மகளிரே, மருத்துவத்தை மறக்கலாமா? (2) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 14, 2022

மகளிரே, மருத்துவத்தை மறக்கலாமா? (2)

மகளிரே, மருத்துவத்தை மறக்கலாமா? (2)

மகளிர் மருத்துவப் பரிசோதனைகளை ஆண்டிற்கு ஒரு முறையோ, இரு முறையோ - வயதுக்கும், உடல் நலத்திற்கும் ஏற்ப செய்து கொள்ள தவறாது முன் வர வேண்டும்.

'எஜமான' ஆண்கள் அதற்கு "தடையில்லா சான்றிதழ்" (NOC) வழங்கவில்லையே என்று கவலைப்படாதீர்கள். உங்கள் நோய்க்கு நீங்கள்தானே மருந்து சாப்பிடவேண்டும். உங்கள் வீட்டுக்காரரா சாப்பிட முடியும் - அவர் எவ்வளவுதான் இணை பிரியாதவராக இருந் தாலும்கூட!

பட்டுப்புடவை முதல் புதுப்புது துணிகளை வாங்குவதில் நீங்கள் காட்டும் ஆர்வம் - புதிய திரைப்படங்களுக்கு முந்திக் கொண்டு செல்ல நீங்கள் உங்கள் குடும்பத்தவரையோ, அல்லது உங்கள் நட்பு வட்டத் தோழர்களையோ அழைத்துச் செல்லத் தயங்குவதில்லையே! அதே போன்று விதவிதமான சமையல் 'நளபாகங்களை' செய்யக் கற்றுக் கொள்ளும் ஆர்வத்தை, உங்கள் உடல் நலத்தைப் பேணுவதில் காட்ட ஏனோ தயங்கித் தயங்கித் தள்ளிப் போடுகிறீர்கள்.

மற்ற நாட்டுப் பெண்கள்- குறிப்பாக மேலை நாட்டு மகளிர் தங்களது உடலில் நோய் குறிகள் தென்பட்டால், கொஞ்சம்கூடத் தயங்காது மருத்துவர்களிடம் சென்று, ஆலோசனை பெறத் தயங்குவதே இல்லை. அதனால் முளையிலேயே விளையும் நோயைக் கண்டறிந்து, குணப்படுத்தி தங்களைக் காத்துக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகிறது.

நோய்களிலேயே மிகவும் கொடிய நோய் என்று மக்களை அச்சுறுத்தும் நோய்- புற்று நோயாகும். அதுபற்றி நான் விளம்பரம் ஒன்றைப் படித்துக் கொண்டே பயணம் செய்கிறேன்.

"புற்று நோய் தீர்க்கப்பட  முடியாத நோய் அல்ல" (தொற்று நோய் அல்ல என்பது பலருக்கும் தெரிந்ததே) அதில் தாமதம் என்பதுதான் ஆபத் தானது என்று கருத்துப் பட வாசகங்கள் எழுதப்பட்டு மக்களுக்கு அறிவுறுத்துகிறார்கள்.

பல சகோதரிகளும் தாய்மார்களும் குளிக்கும் போது உடலை நன்றாக பரிசோதனை செய்து - உடல் முழுவதையும் அழுக்குப் போக குளிப்பதில், அழுத்தி உடலைத் தேய்ப்பது போல் குளிப்பார்கள் - அப்போது உங்களுக்கு ஏதாவது சந்தேகம் வந்தால் உடனே  எங்களை அணுகி அதுபற்றி பரிசோதனை செய்து கொள்ளத் தயங்காதீர்கள் என்று புற்றுநோய் சிகிச்சை மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

நம் மகளிரில் பலர் பரிசோதனைகளுக்குத் தயங்குவதோடு, தனக்கு ஏற்படும் சந்தேகத்தை மருத்துவ ரீதியாகப் போக்கிக் கொள்ளாமல் மனதிற்குள் போட்டு - நோயைத் தீர்க்காமல் தள்ளிப்போட்டு - கடும் விலை தருவது எவ்வளவு ஆபத்தானது? புரிந்து கொள்க.

தங்களுக்கு மிகவும் நெருங்கியவர்களிடம்கூட இதை மறைப்பது, கருத்தைப் பகிர்ந்து பேசத் தயங்கி உள்ளுக்குள்ளேயே வருந்தி கடைசியில் உறைந்து போவது தேவைதானா?

இன்றைய கால கட்டத்தில் நோய்கள் பல ரூபங்களில் வந்து கொண்டே இருப்பது உண்மை தான்; ஆனால் சிகிச்சைகளும் அறிவியல் அற் புதங்களாக புதிது புதிதாக வந்து கொண்டுதான் இருக்கின்றன என்பதை மறந்து விடலாமா?

நல்ல மருத்துவ வசதிகள் கிராம அளவில்கூட வந்து விட்டன. அதுவும் இன்றைய ஆட்சியில் வீடு தேடி மருத்துவம், வருமுன்னர் காக்கும் மருத்துவம் எல்லாம் வந்து உங்கள் கதவுகளைத் தட்டுகின்றன.

இவற்றைக்கூட நன்கு பயன்படுத்திக் கொண்டு நலமுடன் வாழ வேண்டாமா?

இறுதியாக ஒன்று; உங்கள் மனம்தான் உடல் நலத்திற்கு முழு முதற் காரணம். மனதை தூய்மையுடன் வைத்துக் கொள்ளும்(Healthy mind is Essential for healthy body) ஆரோக்கிய மான மனமே, ஆரோக்கியமான உடலுக்கு மிகவும் இன்றியமையாதது!

உங்களது உறுதி - உடனடியாக உடல் நலப் பாதுகாப்புக்கு ஓடோடி மருத்துவம் பார்த்துக் கொள்வதில் உங்களுக்கு மட்டுமா நிம்மதி?  குடும்பத்தாருக்கும் கூடத்தானே!

எனவே சுயநலம் கலந்த பொதுநலம் தங்க ளுக்கு அருமையான கூட்டாக அமைந்துள்ளது என்பதை மறவாதீர்!

அலட்சியப்படுத்தாமல் உடல் நலப் பாதுகாப் பில் ஆர்வம் காட்டுங்கள் - சகோதரிகளே, தாய்மார்களே, இளையர்களே!

No comments:

Post a Comment