எது ‘களை?' எது ‘பயிர்?' என்று பிரித்துப் பார்க்கத் தெரியவேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 26, 2021

எது ‘களை?' எது ‘பயிர்?' என்று பிரித்துப் பார்க்கத் தெரியவேண்டும்

 பேராசிரியர் சி.வெள்ளையன் அவர்களின் 49 ஆம் ஆண்டு நினைவு நாளில் தமிழர் தலைவர் விளக்கவுரை

சென்னை, மே 26 எதுகளை?' எதுபயிர்?' என்று பிரித்துப் பார்க்கத் தெரியவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

பேராசிரியர் வெள்ளையன் அவர்களின் 49 ஆம் ஆண்டு நினைவு நாள் உரை

கடந்த 30.4.2021 மாலை 7 மணியளவில் பேரா சிரியர் வெள்ளையன் அவர்களின் 49 ஆம் ஆண்டு நினைவு நாளில்  ‘‘சுயமரியாதை இயக்கம் - நீதிக்கட்சி - பொதுவுடைமை இயக்கம்பற்றிய தந்தை பெரியாரின் அரிய விளக்கமும் - இன்றைய தொடர்ச்சியும்'' என்ற தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆய்வுரையாற்றினார்.

அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

மூன்றாவது நபர் எழுதுவதுபோன்று தலையங்கத்தை எழுதுவார்!

தந்தை பெரியார் அவர்கள்குடிஅரசு' இதழில் தலை யங்கம் எழுதுவார். அப்படி எழுதும்பொழுது தலையங் கத்தில் கையெழுத்து இருக்காது. அதற்கு மாறாக, மூன்றாவது நபர் எழுதுவதுபோன்று தலையங்கத்தை அவரே எழுதி னாலும்கூட - அவரைப்பற்றிய குறிப்புகள்கூட அதில் இடம் பெறும். அவருடைய நிலைப்பாட்டைப்பற்றி விளக்கப் படுத்துவார்கள்.

அப்படிப்பட்ட ஒன்றை உங்களுக்குச் சொல்கிறேன்.

.வெ.ரா. விளக்கம் என்ற தலைப்பிலே, பொதுவுடை மைப் பிரச்சாரத்தை நிறுத்திக் கொண்டதற்கான காரணங் களைப்பற்றியெல்லாம் சொல்கின்ற நேரத்தில், விளக்கிச் சொல்லியிருக்கின்றார்.

அதோடுகூட சுயமரியாதை இயக்கத்தின் வேலைத் திட்டம் இன்னது என்பதைப்பற்றி 10.3.1935 ஆம் தேதிகுடிஅரசு' இதழில் விளக்கியுள்ளார். இதையே திருச்சி ஜில்லா சுயமரியாதை மாநாட்டிலும் விளக்கமாக எடுத்துக் கூறியிருக்கிறார்.

தந்தை பெரியாரின் விளக்கம்!

பொதுவுடைமைப் பிரச்சார சம்பந்தமான இதற்கு மேல் சமாதானம் கூற முடியாது என்று நாம் சொல்லிக் கொண்டு வருகின்ற நேரத்தில், ஜஸ்டிஸ் கட்சியை ஆதரித்ததை குற்றம் சொல்லுகின்ற நேரத்தில் விளக்கம் சொல்லுகிறார்.

அன்றைய விளக்கம், இன்றைய, நாளைய அரசி யலுக்கும் தெளிவு என்ற காரணத்தால்தான், இந்தத் தலைப்பு இன்றைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக் கிறது.

அந்த வகையில், இந்தப் பகுதியை எல்லோரும் கூர்ந்து கவனியுங்கள்.

ஜஸ்டிஸ் கட்சிக்கும், சுயமரியாதை இயக்கத்திற்கும் எப்படி தொடர்பு? எப்படிப்பட்ட உறவு? இது தெளிவாகத் தெரிந்தால், திராவிடர் கழகம் - திராவிட முன்னேற்றக் கழகம் என்று இன்றைய சூழலில், ஒன்று சமுதாய இயக்கம் - இன்னொன்று ஒரு அரசியல் கட்சி. இவை இரண்டிற்கும் இருக்கக்கூடிய சூழல்களை, ஒரு பக்கத்தில் நீங்கள் திரைப்படம் ஓடுவதைப்போல, அதை சிந்தித்துக்கொண்டே இந்தக் கருத்தை கேளுங்கள், அதுதான் மிக முக்கியமானது.

