மறைந்த டாக்டர் எம்.எஸ்.இராமச்சந்திரன் அவர்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 24, 2021

மறைந்த டாக்டர் எம்.எஸ்.இராமச்சந்திரன் அவர்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கல்!

சென்னையில் பிரபல மருத்துவராக சுமார் அரை நூற்றாண்டுக்குமேல் பணிபுரிந்தும், மருத்துவத் தொண்டாற்றிய வருமானMSRஎன்று பலராலும் அழைக்கப்படும் டாக்டர் எம்.எஸ்.இராமச்சந்திரன் அவர்கள்  (வயது 89) தலைசிறந்த மருத்துவர் மட்டுமல்ல; எடுத்துக்காட்டான பண்பானவராவார். அவர் சென்னை அரசினர் பொது மருத்துவமனையில் - இன்றைய இராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் முதல் மருத்துவராக First Physician என்று உழைப்பால் உயர்ந்து, பல ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றார்; பிறகு, தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மெம்பராக நியமிக்கப்பட்டு, அதில் முத்திரை பதித்தவர்.

அகில இந்திய அளவில் உள்ள மருத்துவப் படிப்பான நேஷனல் போர்டு படிப்புக்கான தேர்வு அமைப்பின் துணைத் தலைவராக, பல ஆண்டுகள் இருந்து தொண்டு செய்தவர். அவரது மறைவுச் செய்தி (23.9.2021) எங்களை மிகவும் தாக்கியது.

எவரிடமிருந்தும் எதையும் தெரிந்துகொள்ள வாழ்வின் இறுதிவரை முயன்ற அவர், எல்லோருக்கும் மருத்துவ அறிவையும், பொது அறிவையும் பரப்பிய பண்பு நலன் மிக்கவர்.

அடக்கமானவர்; ஆழமானவர்; பழகுவதற்கு மிகவும் அருமையானவர். பல கல்வி நிலையங்களில் (எத்திராஜ் கல்லூரி போன்றவற்றில்) நிர்வாகக் குழுவின் டிரஸ்ட்டிகளில் ஒருவராக இருந்தவர்.

அறிவியல், மின்னணுவியல் வளர்ச்சியை வியந்து பாராட்டி, தானும் கற்று, மற்றவர்களுக்கும் பரப்பிய வாழ்நாள் கற்றுத் துறை போகிய நல்லறிஞர்.

அவர் பல ஆண்டுகளாக என்னை - எங்களை - வாழ வைத்த டாக்டர் மட்டுமல்ல - எந்தப் பிரச்சினையிலும் நல்ல அறிவுரை, அறவுரை கூறும் மதிநுட்பம் உள்ள ஓர் ஒப்பற்ற மாமனிதர்.

அவரது மறைவு, அவரது அன்புத் துணைவியார் பண்புமிக்க அம்மா திருமதி. முத்துலட்சுமி  அவர்களுக்கும், அவரது சகோதரர்கள் வழக்குரைஞர் எம்.எஸ். ராஜசேகரன், பொறியாளர் எம்.எஸ்.சீனுவாசன் மற்றும் சகோதரிகள் - குடும்பத்தினர் ஆகியோருக்கு மட்டும் இழப்பல்ல; மருத்துவ உலகிற்கும்கூட பேரிழப்பு ஆகும். உலகம் முழுவதும் அவரது மாணவர்கள் இருக்கிறார்கள்.

பிரபல டாக்டர் .இராஜசேகரன் அவர்களும், டாக்டர் எம்.எஸ்.ஆர். அவர்களும், நானும் ஒரு முக்கூட்டு நண்பர்கள் என்ற வற்றாத நட்பு எங்களுக்குள் எப்போதும் உண்டு.

எது தவிர்க்க இயலாததோ அதனை ஏற்கத்தான் வேண்டும் என்பது இயற்கை விதி.

அவரது மறைவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து, அடக்க முடியாத துயரத்தை அடக்கிக்கொண்டு, எமது நன்றிக் கண்ணீருடன் அவரை வழியனுப்புகிறோம்.

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்.

சென்னை

24.9.2021

No comments:

Post a Comment