ஹிட்லரிசமும் - ஆரியனிசமும் ஒன்றே! (1) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 12, 2022

ஹிட்லரிசமும் - ஆரியனிசமும் ஒன்றே! (1)

30.12.1944 - குடிஅரசிலிருந்து... 

உலகில் ஒவ்வொரு நாடும் இழந்த சுதந்திரத்தை, உரிமையை மீண்டும் பெறுவதற்காகவும், தம் தம் கலை, மொழி, நாகரிகம், பழக்கவழக்கம் ஆகியவைகளைப் பாதுகாக்கவும் போராடிக் கொண்டு வருகின்றன. நேச தேசங்களும் இவைகளுக்காகத் தான் பாடுபடுவதாகவும் சொல்லப்பட்டு வருகிறது. இவ்வாறு தாங்கள் இழந்த சுதந்திரத்தை -  உரிமையைப் பெறுவதற்காகப் போராடும் நாடுகள் எத்தகையன என்பதையும் மக்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். அவைகள் யாவும் சில ஆயிரம் மக்கள் முதல், 6 கோடி மக்கள் வரை உடையவைகளே. அந்நாடுகளின் நிலப்பரப்பும் நம் நாட்டு ஜில்லாக்கள், மாகாணங்களை ஒத்ததாகத்தான் இருக்கும்.

இவைகள் யாவும் தம் தம் சுதந்திரங்களைக் கடந்த ஒரு சில வருடங்களுக் குள்ளாகத்தான் இழந்திருக்கின்றன. இதற்குக் காரணம் ஹிட்லரிசம் ((Hitlerism)) எனப்படும் ஆரியனிச (Aryanism) மேயாகும். இன்று விஞ்ஞான வளர்ச்சியடைந்திருப்பதானால், ஆரியனிசம் விஞ்ஞானத்தின் உதவி கொண்டு, மற்ற நாடுகளின் சுதந்திரத்தைப் பறித்து ஆரியத்தை நிலைநிறுத்தப் பாடுபடுகிறது. ஆனால் இவ் ஹிட்லரிசம் எனப்படும் ஆரியனிசத்தை அய்ரோப்பாவிலிருந்தே, ஏன் உலகில் இருந்தே அழித்து ஒழிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது; அதன் கொடுமையை எண்ணிப் பார்த்தவர்களால்.

இதே ஆரியனிசம்தான் இந்தியா என்று சொல்லப்படும் இவ்வுபகண்டத்தில் இருந்து வருகிறது. இது பன்னெடு நாட்களாக இவ்வுபகண்ட மக்களை வாட்டி வதைத்து மக்களது சுதந்திரங்களையும் உரிமைகளையும் பறித்து பகுத்தறிவற்ற விலங்காக ஆக்கிவைத்து வந்திருக்கிறது - வருகிறது. நேற்று சுதந்திரம் இழந்த நாடுகள் போடும் கூக்குரல் கேட்கிறது உலகிற்கு; ஆனால் பன்னெடு நாட்களாக அழுத்துதலைத் தாங்கமாட்டாமல் இவ்வுபகண்டத்தின் மக்கள் போடும் கூக்குரல், கதறும் கதறல் கேட்கிறதில்லை இவ்வுலகிற்கு. இதற்குக் காரணம் எதுவாய் இருக்க முடியும்?

ஹிட்லரிசத்தின் - ஆரியனிசத்தின் கொடுமையை உள்ளபடி இவ்வுலகம் உணர்ந்திருக்குமானால், அவ் ஆரியனிசம் உலகில் எப்பகுதியில் எவ்வுருவில் இருந்தாலும் அதன் தன்மை ஒரே விதமாகத்தான் இருக்கும் என்பதை உணர்ந்திருக்கும். அவ்வாறு இல்லாமல் ஒரு இடத்தில் ஒரு விதமாகவும், மற்றொரு இடத்தில் வேறு ஒரு விதமாகவும் இருக்கும் என்று உணர்ந்திருக்குமே யானால் அதன் நாணயத்தில் யாருக்கும் சந்தேகம் தோன்றாமல் இருக்க முடியுமா என்று கேட்கிறோம்.

