மானமிகு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் முயற்சியால், ஒன்றிய அமைச்சரவையில் இருந்தபோது 2004 ஆம் ஆண்டில் தமிழ் மொழியை ‘செம்மொழி’ என்று அறிவித்து, அதன் வளர்ச்சிக்கான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு மைசூரில் இயங்கி வரும் இந்திய மொழிகள் மத்திய நிறுவனத்தில், செம்மொழித் தமிழ் உயர் ஆய்வு நிறுவனம் தொடங்கப்பட்டது. பின்னர் சென்னையில் செம்மொழி தமிழ் ஆய்வு மத்திய நிறுவனமாக 2007ஆம் ஆண்டில் இருந்து செயல்படத் தொடங்கியது. இதன் தலைவராக தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பில் இருப்பவர்கள் செயல்பட விதிமுறைகள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.
ஒன்றிய பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற பின்னர் கடந்த சில ஆண்டுகளாக செம்மொழி தமிழ் ஆய்வு மத்திய நிறுவனத்தின் செயல்பாடுகள் முடக்கப்பட்டன. ஏற்கெனவே 12 துறைகளாக இயங்கி வந்த செம்மொழி நிறுவனத்தை சீர்குலைத்து, வெறும் 7 தற்காலிகத் திட்டங்களாகச் சுருக்கிவிட்டனர். இந்நிறுவனம் தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளியிட்டு வந்த செய்தி இதழ்கள் நிறுத்தப்பட்டன. செம்மொழி ஆய்வுப் பணிகள் மற்றும் அவற்றை மேம்படுத்தும் வகையில் நடத்தப்படும் கருத்தரங்குகள், பயிலரங்குகள் ஆகியவற்றுக்கு வழங்கி வந்த நிதியையும் முற்றிலும் நிறுத்திவிட்டது.
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் முடக்கப் பட்டதை எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமை யிலான முந்தைய தமிழ்நாடு அரசும் கண்டும் காணாமல் விட்டது. அதன் தொடர்ச்சியாக ஒன்றிய அரசு இந்தியாவில் இந்தி, சமஸ்கிருதம் தவிர்த்த பிற மொழிகள் சார்ந்த நிறுவனங்கள் அனைத்தையும் அந்தந்த மாநிலங்களில் உள்ள மத்திய பல்கலைக் கழகங்களுடன் இணைக்க வேண்டும் என்ற ‘நிட்டிஆயோக்’ பரிந்துரையைச் செயல்படுத்த முனைந்தது.
அதன்படி செம்மொழி தமிழ் ஆய்வு மத்திய நிறு வனத்தை திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக் கழகத்துடன் இணைப்பதற்கு 2017 இல் அறிவிப்பு வெளி யிடப்பட்டது. இதற்காகவே செம்மொழி தமிழ் ஆய்வு மத்திய நிறுவனத்திற்கு நிரந்தர இயக்குநர் நிரப்பப்படாமல் ஒன்றிய அரசு (தமிழுக்குச் சம்பந்தமேயில்லாத) பொறுப்பு இயக்குநராக ஒன்றிய அரசின் அதிகாரிகளை நியமித்தது.
அரசியல் கட்சிகளும் தமிழ் ஆய்வாளர்கள், தமிழ் அறிஞர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால், திருவாரூர் மத்தியப் பல்கலைக் கழகத்தோடு, செம்மொழி தமிழ் ஆய்வு மத்திய நிறுவனத்தை இணைக்கும் திட்டத்தி லிருந்து ஒன்றிய அரசு பின்வாங்கியது. இந்நிலையில், 13 ஆண்டுகளுக்குப் பின்னர் இதற்கு நிரந்தர இயக்குநர், நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், இந்திய மொழிகள் ஆய்வுக்காக மைசூருவில் 1969இல் தொடங்கப்பட்ட இந்திய மொழிகள் மத்திய நிறுவனம் தற்போது மத்தியப் பல்கலைக் கழகம் தற்போது ‘பாரதிய பாஷா விஷ்வ வித்யாலயா என்று மாற்றப்பட்டுள்ளது
இதையடுத்து செம்மொழி சிறப்பு பெற்றுள்ள தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒடியா ஆகிய மொழித் துறைகளை புதிதாக தொடங்கப்படும் பாரதிய பாஷா விஷ்வ வித்யாலயாவுடன் இணைத்து மொழி ஆய்வுப் பணிகளைத் தொடர, 11 அறிஞர்கள் கொண்ட ஒரு குழுவை ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் மொழிகள் பிரிவு அமைத்துள்ளது. இதன் தலைவராக தலைமைத் தேர்தல் ஆணையராக பணியாற்றி ஓய்வு பெற்ற என்.கோபால்சாமி நியமிக்கப்பட்டு உள்ளார்.
தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஒடியா ஆகிய செம்மொழிகளுக்கு மத்திய மொழி ஆய்வு நிறுவனங்கள் எதுவும் இல்லை. ஆனால் செம்மொழி சிறப்பைப் பெற்ற தமிழ் மொழிக்கு உயர் சிறப்பு மத்திய நிறுவனம் ஒன்றை அப்போதைய முதலமைச்சர் கலைஞர் அவர்களின் முயற்சியால் ஒன்றிய அரசு உருவாக்கியது.
கடந்த 10 ஆண்டு காலம் என்பது ஓர் இருண்ட காலமே! மாநில ஆட்சியின் வேகத்தைப் பொறுத்துத்தான் ஒன்றிய அரசு செயல்பாடுகளில் ஏற்றத்தைக் காண முடியும்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள இச்சூழலில் செம்மொழி நிறுவனம் ஆக்கப்பூர்வமான ஒரு பணியில் ஈடுபட்டு இருப்பது வரவேற்கத்தக்கதாகும். 102 மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்க்கும் முயற்சி என்பதுதான் அந்த ஆக்கப்பூர்வமான அருஞ்செயலாகும்.
சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் தொடர் திருப்பங்கள் நடந்தேறட்டும்! நடந்தேறட்டும்!!
No comments:
Post a Comment