மதவெறியரா திப்பு சுல்தான்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 31, 2021

மதவெறியரா திப்பு சுல்தான்?

இஸ்லாமியர்களை வெறுப்பது - தாக்குவது என்றால் சங்பரிவார்க்குச் சர்க்கரைப்பாகு சாப்பிடுவது மாதிரி; வரலாற்றைத் திரிப்பது என்பது வாழைப்பழம் சாப்பிடுவது மாதிரி; திப்பு சுல்தானைப்பற்றி அவிழ்த்துக் கொட்டும் சரடுகளுக்கும் பஞ்சமில்லை. கருநாடக மாநில பிஜேபி மக்களவை உறுப்பினர் தேஜஸ் சிறீ சூர்யா அப்படித்தான் திப்பு சுல்தானைப் பற்றியும் தவறாகப் பேசியுள்ளார். திப்பு சுல்தான் மறைவைக் கொண்டாட வேண்டும் என்று குதூகலிக்கிறார். உண்மையில் திப்பு சுல்தான் யார்? அவர் இந்து வெறுப்பாளரா?

1782 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது மைசூர் போரில் அய்தர் அலி இறந்து விடவே, அவருடைய மகன் திப்பு சுல்தான் போருக்குப் பொறுப்பேற்று போரில் வென்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டார்.

திப்பு சுல்தானின் ஆட்சிக்குட்பட்ட சிறீரங்கப்பட்டணத்தில் அதுவும் திப்புவின் அரண்மனைக்கு 300 அடி தொலைவில் தான் ஆதி சங்கரரால் தோற்றுவிக்கப்பட்ட சிருங்கேரி சாரதா பீடம் என் அழைக்கப்படும் சங்கர மடம் உள்ளது.

திப்பு சுல்தானும் தன் தந்தை அய்தர் அலியைப் போலவே சிருங்கேரி சங்கர மடத்தினிடம் நல்லுறவு கொண்டிருந்தார் என்று அவர் சங்கர மடத்திற்கு எழுதிய கடிதங்களிலிருந்தும், சங்கர மடத்திலிருந்து திப்புவிற்கு எழுதப்பட்ட பதில் கடிதங்களிலிருந்தும் அறிந்து கொள்ள முடிகிறது.

திப்பு 1790 முதல் 1799இல் இறக்கும் வரை சிருங்கேரி சங்கர மடத்திற்கு இருபத்தியொரு கடிதங்கள் எழுதியிருந்தார். அவை அனைத்தும் பழைய கன்னட மொழியிலானவை. அக்கடிதங்கள் அனைத்தும் இன்றும் சிருங்கேரி சங்கர மடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

சங்கர மடத்திலிருந்து திப்புவிற்கு எழுதப்பட்ட பதில் கடிதங்கள் அனைத்தும் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டிருந்தன. திப்புவிற்கு ஓரளவு சமஸ்கிருதம் தெரியும். எனினும் தன்னுடைய பார்ப்பன அமைச்சர்கள் மூலம் திப்பு அவற்றைப் படித்து அறிந்து கொண்டு சங்கர மடத்திற்கு தேவைப்பட்டபோதெல்லாம் உதவிகளைச் செய்துள்ளார். இந்தக் கடிதங்கள் முழுவதும் மைசூர் ஆவணக் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

திப்பு சுல்தான் சங்கர மடத்திற்குக் கடிதம் எழுதும் போது ஒவ்வொரு முறையும் மிகுந்த மரியாதை கொடுத்து பணிவான வணக்கத்துடன் எழுதுவார். திப்பு 1790இல் சிருங்கேரி சங்கராச்சாரிக்கு எழுதிய முதல் கடிதத்தில் "ஸ்ரீமத் பரமாம்ச பரிவர ஆச்சாரிய சிருங்கேரி சச்சிதானந்த சாமிகளுக்குத் திப்புவின் வணக்கங்கள்" என்றுதான் தொடங்கியுள்ளார். தன் நாட்டு மக்களைப் பாதுகாக்க ஈசுவரனை வேண்டும்படி அக்கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார். 1791இல் மராட்டிய தளபதி பரசுராமபாகு என்பவர் தலைமையில் சிருங்கேரி சங்கரமடம் கொள்ளை அடிக்கப்பட்டது. அப்போதே சுமார் 60 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் களவாடப்பட்டன. அத்தோடு நில்லாமல் அவர் சாரதா தேவியின் சிலையையும் புரட்டிப் போட்டார். அங்கிருந்த பார்ப்பனக் குருக்களையும் கொன்றார். அந்த மராட்டிய தளபதி. கார்கிலாவுக்கு ஓடி ஒளிந்து கொள்ள வேண்டிய நிலை சங்கராச்சாரிக்கு அன்று ஏற்பட்டது.கார்கிலாவிலிருந்து தமக்கு உதவும்படி திப்புவிற்குக் கடிதம் கொடுத்தனுப்பியிருந்தார் சிருங்கேரி சங்கராச்சாரி. (சிருங்கேரி சங்கர மட கடித எண்கள்: 54,55, New History of Marathas by sardesi G.S. Volume III P.180) 