29.3.1936 ‘குடிஅரசு' இதழ் தலையங்கம்!

29.3.1936 ஆம் ஆண்டு தந்தை பெரியார் அவர்கள்குடிஅரசு' இதழில் எழுதியதை இங்கே நான் படிக்கின்றேன், கேளுங்கள்!

‘‘ஜஸ்டிஸ் கட்சியை ஆதரிக்கவேண்டியது தமது கடமை என உணர்வதாக பெரியார் அவர்கள் சுமார் 15 வருஷமாகவே கூறி வருகிறார். அன்றியும், ஜஸ்டிஸ் கட்சி ஏழை மக்கள், தீண்டப்படாத மக்கள், சமூக வாழ்வில் பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆகியவர்களின் கட்சி என்பதாக உணர்கிறார் பெரியார். அந்த உணர்ச்சி மாறுபடும் வரையில், ஜஸ்டிஸ் கட்சியை அவர் ஆதரித்துத்தான் தீரவேண்டி இருக்கும்.

சுயமரியாதை இயக்கம் ஏற்பட்டதும், அது பல கொள்கைகளைக் கொண்டு இருப்பதும், ஜஸ்டிஸ் கட்சி கொள்கைக்கு உதவி செய்வதற்காகத்தானே ஒழிய, வேறில்லை. பார்ப்பனரல்லாதார் உரிமைகள் காப்பாற்றப்படவேண்டும். ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுடைய நலன்களுக்காகப் பாதுகாப்பு ஏற்படவேண்டுமானால், அது ஒரே ஒரு அமைப்பு நீதிக்கட்சி என்ற திராவிடர் இயக்கத்தின்மூலம்தான் அது சாத்தியப்படும் - செய்ய முடியும்.

ஜஸ்டிஸ் கட்சியை பார்ப்பனரல்லாத மக்கள் பலர் சரியானபடி ஆதரிக்காததனாலேயும், அக்கட்சி எந்த மக்களுக்காகப் பாடுபடுகிறதோ, அந்த மக்களிடம் போதிய நன்றி விசுவாசம் இல்லாததனாலேயும், அக்கட்சி இந்த மாதிரியாக தாழ்ந்த நிலையில் பேசவேண்டியதாகி விட்டது.

ஜஸ்டிஸ் கட்சி என்றால், மந்திரிகளும், சில பணக்காரர் களும்தான் சில மக்களுக்கு ஞாபகம் வருகிறதே தவிர, அதன் கொள்கைகள், அது செய்த வேலைகள் ஆகியவை அநேகருடைய ஞாபகத்திற்கு வருவதில்லை.''

இன்றைக்கு நம் இனம் எழுந்து நிற்க முடியுமா?

இன்றைக்குத்தானே அந்த உணர்வுகள் வருகிறது. நம் மைப் போன்றவர்கள் எடுத்துச் சொன்னதினால்தானே வரு கிறது. அன்றைக்கு அவர்கள் இட ஒதுக்கீட்டை உருவாக்கி யிருக்காவிட்டால், இன்றைக்கு நம் இனம் எழுந்து நிற்க முடியுமா? இத்தனை பேர் படித்து, உத்தியோகத்திற்குப் போயிருக்க முடியுமா?

அன்றைக்கு சுயமரியாதை இயக்கம் அவர்களை ஆதரித்த காரணத்தினால்தானே இன்றைக்கு நம்முடைய தோளில் துண்டு தொங்குகிறது; முழங்காலுக்குக் கீழே வேட்டி இருக்கிறது. இதையெல்லாம் எண்ணிப் பார்க்கவேண்டாமா?

எனவேதான், அக்கட்சி இந்த மாதிரியான தாழ்ந்த நிலையில் பேசவேண்டியதாகிவிட்டது.

மேலும் தந்தை பெரியார் எழுதுகிறார்,

‘‘இதன் காரணம், பாமர மக்களின் அறியாமை ஒருபுறம் இருந்தாலும், மற்றும் பலருக்கு உத்தியோக ஆசையும், பணத்தாசையும், ஏமாற்றத்தால் ஏற்பட்ட பொறாமையும் தவிர, வேறில்லை.

