சென்னை, பிப்.12 பொது மருத்துவம், பல் மருத்துவ மாணவர் சேர்க்கை கல்லூரிகளை தேர்வு செய்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக சென்னை உட்பட 38 அரசு மருத்துவக் கல்லூரிகளில் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணிகள் முடிவடைந்தது.
அதைத் தொடர்ந்து இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள் இணையதளத்தில் வரும் 15ஆம் தேதி வெளியிடப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
மருத்துவம், பல் மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலில் முதல் 6,082 கலந்தாய்வில் கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் கடந்த 8ஆம் தேதி முதல் நேற்றுமுன்தினம் வரை நடைபெற்றது.
சென்னையில் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை மருத்துவக் கல்லூரி, கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி, ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தமிழ்நாடு அரசு பல்மருத்துவக் கல்லூரிகளிலும், அதைப்போன்று தமிழ்நாடு முழுவதும் 38 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் தங்களுடைய சான்றிதழ்களை சரிபார்த்துக் கொண்டனர்.
இதையடுத்து கல்லூரிகள் குறித்த விவரங்கள் வரும் 15ஆம் தேதி இணையதளங்களில் வெளியிடப்படும். அதைத் தொடர்ந்து 16ஆம் தேதி கல்லூரிகளில் சேருவ தற்கான ஆணையை பெற்று 17ஆம் தேதி முதல் 22ஆம் தேதி மாலை 3 மணிக்குள் அந்தந்தக் கல்லூரிகளில் சேர்ந்து விட வேண்டும்.
அவ்வாறு சேராத மாணவர்களின் இடங்கள் காலியாக அறிவிக்கப்பட்டு இரண்டாம் கட்ட கலந்தாய்வில் இடம் பெறும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment