மீண்டும் மாநில அரசின் அதிகாரத்துக்குக் கொண்டுவர தமிழ்நாடு அரசு தீர்மானம் கொண்டுவருவது வரவேற்கத்தக்கது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 7, 2022

மீண்டும் மாநில அரசின் அதிகாரத்துக்குக் கொண்டுவர தமிழ்நாடு அரசு தீர்மானம் கொண்டுவருவது வரவேற்கத்தக்கது!

* 5 ஆண்டுகளுக்கு முன்புவரை துணைவேந்தர்கள் நியமனம்

தமிழ்நாடு அரசின் உரிமையில்தான் இருந்ததுகடந்த ...தி.மு.. ஆட்சி அந்த உரிமையைப் பறிகொடுத்தது

கடந்த 5 ஆண்டுகள் முன்புவரை தமிழ் நாடு அரசின் உரிமையின்கீழ் இருந்த துணைவேந்தர்கள் நியமனம், கடந்த ...தி.மு.. அரசு அடிமையாட்சியாக இருந்து, அந்த மாநில உரிமையைப் பறி கொடுத்தது. இந்த நிலையில், மீண்டும் தமிழ்நாடு அரசின் உரிமையின்கீழ் துணை வேந்தர்கள் நியமனத்தைக் கொண்டுவர தீர்மானம் கொண்டு வருவது வரவேற்கத் தக்கது என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் - பொறுப்பு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்புவரை, தமிழ்நாடு அரசிடம்தான் இருந்தது.

கடந்த ஆட்சியினர் மாநில உரிமையைப் பறிகொடுத்து,

வாய்மூடி மவுனியாக இருந்தனர்

அதை சென்ற ஆளுநர் புரோகித் அவர்கள் கையில் எடுத்துக்கொண்டு, தன்னிச்சையாக நியமனங்களை - அவர்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதர வுள்ளவர்களா - .பி.வி.பி. என்ற  ஆர்.எஸ்.எஸ். சங் பரிவார அமைப்புகளில் ஒன்றான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்துடன் தொடர்பு  எவ்வகையிலாவது உடையவர்களா என்று தேடிக் கண்டுபிடித்து, பிற மாநிலத்திலிருந்தும், உயர்ஜாதிக்காரர்களைத் தேடியும் துணை வேந்தர்களாக நியமனம் செய்வதை எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதலமைச்சராக இருந்த கடந்த 4 ஆண்டுகளாக இப்படி மாநில உரிமை யைப் பறிகொடுத்து, வாய்மூடி மவுனியாக இருந்ததோடு, மாநில அரசின் இந்த உரிமை பறி போகக்கூடாது என்று வாதிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கும் தனது அமைச்சர்களைவிட்டு, ஆளுநரின் இந்த உரிமைப் பறிப்பை நியாயப் படுத்தி சப்பைக் கட்டுக் கட்டினார்கள்.

ஆளுநர் பல்கலைக் கழகங்களின் வேந்தராக இருப்பது என்பது Ex-officio  என்ற தகுதியின் மூலம்தான். அதன்படி அவரது அதிகாரம் அமைந்ததால்தான் அதற்குமுன்பு, கலைஞர், ஜெயலலிதா ஆகியோர் முதலமைச்சர்களாக இருந்த காலம்வரை, தமிழ்நாடு அரசு கருத்துப் படியே அதன் அதிகாரத்திற்குட்பட்டே துணை வேந்தர்கள் நியமனம் நடைபெற்றுள்ளது.

பல துணைவேந்தர்கள்மீது ஏராளமான குற்றச்சாட்டுகளும், ஒழுங்கீனங்களும் நடைபெற்றன

இந்த நடைமுறை மாற்றத்தினால் பல்வேறு விரும்பத்தகாத நிகழ்வுகள்கூட பல்கலைக் கழகங்களின் மாண்புகளைக் குலைக்கும் வகை யில் நடைபெற்று அவமரியாதையும், அவற்றிற்கு ஏற்பட்ட விரும்பத்தகாத நிலையும் உள்ளது!

