அரசு பேருந்துகளில் 5 வயது வரை இலவசப் பயணம் போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 6, 2022

அரசு பேருந்துகளில் 5 வயது வரை இலவசப் பயணம் போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவிப்பு

சென்னை, மே 6   தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் அனைத்து வகை பேருந்துகளிலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாகப் பயணிக்க அனுமதிக்கப்படுவர் என்பது உள்ளிட்ட அம்சங்களுடன் தமிழக சட்டப்பேரவையில் போக்குவரத்துத் துறை, இயக்கூர்திகள் சட்டங்கள் - நிருவாகத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று (5.5.2022) நடந்த போக்கு வரத்துத்துறை, இயக்கூர்திகள் சட்டங்கள்-நிருவாகத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது,  போக்குவரத்துத்துறை, இயக்கூர்திகள் சட்டங்கள்-நிருவாகத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் 15 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்

தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் முறை பண பரிவர்த்தனையற்ற பயணச்சீட்டு முறையினை அறிமுகப் படுத்துதல்.

பயண கட்டணச் சலுகை அனுமதி சீட்டுகளை வலைதளம் வாயிலாக வழங்குதல்.

சென்னை , திருச்சி மற்றும் விழுப்புரத்தில் உள்ள அரசு தானியங்கி பணிமனைகளை நவீனமயமாக்குதல் மற்றும் தரம் உயர்த்துதல்.

அரசு தானியங்கி பணிமனைகள் இல்லாத இடங்களில் அரசுத் துறை வாகனங்களை ஆய்வு செய்வதற்காகவும் பராமரிப்பதற் காகவும் " அரசு நடமாடும் பணிமனைகளை" உருவாக்குதல்.

அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கும் ஒருங்கிணைந்த பயணிகள் குறை தீர்க்கும் உதவி மய்யம்.

பேருந்து முனையங்களில் இணையவழி பயணியர் தகவல் ஏற்பாட்டு முறை.

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் பயணச்சுமைப் பெட்டிகளை வாடகைக்கு விடுதல்.

இணையவழிப் பயணச்சீட்டு முன்பதிவு வாயிலாக இருவழிப் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யும் பயணிகளுக்கான கட்டணச் சலுகை.

5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணமில்லா பயணம் செயல்படுத்துதல்.

திருச்சிராப்பள்ளி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரத்தில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ஓட்டுநர் பயிற்சி மய்யம் அமைத்தல்.

இயக்கூர்திகள் சட்டங்கள் - நிருவாகம்

பொதுமக்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரடியாக வராமலேயே ஓட்டுநர் உரிமத்தில் வாகன வகையினை ஒப்புவிப்பு செய்தல், போக்குவரத்து அல்லாத வாகன உரிமை மாற்றத்தினை தெரிவித்தல் மற்றும் பதிவுச் சான்றில் தவணைக் கொள்முதல் விவரத்தினை மேற்குறிப்பு செய்தல் ஆகிய சேவைகளை கணினி வழியாகப் பெறுதல்.

போக்குவரத்துத் துறையில் பொதுமக்கள் ஆதார் அடையாள அட்டையை பயன்படுத்தி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தினை நேரடியாக அணுகாமல் கீழ்க்கண்ட சேவைகளை கணினி வழியாகப் பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஓட்டுநர் உரிமத்தில் ஏதேனும் வாகன வகையினை ஒப்புவிப்பு செய்தல்.

போக்குவரத்து அல்லாத வாகன உரிமை மாற்றத்தினை இணையத்தில் சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு தெரிவித்தல்.

பதிவுச் சான்றில் தவணைக் கொள்முதல் விவரத்தினை மேற்குறிப்பு செய்தல்.

பள்ளி வாகனங்களுக்கு முன்புறம் மற்றும் பின்புறம் கேமராவுடன், சென்சார் கருவி பொருத்துதல்.

பள்ளி வாகனங்களுக்கு முன்புறம் மற்றும் பின்புறம் கேமராவுடன் சென்சார் கருவி பொருத்துவதற்கு ஏதுவாக (பள்ளி வாகனங்கள் ஒழுங்குமுறை மற்றும் கட்டுப்பாடு) சிறப்பு விதிகள், 2012இல் திருத்தம் மேற்கொள்ளப்படும்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் புதிய மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் (பகுதி அலுவலகம்) உருவாக்குதல்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் புதிய மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் (பகுதி அலுவலகம்) உருவாக்குதல்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தினை (பகுதி அலுவலகம்) வட்டாரப் போக்குவரத்து அலுவலகமாக தரம் உயர்த்துதல்.

No comments:

Post a Comment