சாதாரண மக்களுக்கும் பயனளித்த வானொலியை முடக்குவதா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 30, 2021

சாதாரண மக்களுக்கும் பயனளித்த வானொலியை முடக்குவதா?

தற்காலிக பணியாளர்கள், கலைஞர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்!

ஒன்றிய அரசு தன் முடிவைக் கைவிடுக

இல்லையெனில் அறப்போராட்டம் தவிர்க்க முடியாததாகிவிடும்!

சாதாரண மக்களுக்கும் பயன ளித்த வானொலியை முடக்குவதா? தற்காலிக பணியாளர்கள், கலை ஞர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்; ஒன்றிய அரசு  தன் முடிவைக் கைவிடவேண்டும்; இல்லையெனில், அறப்போராட்டம் தவிர்க்க முடியாத தாகிவிடும் என்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டில் இன்னமும் - எவ்வளவு தான் தொலைக்காட்சிகளின் ‘‘ஆக்கிர மிப்புகள்'' இருந்தாலும், ஏழை, எளிய மக்கள் முதற்கொண்டு பலதரப்பட்டவர் களும் விரும்பி கேட்டுப் பயன்பெறுவது வானொலி நிகழ்ச்சிகள்மூலமே!

வானொலியின் பயன்பாடு!

வானொலிமூலம் பாமர மக்கள் மத்தி யில் ஏற்பட்ட கல்வியறிவுப் புரட்சி; பொதுத் தகவல் அறிவதிலிருந்து, தேர்தல்  கால முடிவுகளைத் துல்லியமாகக் கேட்டு அறிந்து கொள்வதற்கும் வானொலிகளின் பயன்பாடு மிகவும் சிறப்பானவை என் பதை எவரும் மறுக்க முடியாது.

இந்த நிலையில், ஒன்றிய தகவல் ஒலி பரப்புத் துறையினர் - பிரச்சார் பாரதி நிறுவனம் - தமிழ்நாட்டில் - மதுரை, கோவை, திருச்சி, நெல்லை மற்றும் புதுச் சேரியில் உள்ள வானொலி நிகழ்ச்சி நிலையங்களின் சொந்த நிகழ்ச்சி தயாரிப் புகளை இம்மாதத்துடன் முடக்க முடிவு செய்திருப்பதாக வரும் செய்தி மிகவும் அதிர்ச்சியையும், வேதனையையும் தரு கிறது!

தமிழ்நாட்டின் பன்முகத் தன்மையை எதிரொலிக்கும் இந்த வானொலி நிலை யங்களின் நிகழ்ச்சிகளை முடக்குவது - நிதிப் பற்றாக்குறை காரணமாக என்று கூறு வது ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாதது ஆகும்.

வாழ்வாதாரங்கள் பாதிப்பு

இந்த வானொலி நிலையங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தற்காலிகப் பணியாளர்கள் பணியில் உள்ளனர். நிகழ்ச்சிகள் வட்டார கலாச்சாரங்களைப் பிரதிபலித்தும், பல இசைக்கலைஞர்கள், இலக்கியப் படைப்பாளர்கள், நாடகக் கலைஞர்கள் உள்ளிட்ட பலருக்கும் வாய்ப்புகளைத் தந்து, பொழுதுபோக்கு அம்சங்களைத் தாண்டி, அறிவார்ந்த வகுப்புகளில் அமரும் மாணவர்களைப் போல, செவிவழிப் பாடங்கள் போல பலவற்றைக் கேட்டு, கற்று மகிழும் வாய்ப் பும், அவர்தம் வாழ்வாதாரங்களும் இத்தகையதொரு முடிவால் அடியோடு கேள்விக்குறியாகி விடக்கூடும்!

தமிழ்நாட்டு விவசாயிகள் வெகு நீண்ட காலமாக வேளாண் செய்திகளை யும், கால நிலைக்கேற்ற வல்லுநர்களின் அறிவுறுத்தல்களைக் கேட்டு பயிர்த் தொழிலை செம்மைப்படுத்தி, சீர்மிகு வாழ்வினைப் பெறுவதையும்கூட இந்த முடக்கும் திட்டம் தடுப்பதாக அமையும் ஆபத்து இருக்கிறது.

வேளாண் தொழில் சார்ந்த வழி காட்டுதல் என்ற அரிய வாய்ப்புக் கத வுகள் அடைக்கப்படவே இந்த விபரீத யோசனை, விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்; விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவர்.

ஏற்கெனவே, நாடகக் கலைஞர்கள், தெருக்கூத்துக் கலைஞர்கள் உட்பட பலரும் கரோனா காலத்து தொற்று, அரசு அறிவித்த ஊர் முடக்கம் காரணமாக, தங்கள் வாழ்வை வறுமையின் குடியிருப் பாக்கி, மூச்சுத் திணறி, சிலர் தற்கொலை முடிவுக்குக்கூட தள்ளப்படும் நிலையில், இது மேலும் அந்த வெந்தப் புண்ணில் வேலைச் சொருகுவதாகவே ஆகிவிடக் கூடும்.

தவறான முடிவைக் கைவிடுக!

எனவே, ஒன்றிய அரசின் தகவல், ஒலிபரப்புத் துறையைச் சார்ந்த பிரச்சார் பாரதி இந்தத் தவறான முடிவைக் கைவிட்டு, பழைய நிலையே தொடரும் என்ற முடிவினை மேற்கொள்ளவேண் டுமென ஒன்றிய அரசினை கோடான கோடி கேட்பாளர்கள் - விவசாயிகள் - வானொலிக் கலைஞர்கள் - நுகர்வோர் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

முடிவை மாற்றிக் கொள்ள மறுத்தால், அவர்களைத் திரட்டி, அறப்போராட்டம் நடத்துவதும் தவிர்க்க இயலாததாகிவிடக் கூடும் என்பதை அறிவிக்கிறோம்.

 

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்.

சென்னை

30.9.2021

No comments:

Post a Comment