அக்கடிதத்திற்கு திப்பு பதில் கடிதம் எழுதி உள்ளார். அது வருமாறு:

"புனித இடங்களை அழிப்பவர்கள் தங்களது தீய செயல் களுக்கான பலனை அனுபவிப்பார்கள். குருவுக்குத் தீமை செய்பவர்களுக்கு அழிவே உண்டாகும். சாரதா பீடம் மீண்டும் அமைய 200 ரஹாடி ரொக்கமாகவும், 200 ரஹாடி பொருட்களாகவும், 200 ரஹாடி தானியமாகவும் வழங்கியுள்ளேன். மேலும் நிதி தேவையெனில் கொடுக்கும் படி கிராம நிர்வாக அலுவலர்க்கு உத்திரவிட்டுள்ளேன்" என திப்பு சிருங்கேரி சங்கராச்சாரிக்கு எழுதி உள்ளார். (திப்புவின் கடித எண்: 47)

சிருங்கேரி சங்கராச்சாரி மீண்டும் உதவி கேட்டு திப்புவிற்குக் கடிதம் கொடுத்து அனுப்பியிருந்தார். அதைப் பெற்றுக் கொண்ட திப்பு, "சுவாமிகளுக்கு... உங்கள் கடிதம் வேலூர் வெங்கட்ராம ஜோய்ஸ் மற்றும் அகோபில சாஸ்திரிகள் மூலம் கிடைத்தது. செய்தியை தெரிந்து கொண்டேன். உங்களுக்காகப் பல்லக்கு ஒன்று அனுப்பி உள்ளேன். உங்களுக்கு மேலும் நிதி உதவி அளிக்கும் படி நகர நிர்வாகத்திற்கு உத்தர விட்டுள்ளேன்" என எழுதியுள்ளார் (திப்புவின் கடித எண்: 48). நரசிம்ம சாஸ்திரி மூலம் சங்கர மடத்திலிருந்து திப்புவிற்கு மீண்டும் கடிதம் கொடுத்தனுப்பப்பட்டது. அக்கடிதத்தைப் பெற்றுக் கொண்ட திப்பு, 200 ரஹாடி நெல் மற்றும் சாரதா தேவிக்கு அணிவிக்க விலையுயர்ந்த பட்டுப் புடவையையும், மேலாடையையும், சங்கராச்சாரியின் சொந்த பயன்பாட்டிற்கு விலையுயர்ந்த இரண்டு சால்வைகளையும் அசாப் என்பவர் மூலம் அனுப்பி வைத்துள்ளார். (திப்புவின் கடித எண்: 49)

சிருங்கேரி சங்கராச்சாரி மீண்டும் உதவி கேட்டுத் திப்புவிற்குக் கடிதம் எழுதி உள்ளார். அக்கடிதத்தைப் பெற்றுக் கொண்ட திப்பு, நாராயணன் என்பவர் மூலம் யானை ஒன்றையும், புதிதாக வெளியிட்ட நாணயங்கள் பலவற்றையும் கொடுத்தனுப்பி உள்ளார். இதனுடன் கூடுதலாக நிதியும் அனுப்பி வைத்தார். அன்னை சாரதா தேவியின் கோவிலை விரைவில் கட்டி முடித்துக் குடமுழுக்கு நடத்த வேண்டிக் கொண்டார். (திப்புவின் கடித எண் : 50)

அதே கடிதத்தில் திப்பு மேலும்,  1000 பார்ப்பனர்களை அழைத்து 40 நாள்களுக்கு சாஸ்திரா சண்டி ஜபம் செய்ய வேண்டிக் கொண்டார். இதற்கான முழு செலவையும் தாமே ஏற்றுக் கொள்வதாக எழுதியுள்ளார். நாட்டின் எதிரிகளை அழிக்க இந்த ஜபம் பயன் படுமென திப்பு சங்கராச்சாரிக்கு  அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். கடித எண்கள் 51, 52, 53 ஆகியவற்றிலும் சாஸ்திரா சண்டி ஜபம் நல்ல முறையில் நடத்துவது குறித்த ஏற்பாடுகளைப் பற்றியே கூறி உள்ளார்.

சிருங்கேரி மடத்தின் சாரதா தேவி கோவிலின் திருவிழாவிற்காக திப்பு தங்கத் தகட்டாலும், வெள்ளிக் குழிழ்களாலும் செய்யப்பட்ட பல்லக்கு ஒன்றை அன்பளிப் பாகக் கொடுத்துள்ளார் என்பதை அவருடைய கடிதம் வாயிலாக அறிய முடிகிறது. (திப்புவின் கடித எண் : 59).

உண்மை இவ்வாறு இருக்க முசுலிம் என்ற ஒரே காரணத்துக்காக சங்கிகள் திப்பு சுல்தான்மீது தீதானவற்றை வாரி இறைப்பது ஏன்? இந்துத்துவா வெறிதானே!

No comments:

Post a Comment