போட்டுக் கொள்ளக் கூடாது என்று யார் கூறினாலும், பூணூல் அணிந்த கூட்டம் நாட்டில் இருக்கும்வரை கருஞ்சட்டை அணிந்த கூட்டமும் இருந்தே தீரும். உச்சிக் குடுமி உள்ளவரை கருப்புக் கொடியும் பறந்து தீரும் என்று சொல்லிவிடுங்கள்.

****

உங்களை எந்தப் பார்ப்பனன் இது ஏன் என்று கேட்டாலும் நீ உயர்ஜாதி என்று காட்டிக் கொள்ள நீ பூணூல் அணிந்து கொள்ளும்போது நான் சூத்திரனல்ல. இந்துவல்ல என்று காட்டிக் கொள்ள நான் ஏன் கருஞ்சட்டை அணிந்து கொள்ளக்கூடாது என்று ஒவ்வொருவரும் கேட்க வேண்டும்.

****

சட்டசபையைப் பற்றிக் கவலை வேண்டாம். மந்திரி பதவிக் கவலை வேண்டாம். அதைப் பார்ப்பனருக்கும் அவர்கள் அடிமைக்கும் விட்டு விடுங்கள். நாம் கட்டுப்பாடான பிரசாரம் செய்து மக்களை மானமுள்ளவர்களாக ஆக்கினால் எந்தக் காரியமும் கைகூடும். மந்திரிகள் நமக்குச் சலாம் போடுவார்கள்.

****

பார்ப்பானைத் தவிர்த்து வேறு எந்த ஜாதியாவது காந்தியாரைச் சுட்டிருந்தால் அந்த ஜாதி மனிதன் ஒருவனையாவது கண்காட்சிக்காவது காணமுடியுமா? 


No comments:

Post a Comment