57 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு ஜூன் 10 ஆம் தேதி தேர்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 13, 2022

57 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு ஜூன் 10 ஆம் தேதி தேர்தல்

புதுடில்லி, மே 13 தமிழ்நாடு உள்பட 15 மாநிலங்களில் 57 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு ஜூன் 10ஆம்தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

ஒவ்வொரு மாநிலத்துக்கும் அந்தந்த மாநில மக்கள்தொகை எண்ணிக்கையின் அடிப்படையிலேயே நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் தரப்படுகிறது. இதன்படி தமிழ்நாட்டுக்கு மக்களவையில் 39 பேருக் கும், மாநிலங்களவையில் 18 பேருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டு உள்ளது.

 நாடாளுமன்ற மாநிலங்களவையில் நியமன உறுப்பினர்கள் 12 பேரை சேர்த்து 245 உறுப்பினர் இடங்கள் உள்ளன. மாநிலங் களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும். இங்கு உறுப்பினர்களாக உள்ளவர்களில் 3 இல் 2 பங்கு உறுப்பினர் களின் 6 ஆண்டு பதவிக்காலம் ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை முடிவடையும். இதன்படி வருகிற ஜூன் மாதம் 21ஆம்தேதி ஆந்திராவில் 4 பேருக்கும், தெலங்கானாவில் 2 பேருக்கும் பதவிக்காலம் முடிவடைகிறது.

ஜூன் 29ஆம்தேதி தமிழ்நாட்டில் 6 பேருக்கும், மத்திய பிரதேசத்தில் 3 பேருக்கும், சத்தீஷ்கரில் 2 பேருக்கும் பதவிக்காலம் நிறை வடைகிறது. ஜூன் 30ஆம்தேதி கருநாட கத்தில் 4 இடங்கள் காலியாகிறது.

ஜூலை ஒன்றாம் தேதி ஒடிசாவில் 3 இடங்களும், ஜூலை 4ஆம்தேதி உத்தரப் பிரதேசத்தில் 11 இடங்களும், மராட்டியத்தில் 6 இடங்களும், ராஜஸ்தானில் 4 இடங்களும், பஞ்சாபில் 2 இடங்களும், உத்தரகாண்டில் ஒரு இடமும் காலியாகின்றன. ஜூலை 7ஆம் தேதி பீகாரில் 5 பேருக்கும், ஜார்க்கண்டில் 2 பேருக்கும் பதவிக்காலம் முடிகிறது.

ஆகஸ்டு ஒன்றாம் தேதி அரியானா மாநிலத்தில் 2 இடங்கள் காலியாகின்றன.

இவை எல்லாம் சேர்த்து மேற்கண்ட 15 மாநிலங்களில் மொத்தம் 57 உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைகிறது.

இதனால் ஏற்படும் காலியிடங்களுக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று (12.5.2022) அறிவித்தது. வருகிற ஜூன் மாதம் 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை யொட்டி வருகிற 24 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. 31ஆம்தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் ஒன்றாம் தேதி நடக்கிறது. வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் ஜூன் 3 ஆம் தேதி ஆகும்.

ஜூன் 10ஆம்தேதி தேர்தல் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் மாலை 5 மணிக்கு ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் ஆகிய தி.மு.க. எம்.பி.க்களும், எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன், நவநீதகிருஷ்ணன், ஏ.விஜயகுமார் ஆகிய அ.தி.மு.க. எம்.பி.க் களும் பதவியை நிறைவு செய்கிறார்கள். இதைப்போல கருநாடகத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மேனாள் ஒன்றிய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், மராட் டிய மாநிலத்தில் ப.சிதம்பரம், உத்தரப்பிர தேசத்தில் கபில்சிபல் உள்ளிட்டோருக்கும் பதவிக்காலம் நிறைவடைவது குறிப்பிடத் தக்கது.

No comments:

Post a Comment