சரக்குப் விநியோகிக்கும் தானியங்கி ரோபோக்கள் சாலைகளில் வலம்வரத் தொடங்கி ஓரிரு ஆண்டுகள்தான் ஆகின்றன. அதற்குள் ஸ்டார்ஷிப் டெக்னாலஜீஸ், தனது ரோபோக்களை அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் களமிறக்கியுள்ளது.
பெட்டிபோல உள்ள நான்கு சக்கரம் கொண்ட 1700 ரோபோக்கள் சாலைகளில் தானாகவே ஊர்ந்து சென்று சரக்குகளை உரிய முகவரிதாரர்களிடம் தந்துவிட்டுத் திரும்புகின்றன.
இப்போதைக்கு அவை நடைபாதைகளில் மட்டுமே பயணிக்கின்றன. என்றாலும், மனித வழிகாட்டல் இன்றி, பரபரப்பான சாலைகளைக் கடக்கவும், பனி போன்ற காலநிலை மாற்றங்களை உணர்ந்து பயணிக்கவும் ஸ்டார்ஷிப் ரோபோக்கள் கற்றுக்கொண்டுவிட்டன. இதுவரை 30 லட்சம் முகவரிகளுக்கு டெலிவரியை முடித்துவிட்டன என்றால் அது பெரிய சாதனைதான்.
பிரிட்டனில், டெஸ்கோ போன்ற தொடர் கடைகளின் மளிகை சாமான்கள் முதல், அமெரிக்காவில் தெற்கு கரோலினா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களின் பீட்சா உணவு வகை ஆர்டர் வரை பலவகை டெலிவரிகளை ஸ்டார்ஷிப் ரோபோக்கள் செய்து வருகின்றன.
தற்போது தினமும் 10 ஆயிரம் டெலிவரிகள் வரை அவை செய்யுமளவுக்கு வேகமும் திறனும் பெற்றுள்ளன.
ஸ்டார்ஷிப் ரோபோக்கள், டெலிவரிக்குப்போகும் வழியில் தினமும் புதுப்புது சூழல்களை சந்திக்கின்றன. எனவே, அவற்றை சமாளித்து முன்னேறும் திறன்களையும் தானாகவே அவை வளர்த்து வருகின்றன.
எனவே, சில ஆண்டுகளுக்குள் அந்த ரோபோக்கள், டெலிவரி வல்லுநர்களாக மாறிவிடும். அப்போது மனிதர்களை இத்தகைய பணியில் அமர்த்துவதை உலகெங்கும் நிறுத்திவிடுவர் என ஸ்டார்ஷிப்பின் படைப்பாளிகள் கருதுகின்றனர்.
டெலிவரி ரோபோக்கள் யுகம் இன்னும் 5 ஆண்டுகளில் துவங்கிவிடும் என்று வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
No comments:
Post a Comment