கேள்வி : பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை எடுத்த நிலையில், இனி வருங்காலத்தில் உங்களுடைய இயக்கத்தின் பணி என்ன?
- முகிலன், சென்னை-14
பதில்: முக்கியப் பணிகள்.
1) ‘ஜாதி’ என்ற சொல்லை இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ‘தீண்டாமை’க்குப் பதிலாக - அரசமைப்புச் சட்டத் திருத்தம் செய்து, ‘ஜாதி ஒழிப்பை’ சட்டப் பூர்வமாக ஆக்குதல் - தந்தை பெரியார் நிறைவேற்றிய (1973) தீர்மானத்துக்கு செயல்வடிவம் கொண்டு வருதல்.
2) சமூகநீதிக்கு ஏற்பட்டுள்ள தளைகளை, தடைகளை நீக்கி, தனியார் துறையிலும் இடஒதுக்கீடு, சமூகநீதி - இடஒதுக்கீடு கண்காணிப்புச் சட்டம் இயற்ற ஒன்றிய, மாநில அரசுகளை வற்புறுத்தல்.
3) பெண்களுக்கான சமத்துவ, சமவாய்ப்புச் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ளவைகளை உடனடியாக நிறைவேற்ற மக்களைத் திரட்டி அறப்போர்களை நடத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
4) அறிவியல் மனப்பான்மை - பகுத்தறிவுக் கண்ணோட்டத்தோடு பரப்புவதற்கான பிரச்சாரம் தீவிரமான முறையில் - வரும் ஆண்டுகளில்.
கேள்வி : அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் பணி நியமன ஆணை வழங்கப்பட்டதும் பார்ப்பனர்களின் எதிர்ப்பு எழுவது ஏன்?
- சொர்ணா, திருநெல்வேலி
பதில்: அவர்களின் ஆதிக்கம் சரியும்போது எரிச்சல் ஏற்படுகின்றது. ‘அவாளின்’ உயர்நிலை இந்த ஆதிக்கம், கொள்ளை இவற்றில் தானே!
கேள்வி : சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தி.மு.க. உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் சட்டப்பேரவை முதல் பேச்சு எதைக் காட்டுகிறது?
பதில்: நல்ல முறையில் பக்குவப்பட்டு வருகிறார். நம்பிக்கையுள்ள எதிர்காலம் ஆகி எதிர்பார்ப்புக்கு மேலேயே சாதிப்பார்.
கேள்வி : 50 லட்சம் மக்கள் தொகை கொண்ட நியூசிலாந்து நாட்டில் ஒரே ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவித்திருப்பது சரியான நடவடிக்கையா?
- சீ. முனியம்மாள், வெங்கோடு.
பதில்: அவர்களது பொறுப்புணர்ச்சி, மக்கள் நலம் சார்ந்த கவலையைக் காட்டுகிறது.
கேள்வி : விண்ணப்பித்து பெறுவது விருது அல்ல. அறிஞர்கள் விருது பெற விண்ணப்பிக்கும் நடைமுறையை மாற்ற வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியிருப்பது சரியான பார்வையா?
- இர.கார்த்தி, மேடவாக்கம்.
பதில்: சரியானது தான். தானே வந்து கதவை தட்டினால் தான் அவை ‘விருதுகள்’ - மற்றவை சற்று ‘பழுதுகள்’ தான்!
கேள்வி: மருத்துவம் மற்றும் தொழில் படிப்புகளில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், உதவி பெறும் பள்ளிகள் கோர முடியாது என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது நியாயப்படி சரியா?
- ம.அருள்ஜோதி, மேட்டுக்குப்பம்.
பதில்: ஏற்புடையதல்ல. தத்துவத்தில், பாடத்திட்டத்தில் இரண்டும் ஒன்றே! நிர்வாக அமைப்பில் மட்டுமே மாறுபாடு. அப்படி இருக்கையில் இப்படி பாரபட்சம் காட்டுவது நியாயமல்ல.
கேள்வி : மக்கள் பிரதிநிதிகள் ஒன்றிய அரசுக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுதினால் ஆங்கிலத்தில்தான் பதிலனுப்ப வேண்டும். ஹிந்தியில் அனுப்புவது அலுவல் மொழிச் சட்டத்திற்கு எதிரானது என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பு அளித்துள்ளதே - இனியாவது திருந்துவார்களா?
- சி.இளையராஜா, பிலாக்குறிச்சி.
பதில்: தூங்குகிறவர்களை எழுப்ப முடியும்; தூங்குவதுபோல பாசாங்கு செய்வோரை எப்படி எழுப்ப முடியும்?
சென்னை உயர்நீதிமன்ற ஆணை ‘செவிடன் காதில் ஊதிய சங்காக’ முடிந்து விடக்கூடாது.
கேள்வி : விவசாயிகளின் வியர்வையில் விளைந்த நெல்மணிகளை அரசு உரிய நேரத்தில் கொள்முதல் செய்யாததால், அவை மழைநீரில் நனைந்து வீணாகின்றன. இதனால் பொருளாதார இழப்பு மட்டுமன்றி நாட்டில் உணவுப் பற்றாக்குறையும் ஏற்படும் அல்லவா? இத்தகைய அவலநிலையைக் களைய அரசு முன்வருமா?
- பெ. அங்காளம்மாள், திருவொற்றியூர்.பதில்: நிறைய பாதுகாப்பு கிடங்குகளைக் கட்டி குறைந்த வாடகைக்கு விட்டு - தற்காலிகமாக சேமிப்பு - பாதுகாப்புக்குத் துணை புரியலாம். தனியாரையும் கூட வாடகைக் கட்டுப்பாட்டுக்குள்ளாக்கி அனுமதிக்கலாம்! விவசாயிகள் நலன் பேணலாம் - கொள்முதல் நட்டமாகாது!
கேள்வி : நடப்பு கூட்டத்தொடரிலேயே ‘நீட்’ தேர்வுக்கு எதிராக சட்ட முன்வடிவு கொண்டுவரப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித் துள்ளாரே! இந்த சட்டமுன்வடிவுக்காவது ஒப்புதலளிக்கப்படுமா?
- த.மணிமேகலை, வீராபுரம்,
பதில்: முயற்சி திருவினையாக்கும்! அறப்போர், சட்டப்போர், தொடரவே செய்யும்!
No comments:
Post a Comment