புதுதில்லி, ஜன.21- இடஒதுக்கீடு என்பது, தகுதி என்பதற்கு எதிரானதல்ல என்றும் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறுவது மட்டுமே தகுதி அல்ல என்றும், இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் கூறியிருப்பது, இட ஒதுக்கீடு, தகுதி தொடர்பான வரையறைகளில் தெளிவான விளக்கம் அளிப்பதாக அமைந்திருக்கிறது. இளநிலை மருத்துவம் மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய தொகுப்பிற்காக ஒன்றிய அரசிற்கு மாநில அரசுகள் ஒதுக்கும் இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான (ஓபிசி) 27 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என கடந்த 7.1.2022 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்நிலையில் 20.1.2022 அன்று (வியாழன்) உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் இடஒதுக்கீடு ஏன் அவசியம் அளிக்கப்பட வேண்டும் என்பது தொடர்பான காரணங்களை தனது விரிவான தீர்ப்பில் மிகவும் நுட்பமான முறையில் விவரித்துள்ளது.
அந்த அடிப்படையில் இத்தீர்ப்பு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அளித்துள்ள இத்தீர்ப்பில், “சம வாய்ப்பே சமூகநீதி என்பது அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட போதே விவாதித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது. முற்பட்ட வகுப்பினருடன் போட்டியிடுவதற்கு சமுதாயத்தில் பின்தங்கியோருக்கு இருக்கும் தடைகளை நீக்கி உண்மையான சமத்துவத்தை அளிப்பதே இடஒதுக்கீட்டு கொள்கை ஆகும். தகுதியின் அடிப்படையில் எனக் கூறி ஒதுக்கி வைக்கும் அளவுகோல் முன்னேற்றத்திற்கு தடையாக அமைகிறது; அதனால் பாதிக்கப்படுவோரின் கண்ணியத்தை குறைக்கிறது. அரசியல் சட்டம் சம வாய்ப்புக்கு மதிப்பளிக்கிறது. தனி மனிதரின் மதிப்பையும், கண்ணியத்தையும் அங்கீகரிக்கிறது. தகுதி என்பதை குறுகிய வட்டத்திற்குள் வரையறுப்பது சம வாய்ப்பு வழங்குவதற்கு அணை போடுகிறது. இட ஒதுக்கீடு என்பது தகுதிக்கு எதிரானது அல்ல” என்று விவரித்துள்ளனர்.
மேலும், “வளமான குடும்பச் சூழல் காரணமாக உள்ள சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார பின்னணிமூலம் ஒரு சாராருக்கு கிடைக்கும் பயன்களை நுழைவுத் தேர்வுகள் பிரதிபலிப்பது இல்லை. தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறுவது மட்டுமே தகுதி அல்ல. பொது நுழைவுத் தேர்வில் பெறுகிற மதிப்பெண்கள் அடிப்படையில்தான் தகுதி ஏற்படுகிறது என்று குறுகிய வரையறைக்குள் பார்ப்பது பொருத்தமானது அல்ல. இப்படி ஏற்படும் தகுதியானது வெறுமனே வழக்கமான முறையிலான சம வாய்ப்பை மட்டுமே அளிக்கிறது;
தகுதி என்பது இத்த கைய ஒரு போட்டித் தேர்வின் மதிப்பெண்கள் மூலம் மட்டுமே அளவிடப்படக்கூடாது. இந்த அடிப்படையில் “தகுதி” என்று நாம் வரையறை செய்வது குறிப்பிட்ட தரப்புகளைச் சேர்ந்த தனிநபர்களுக்கு அவர்களது குடும்ப ரீதியான வாய்ப்புகள், அவர்கள் சார்ந்த சமுதாயத்தின் அடிப்படையிலான தொடர்புகள் மற்றும் தொடர்ச்சியாக கிடைக்கப் பெற்ற அத்தகைய வாய்ப்புகளின் மூலம் அமையப் பெற்ற பணித்திறன்கள் ஆகிய அனைத்தும் ஒருங்கிணைந்து மொத்தமாக கிடைக்கப் பெற்ற தகுதி என்பதுதான்; இதை வெற்றிக்கானதாக அங்கீகரிப்பது சமூக ஏற்றத்தாழ்வுகளை உறுதி செய்வதும், மறு உற்பத்தி செய்வதுமாக ஆகிவிடும்” என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். இடஒதுக்கீடு தொடர்பாக இன்னும் விரிவாக உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ள இந்தத் தீர்ப்புரை, அரசியல் அரங்கில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
- தீக்கதிர், 22.1.2022
No comments:
Post a Comment