இவ்வுபகண்டத்தில் ஆரியனிசம் பரவுவதற்கு முன் மக்கள் எவ்வளவு உயர்நிலையில், சுயேச்சையாக இருந்தார்கள் என்பதைப் பழந்தமிழ் நூல்களின் வாயிலாகவும், புதை பொருள் ஆராய்ச்சிகளில் இருந்தும் தெரிந்து கொள்ளலாம். அவ்வாறு இருந்த மக்கள், தங்கள் பண்பிழந்து, கலை இழந்து, மொழி இழந்து ஆரியத்திற்கு அடிமையாயிருந்து வருகின்றனர். இவ்வடிமைத்தனத்தை உணர்ந்த ஒரு சிலர் தங்கள் மக்களைத் தட்டி எழுப்ப தன்மான உணர்ச்சியை ஊட்டப் பாடுபட்டால், அவ்வாறு பாடுபடுகிறவர்களை அந்நாளில் பலவிதக் கொடுமைகளுக்கு உள்ளாக்கி, அவ்வுணர்ச்சி பரவ முடியாதபடி செய்து வந்திருக்கிறார்கள். இதற்கு ஆதாரங்கள் மலைமலையாக வேண்டுமானாலும் நம்மால் குவிக்க முடியும். இதற்குக் காரணம் அந்நாளில், மக்கள் போதுமான அறிவு பெறாதிருந்ததினாலும், ஆட்சியில் இருந்தவர்களை ஆரியம்  தனது வலையில் சிக்க வைத்து இருந்ததினாலும், ஆரியத்தை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தவர்களையும், உணர்ச்சியூட்டி வந்தவர்களையும், ஆட்சி பலத்தால் - உதவியால், அத்தகைய கிளர்ச்சிகள் தலை எடுக்காமலும் உணர்ச்சிகள் பரவாமல் தடுத்து வந்தார்கள் என்பதேயாகும். ஆனால், பிரிட்டிஷ் ஆட்சியின் பயனாக ஓரளவுக்கு பொதுமக்கள் அறிவுபெற முடிந்ததினாலும், ஆட்சி ஆரிய ஆதிக்கத்திற்கு அடங்கியதாக இருந்தாலும், மற்ற மக்களுக்கும் சிறிதாவது ஆதிக்கம் இருந்து வருவதாலும், ஆரியம் முன்போல் தனது முழு சக்தியையும் காட்ட முடியவில்லை; கிளர்ச்சியை அடக்க முடியவில்லை; உணர்ச்சியைத் தடுக்க முடியவில்லை. எனினும், அது தன் விஷமத்தனத்தைப் பற்பல ரூபங்களில் காட்டிக்கொண்டுதான் வருகிறது என்பதைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

இன்று பொதுவாக இவ்வுபகண்டம் முழுவதும் விழிப்படைந்து விட்டது என்றே சொல்லலாம். ஆரியத்தின் பெருமையை இவ்வுபகண்ட மக்கள் யாவரும் உணர்ந்து விட்டார்கள் ஆங்காங்கு பற்பல உருவங்களில் கிளர்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. உணர்ச்சி காட்டப்பட்டு வருகின்றன. இதைக் கண்டு ஆரியனிசம் கலக்கமுற்று இருக்கிறது. எவ்வாறு இவைகளை எதிர்த்து அழிப்பது என்பதில் காலதேசவர்த்தமானத்திற்கு ஏற்ப புதுப்புது வழிகளைக் கண்டுபிடிப்பதில் முனைந்திருக்கின்றது. இந்நாட்டிலே ஆரியனிசம் இது போலவேதான் மேல்நாடுகளில் ஹிட்லரிசம் தனக்கெதிராக செய்யப்படும் கிளர்ச்சிகளையும், உணர்ச்சிகளையும் எதிர்த்து அழிக்க விஞ்ஞானத்தின் உதவி கொண்டு நாள்தோறும் புதுப்புது வழிகளைக் கண்டுபிடித்து வருகின்றது. ஆனால் இதற்குச் சரியான பதில் நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளப்படுகின்றன அந்நாடுகளில்; இந்நாட்டிலோ மக்கள் வாழாவிருக்கின்றனர்.

ஆகவே, இந்நாட்டில் ஆரியனிசத்தின் கொடுமையை உள்ளபடி உணர்தல் மக்களது நீங்காக் கடமை. மக்கள் விழிப்படைந்துள்ள இந்த நல்ல சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு கிளர்ச்சியைப் பலப்படுத்த வேண்டியதாகும். இதுவரை, இவ்வுபகண்டத்தில் தோன்றிய கிளர்ச்சிகளை அடக்கி ஒடுக்கியதுபோல் இப்பொழுதும் செய்து விடலாம் என்று மனப்பால் குடித்துக் கொண்டிருக்கலாம் ஒரு சிலர். ஆனால், அவர்களுக்கு அம்மனக்கோட்டையைத் தகர்த்தெறிவோம் என்பதை எடுத்துக்காட்ட வேண்டும்.









No comments:

Post a Comment