அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 7, 2022

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

 சென்னை,ஏப்.7- மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது.

இந்த சட்டத்தை எதிர்த்தும், அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் இந்த இட ஒதுக்கீட்டை வழங்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது.

அப்போது, ஏற்கெனவே தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீடு அமலில் உள்ள நிலையில், மீதமுள்ள 31 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதன் மூலம், பொதுப்பிரிவில் உள்ள தகுதியான மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என மனுதாரர் தரப்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளதே என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மேலும், இட ஒதுக்கீட்டால் பயனடைந்தவர்களின் குடும்பத்தினர் தான் பயன் பெறுகின்றனர். 70 ஆண்டுகளா கியும் பின்தங்கியவர்கள் பின்தங்கியவர்களாகவே உள்ளனர் என்றும் குறிப்பிட்ட தலைமை நீதிபதி, இதை நாடாளுமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த தமிழ்நாடு அரசுத் தரப்பு மூத்த வழக்குரைஞர் கபில்சிபல், பொதுப்பிரிவினருக்கான 31 சதவீத இட ஒதுக்கீட்டில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனவும், மொத்த இடங்களில் தான் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், தகுதியான பொதுப்பிரிவு மாணவர்களுக்கு இதனால் எந்த பாதிப்பும் இல்லை எனவும், நீட் தேர்வு தகுதி அடிப் படையில் தான் இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள் ளதாகவும் விளக்கமளித்தார்.

மேலும் அவர், பொருளாதாரம், கட்டமைப்பு சம நிலையற்ற நிலை என அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து நீதிபதி குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இட ஒதுக்கீடு சட்டம் இயற்றப்பட்டதாகவும், தனியார் பள்ளி மாணவர்கள் பயிற்சி மய்யங்களுக்கு சென்று பயிற்சி பெற முடியும். ஆனால் அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களால் பயிற்சி மய்யங்களுக்கு சென்று பயிற்சி பெற முடியாது என்பதால் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது எனத் தெரிவித்தார்.

உயர் கல்வித்துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி. வில்சன், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது நியாயமானது எனவும், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என பள்ளிகளை இரு வகையாக பிரிப்பது சட்டப்படி அனுமதிக்கத்தக்கது எனவும், அதன் அடிப்படையில் பின் தங்கிய மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றப்பட்டதாகவும் தெரிவித்தார்.

அரசு உதவி பெறும் பள்ளிகள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் சேவியர் அருள்ராஜ், அரசுப்பள்ளி மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்ட அரசு, உதவி பெறும் பள்ளிகளை கவனத்தில் கொள்ள தவறி விட்டது எனவும், அரசு உதவி பெறும் பள்ளிகள் மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதில்லை என தெரிவித்தார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதைப் போல, இலவச சீருடை, காலணி, புத்தகங்கள் உள்ளிட்டவற்றை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் வழங்குவதாகக் கூறிய வழக்குரைஞர், மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு வழங்கும் விஷயத்தில் பாரபட்சமாக செயல்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

 மார்ச் 17-ஆம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, இந்த வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்திருந்தனர்.

இந்த வழக்குகளில் நீதிபதிகள் இன்று (7.4.2022) தீர்ப்பு அளித்தனர். தீர்ப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மருத்துவ படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 7.5 சதவீத உள் ஒதுக்கீடு செல்லுபடியாகும். இந்த உள் ஒதுக்கீட்டை வழங்குவதற்கு தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் உள்ளது.

எனவே மருத்துவப் படிப்புகளில் தொடர்ந்து 7.5 சதவீத உள் ஒதுக்கீடு நடைமுறையை தொடரலாம். 5 ஆண்டுகளுக்கு பிறகு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டு நடைமுறையை தொடர்ந்து நடைமுறைப்படுத்தலாமா? என்று மறு ஆய்வு செய்ய வேண்டும்.

-இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறி உள்ளனர்.

No comments:

Post a Comment