சமூகப்புரட்சியின் முதல் விதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 11, 2022

சமூகப்புரட்சியின் முதல் விதை

இந்திய சமூகப்புரட்சியின் விதை 2500 ஆண்டுகளுக்கு முன்பு கவுதம புத்தரால் போடப்பட்டது, பிற்காலத்தில் சனாதன சக்திகளின் ஆதிக்கத்தால் சமூகப்புரட்சியின் விதை மிக ஆழத்திற்குள் புதைந்து போனது, ஆங்கிலேயர்கள் வந்த பிறகு கல்வியறிவின் மூலம் மீண்டும் அந்த விதை பெருமரமாக வெளிப்படத்துவங்கியது, அம்மரத்தில் முதல் விழுதாக புறப்பட்டவர் ஜோதி ராவ் புலே. அவரின் பிறந்தநாள் (11.04.1827) இன்று.

உயர் வகுப்பைச் சேர்ந்தவரின் திருமணம் அது. மாப்பிள்ளையின் அழைப்பின் பேரில் அவனது நண்பன் ஒருவன் திருமணத்திற்காக வருகிறான். 

திருமண ஊர்வலத்தில் அந்த குறிப்பிட்ட உயர் வகுப்பை சேர்ந்தவர்கள் மட்டுமே சென்று கொண்டிருந்தார்கள். அவர்களோடு மணமகனின் நண்பனும் சேர்ந்து கொண்டான். ஊர்வலம்  சற்றுத் தூரம் சென்றவுடன் திடீரென ஒருவர் அந்த இளைஞனைப் பார்த்து கன்னாபின்னாவென கத்தினார்.

‘ஏய் சூத்திரனே... உனக்கு எவ்வளவு துணிச்சல் இருந்தால் எங்களோடு சமமாக நடந்து வருவாய்? ஜாதி மரபுகள் அனைத்தையும் நீ மீறி விட்டாய்.. நீ எங்களுக்கு சமமானவன் அல்ல... எங்களை அவமதிக்கும் இந்தச் செயலை செய்வதற்கு முன் நீ ஆயிரம் முறை யோசித்து இருக்க வேண்டும்.  ஒன்று எங்களுக்கு பின்னால் கடைசியாக வா, இல்லை; இந்த இடத்தைவிட்டு ஓடி விடு. இப்போது எல்லாம் மக்களுக்கு வெட்கம் இல்லாமல் போய் விட்டது. ஜாதி மரபுகளை இஷ்டத்திற்கு மீறுகிறார்கள். வெள்ளைக்காரன் ஆட்சியில் இவர்களுக்கு அகம்பாவம் ஏற்பட்டுவிட்டது’ என்று அந்த நபர் வானத்துக்கும் பூமிக்குமாக குதித்தார். ‘நண்பன் அழைத்தானே’ என்று அவனது திருமணத்திற்கு வந்த ஜோதிராவ் எனும் இளைஞன் இந்த வார்த்தைகளால் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனான்.  அழுகையும், ஆத்திரமும் தொண்டைக்குழியை அடைக்க, அவமானத்தால் அவனது உடல் கூனிக்குறுகியது. வேதனையும், வேகமும் உந்தித்தள்ள ஊர்வலத்தில் இருந்து விலகி, விறுவிறுவென வீடு வந்து சேர்ந்தான்.

அதற்குமேல் அவனால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. தந்தையின் முன்னால் உடைந்து அழுதபடியே நடந்ததை விவரித்தான். இதைப்போன்ற எத்தனையோ அவலங்களை ஏற்கெனவே சந்தித்திருந்த இளைஞனின் தந்தை, ‘அவர்கள் சொன்னது சரி தானப்பா.. நாமும் அவர்களும் எப்படி ஒன்றாக முடியும்? நீ செய்த தவறுக்குத் தண்டனை கொடுக்காமல் உன்னைத் துரத்திவிட்டது உயர் வகுப்பினரின் கருணையைக் காட்டுகிறது.  இப்போதாவது பரவாயில்லை. எங்கள் காலங்களில் இத்தகைய தவறுகள் செய்பவர்களுக்கு யானையின் காலால் மிதிபட்டு சாகும் தண்டனைதான் கிடைக்கும்’ தந்தையின் வார்த்தைகள் இளைஞனின் காதுகளில் நெருப்புத் துண்டங்களாக வந்து விழுந்தன. ‘நீதிக்கோட்பாடுகள்’ என்ற பெயரில் ஜாதி வெறி தாண்டவமாடிய சம்பவங்கள் சிலவற்றையும் தந்தை சொல்லச் சொல்ல அந்த இளைஞனின்அத்தனை அங்கங்களிலும் கோபம் கொப்பளித்தது. அன்றைக்கு இரவு முழுக்க அவனது கண்களுக்குத் தூக்கம் பிடிக்கவில்லை. 

நேரிட்ட அவமானமும் நிலைகொண்ட கோபமும் வயிற்றுக்கும் நெஞ்சுக் குழிக்கும் இடையே வேகம்  குறையாமல் உருண்டு கொண்டிருந்தன. உலகத்தின் ஆகப்பெரிய சாதனைகளுக்கெல்லாம் அவமானங்களே ஆணிவேராக இருந்திருக்கின்றன. அகிலத்தையே புரட்டிப்போட்ட அத்தனை புரட்சிகளையும் தோண்டி எடுத்தும் பார்த்தால் அவற்றின் அடி நாதமாக அவமானம் இருப்பதைக் காண முடியும்.   

அவமானத்தின் வலிகளால் நிரம்பி வழிந்த அந்தக் கணங்களில்தான் இந்திய தேசத்தினுடைய சமூகப் புரட்சியின் தந்தை என்றழைக்கப்படும் மகாத்மா ஜோதிராவ் புலே உருவானார். மாற்றத்திற்காக எழுதிக் குவித்தார். ஜோதிராவ் சமூகப் புரட்சியாளர் மட்டுமல்ல; ஏராளமாக எழுதிக் குவித்திருக்கும் எழுத்தாளர்; கவிஞர். ஜாதி ஒழிப்பு, கல்வி, தாழ்த்தப்பட்டோருக்கான ஆலோசனைகள் போன்றவை குறித்த நூல்கள், துண்டுப் பிரசுரங்கள், கையேடுகளை ஏராளமாக வெளியிட்டார். பாடல்கள் மூலம் எளிய மக்களிடம் சீர்த்திருத்த கருத்துகளைக் கொண்டு சேர்க்க முடியும் என்று நம்பி நிறைய பாடல்களை எழுதினார். பிற்கால இந்திய வரலாற்றில் புரட்சியாளர்களுக்கும் தேசபக்தர்களுக்கும் பெரும் ஊக்கச் சக்தியாக திகழ்ந்த வீர சிவாஜியின் புகழை ஆங்கிலேய ஆட்சியில் பாடிய முதல் கவிஞர் ஜோதிராவ் தான்.


No comments:

Post a Comment