ஆளுநரால் அப்படி நியமிக்கப்பட்ட பல துணைவேந்தர்கள்மீது ஏராளமான குற்றச்சாட்டு களும், ஒழுங்கீனங்களும் நடைபெற்றன என்பதும் கடந்தகால மறுக்க முடியாத வரலாறு.

இந்த நடைமுறை மாற்றத்தினை - அதாவது ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர்கள், கல்வியைக் காவிமயமாக்கிட இப்படி ஒரு வாய்ப்பைப் பயன்படுத்துவது மிகவும் தவறான நடவடிக்கையாகும்!

மக்கள் கிளர்ச்சியே வெடித்தாலும் வியப்பில்லை!

பெரியார் பெயரில் சேலத்தில் நடைபெறும் ஒரு பல்கலைக் கழகத்தை அப்படி நியமிக்கப் பட்ட துணைவேந்தர் எப்படியெல்லாம் நடத்து கிறார் என்பது குமுறும் எரிமலையின் சீற்றமாகி உள்ளது. விரைவில் மக்கள் கிளர்ச்சியே வெடித் தாலும் வியப்பில்லை!

கடந்த 4 ஆண்டுகளாக முன்பிருந்த ஆட்சி (.தி.மு.. ஆட்சிக்கு ஏற்பட்ட மடியில் கனம் காரணமாக) ஆளுநரின் இந்த அதீத நடவடிக் கையை எதிர்த்து மூச்சு விடக்கூட அஞ்சியது அகிலம் அறிந்த ஒன்று.

இரண்டு வகை ஆபத்துகள்

இவை ஏதோ ஒரு சில நியமனங்கள்தானே என்று அலட்சியமாக இருந்துவிட முடியாது; கூடாது. காரணம், இரண்டு வகை ஆபத்துகள் இதன்மூலம் ஏற்படுகின்றன.

1. மாநில அரசின் உரிமை பறிக்கப்படும் கொடுமை

2. உயர்கல்வியைக் காவி மயமாக்கும் உபாயம்.

ஆகவேதான் நாடு தழுவிய எதிர்ப்பு மலைபோல் கிளம்பியுள்ளது!

கேரளாவில், மேற்கு வங்கத்தில் மட்டும் எதிர்ப்பல்ல; நமது உயர்கல்வித் துறை அமைச்சர் நேற்று (6.1.2022) தமிழ்நாடு சட்டமன்றத்தில் கூறியபடி, இன்றைய பிரதமர் மோடி, குஜராத் முதலமைச்சராக இருந்தபோதுகூட, ஆளுநர், துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் - நடைமுறை கூடாது; அது மாநில முதலமைச்சர் களின் அதிகாரம் என்ற நிலைப்பாட்டினை எடுத்ததுபற்றி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சரின் அறிவிப்பு - வரவேற்கவேண்டிய காலத்தின் கட்டாய அறிவிப்பு!

நமது முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர் களது தமிழ்நாடு சட்டமன்ற அறிவிப்பு -

''மாநிலங்களில் உள்ள பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்கள் நியமனத்தை அந்தந்த மாநில அரசுகளே மேற்கொள்ள வகை செய்யும் தீர்மானத்தை அடுத்து வரும் நிதிநிலை கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும்'' என்ற அறிவிப்பு வரவேற்கவேண்டிய காலத்தின் கட்டாய அறிவிப்பாகும்!

''உறவுக்குக் கை கொடுத்தாலும் - உரிமைக்கு என்றும் குரல் கொடுக்க தி.மு.. தயங்காது'' என்பதைப் பலருக்குப் பிரகடனப்படுத்தும் நல்ல அறிவிப்பாகும்.

விரைந்து செய்க - இந்த நிறைவான செய லுக்குப் பாராட்டும், வாழ்த்தும்!

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்.

சென்னை      

7.1.2022               


No comments:

Post a Comment