தமிழ்நாட்டில் புதிதாக பொறுப்பேற்றுள்ள திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் நடைபெற்றுவரும் அனைத்து அரசு நடவடிக்கைகளும் மக்களுக்கும், நாட்டுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகின்றன. கடந்த பத்தாண்டுகளுக்கு முன் முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் கொண்டு வரப்பெற்ற பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டதும், திட்டங்களை பாழ்படுத்தியதும் அதிகம், அதற்கு ஒரே காரணம் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டவை என்பதும்தான். காழ்ப்புணர்ச்சிதான் மேலோங்கி நின்றது. குறிப்பாக புதிதாக கட்டப்பட்ட சட்டமன்ற கட்டடம், அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம், உழவர் சந்தைகள், சேது சமுத்திரத் திட்டம், இதில் ஒன்றுதான் பெரியார் நினைவு சமத்துவபுரங்கள்.
இவையாவும் கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டும், பராமரிக்கப்படாமலும், பாதுகாக்கப்படாமலும், ஏனோ தானோ என்று இருந்து வரும் நிலையில் 21.6.2021இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் உரையில் உழவர் சந்தைகள் மேம்படுத்தப்படும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சியான ஒன்றாகும். அதேபோன்று முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ்நாடு முழுவதும் கொண்டுவந்த பெரியார் நினைவு சமத்துவபுரங்கள். இந்த திட்டத்தின் மூலம் பல ஏழை எளிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பயனடைந்தனர். இப்பொழுது அந்த சமத்துவபுரங்கள் பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் கவனிப்பாரற்று, பொலி விழந்து உள்ளன. குறிப்பாக அங்கு உள்ள வீடுகள், தந்தை பெரியார் பெயர் தாங்கிய வளைவுகள், அங்கு அமைந்து செயல்படாமல் இருக்கும் நூலகங்கள், தந்தை பெரியார் சிலை, பூங்காக்கள் இவையாவும் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன.
எனவே தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களிடம், தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரங்களின் வளைவுகள் புதுப்பொலிவு பெற வேண்டும், பெரியாரின் சிலைகள் வர்ணம் பூசி ஜொலிக்க வேண்டும், நூலகங்களில் பணியாளர்களை நியமனம் செய்து வாசகர்கள் வருகையை உயர்த்த வேண்டும், சிதிலமடைந்த வீடுகள், சாலைகளை செப்பனிட்டு சீர்படுத்த வேண்டும், என்று தமிழர் தலைவர் ஆசிரியர் வழியாகவும், விடுதலை நாளிதழ் மூலமாகவும் கோரிக்கை வைத்து வேண்டுகிறோம்
- மு.க.ஜீவா
ப.க. மாவட்ட செயலாளர், நாகப்பட்டினம்
No comments:
Post a Comment