முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் திருச்சி மாவடியானுக்கு நமது வீர வணக்கம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 15, 2021

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் திருச்சி மாவடியானுக்கு நமது வீர வணக்கம்!

திராவிடர் கழகத்தின் பல போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்ற போராட்ட வீரரும், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும், திருச்சி சாமி. கைவல்யம் முதியோர் இல்லத்தில் தனது இறுதி வாழ்க்கையைக் கழித்து வந்தவருமான மானமிகு தோழர் (பெருகமணி) மாவடியான் (வயது 97) அவர்கள் நேற்று (14.10.2021) காலமானார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறோம்.

பெருகமணி கிராமத்தைச் சேர்ந்த அவர் இளைஞராக இருந்தபோதே, தந்தை பெரியாரது கொள்கையை ஏற்று இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர். தமது 97 வயதிலும் கடைசிவரை உழைத்தவர். திருச்சி சாமி. கைவல்யம் முதியோர் இல்லத்தில் இருந்த நிலையிலும் அவர் நல்ல அச்சுக்கோர்ப்பு, பைண்டிங் கட்டுப்பயிற்சி அனுபவம் மிக்கவர் என்பதால் உழைக்கச் சளைக்காதவர்; 'விடுதலை' திருச்சி பதிப்பிற்குத் தனது உழைப்பை வலிய வந்து தந்த ஒரு கொள்கைத் திருமகன் ஆவார்.

எடுத்துக்காட்டான இலட்சிய வீரர். இயக்கத்தின் எந்த நூலையும் பணம் கொடுத்தே பெறுவார். இயக்கத்திற்கு நன்கொடையை தன்னுடைய சிறு சேமிப்பிலிருந்து தருவதற்குத் தயங்காத அதிசயமானவர்.

தந்தை பெரியார், அன்னை .வெ.ரா. மணியம்மையார் மற்றும் நம்மிடமும், நம் இயக்கப் பொறுப்பாளர்களிடமும் மிகுந்த பாசத்துடனும், அன்புடனும் பழகும் பான்மையர்.

97வயது வரை வாழ்ந்தவர் என்றாலும், அவரது இழப்பு ஈடு செய்ய இயலாத ஒரு இழப்பு. அவரது குடும்பத்தைவிட நம் இயக்கத்திற்கும், தனிப்பட்ட முறையில் நமக்கும் என்றாலும், இயற்கை நியதியை ஏற்கத்தானே வேண்டும்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், (இரண்டு மகள்கள், இரண்டு மகன்கள்), திருச்சி மாவட்டத் தோழர்கள், சாமி. கைவல்யம் முதியோர் இல்லவாசிகள் அனைவருக்கும் நமது ஆறுதலும், ஆழ்ந்து இரங்கலும்.

நமது வீர வணக்கம்! வீர வணக்கம்!!

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

15-10-2021

No comments:

Post a Comment