பாத்திரங்கள்
பறக்கும்தட்டெனப்
பறந்தபோது
பயந்து
நடுங்கியவர்கள் தான்
நாங்கள்...
வார்த்தைகளுக்குள்
இடிகளை வைத்து நீங்கள்
வெடித்தபோது
கண்களைக்
கசக்கிக்கொண்டு
கதவிடுக்கில்
நின்றவர்கள் தான்
நாங்கள்...
பகுத்தறிவு
எங்களுக்கும்
உண்டென்பதை
மறந்து நீங்கள்
‘மூடு வாயை’
என்று
அதட்டியபோதெல்லாம்
அடுப்படியில்
முடங்கியவர்கள் தான்
நாங்கள்...
உங்கள் ஆசைகள்
வெறியாக
மாறிய வேளைகளில்
குறுத்தென்றும்
பழுத்த ஓலையென்றும்
பாராமல் நீங்கள்
களியாட்டம்
ஆடிய போது
குடும்பம்,
மானம், கவுரவம்
என்று
மென்று விழுங்கிக்
குந்திக் கிடந்தவர்கள் தான்
நாங்கள்...
அந்தக் காலமெல்லாம்
மலையேறிப் போச்சு...
காலத்தின்
கரங்களைப்
பிடித்துக்கொண்ட
நாங்கள் இப்போது
உயரங்களை
நோக்கி
நகர்ந்து
கொண்டிருக்கிறோம்...
அண்ணாந்துப்
பாருங்கள்!
தலை குனிந்து
நடந்த நாள்களை
நாங்கள்
கடந்து வந்திருக்கிறோம்.
கரண்டியைப்
பிடிங்கிவிட்டு
புத்தகத்தை
எங்கள்
கைகளில்
கொடுக்க
ஆணையிட்ட
எங்கள்
தந்தை பெரியாரே!
பூமியின்
கூரைமேல் நின்று
அங்கங்கே இருக்கும்
கிரகங்களில் எல்லாம்
ஒளியேற்றி வைக்கும்
வாலண்டைனாவின்
வாரிசுகள் நீங்கள்!
உங்கள்
பேத்திகள்
மகள்கள்
புதிதாய்ப்
பிறந்திருக்கிறோம்!
வாழ்த்துங்கள்!
- வித்யா மனோகர்
No comments:
Post a Comment