சென்னை,நவ.17- தமிழ்நாடு உயர்கல்வித்துறை அரசு முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அரசாணையில், அரசு பள்ளிகளில் படித்து 7 புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் தொழிற்கல்லூரிகளில் சேரும் மாணவர் களின் கல்விக்கு ஆகக்கூடிய செலவினங்களை அரசே ஏற்றுக் கொள்ளும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அறிவித்ததை குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி 2021- 2022 ஆம் கல்வி ஆண்டிற்கான பொறியியல் மாணவர் சேர்க்கையில், 7 புள்ளி 5 சதவீத முன்னுரிமை அடிப்படையில் 7 ஆயிரத்து 876 பேர் இடம் பெற்றுள்ளதாகவும், அவர்களுக்கு கட்டணம் செலுத்துவதற்காக 74 கோடியே 28 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப் பிட்டுள்ள தமிழ்நாடு அரசு, 2021-2022 ஆம் கல்வி ஆண்டில் தரச்சான்று பெறாத படிப்புகளுக்கு 50 ஆயிரமும், தரச்சான்று பெற்ற படிப்புகளுக்கு 55 ஆயிரமும், ஒருமுறை பெறப்படும் வளர்ச்சி நிர்வாக நிதியாக 5 ஆயிரமும் வழங்கப்படும் என்றும், கல்வி கட்டணக்குழு நிர்ணயித்துள்ள வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி கட்டண தொகை வழங்கப்படும் எனவும்
தெரிவித்துள்ளது.
விடுதிக்கு அதிகபட்சமாக 40 ஆயிரம் ரூபாய் கட்டணமாக வழங்கப்படும் என்றும், இதில் கல்லூரி வசூலிக்கும் விடுதி கட்டணம் குறைவாக இருந்தால் அந்த தொகை வழங்கப்படும் எனவும் கூறியுள்ள தமிழ்நாடு அரசு, போக்குவரத்து கட்டணமாக பேருந்துகளை பயன்படுத்தும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும், இதில் கல்லூரி வசூலிக்கும் பேருந்து கட்டணம் குறைவாக இருந்தால் அந்த தொகை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட அரசுப்பள்ளி மாணவர்களிடம் இருந்து எந்தவித கட்டணத் தையும் கல்வி நிறுவனங்கள் வசூலிக்கக் கூடாது என்றும், மீறினால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தொழில்நுட்பக் கல்வி இயக்ககத் துக்கு உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
No comments:
Post a Comment