மந்திரிகள் பெரிய உத்தியோகஸ்தர்களாக இருக் கிறார்கள்; அதன் பிரமுகர்கள் பலர் பெரிய பணக்காரர் களாக இருக்கிறார்கள். போதாக்குறைக்கு இந்த இரு கூட்டத்தார்களும் கட்சி விஷயத்தில் யோக்கியமாய் நடந்து கொள்ளாமல், தங்கள் சுயநலத்திற்கும், அதற்கு வேண்டிய சூழ்ச்சிக்குமே கட்சியின் பெரும்பாகத்தைப் பயன்படுத்திக் கொள்வதால், பலருக்குத் தானாகவே அக்கட்சியின்மீது வேஷம் ஏற்படும்படி செய்துவிடுகின்றது.

ஆனால், இவ்விரு கூட்டமும், அதாவது மந்திரி உத்தியோகமும், பணக்காரர்கள் ஆதிக்கமும் ஜஸ்டிஸ் கட்சிக்கு இன்றியமையாதது என்பதாக பலமுறை தோழர் .வெ.ரா. எடுத்துக்காட்டியிருக்கிறார்.

காரணம் பணக்காரர்கள் இல்லாவிட்டால், எலக்ஷனில் ஜெயிக்க முடியாது.

ஜெயிக்காவிட்டால், அரசியல் நிர்வாகத்தைக் கைப்பற்ற முடியாது. ஆதலால், இந்த இரு கூட்டமும் அவசியமானது.

இவர்கள்நாணயமாக நடக்கவில்லை' என்பதை நாமும் ஒப்புக்கொள்கிறோம். ஆனாலும், தோழர்கள் சத்திய மூர்த்தியும், கலியாணராம அய்யர் போன்றவர்கள் எலெக் ஷனில் வெற்றி பெற்று, அரசாங்க நிர்வாகத்தைக் கைப்பற்றி ஆட்சி புரிவதைவிட, நாணயக் குறைவான மந்திரிகளும், சுயநலப் பணக்காரர்களும் அதிகமான சண்டிக்காரர்களாக இருந்துவிட முடியாது என்பது சமுதாயப் பார்வை.'' (ஒருவரை ஒருவர் கவிழ்ப்பதையும் நாணயக் குறைவு என்று குறிப்பிடுகிறார்).

எப்படியாவது இந்த சமுதாயத்தைக் காப்பாற்றியாக வேண்டும்

இதுதானே இன்றைய சூழ்நிலை. இதற்கு மாற்று என்ன? இன்றைய இயக்கத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மாற்று என்னவென்று சொன்னால் - மாற்று, பார்ப்பனர்களிடம் போய்ச் சேரும். வெளியில் இருக்கின்ற பொம்மைகளைப்பற்றி கவலைப்படாதீர்கள்; தலைமைதான் முக்கியம். யார் அந்த லகானைப் பிடிப்பது என்பதுதான் முக்கியம். அந்த விழிப்புணர்வைத்தான் தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தவேண்டியதாகும். அதைத்தான் நாம் செய்திருக் கிறோம்.

அதற்காக இவருடைய தவறுகளைக்கூட நாம் பொறுத்துக் கொண்டு எப்படியாவது இந்த சமுதாயத்தைக் காப்பாற்றியாக வேண்டும்.

தாய்க்கழகம் என்பதற்குப் பொருள் அதுதான்

எப்படி ஒரு தாய், தன்னுடைய பிள்ளைகளின் தவறுகளைக் கூட பொறுத்துக்கொண்டு, எட்டி உதைத்தாலும், மருந்து கொடுப்பதிலும், அவர்களின் வளர்ச்சியில் அக்கறை காட்டுவாரோ அதுபோன்று ஒரு தாய்மையோடு பெரியார் அவர்கள் சிந்திக்கிறார்!

தாய்க்கழகம்' என்பதற்குப் பொருள் அதுதான். தாய்ப் பாசம் என்பதற்குப் பொருள் அதுதான்!!

அன்றைக்கு அவர் சிந்தித்ததைத்தான் இன்றைக்கும் நாம் நடைமுறைப்படுத்துகிறோம். அதை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

மேலும் எழுதுகிறார் பெரியார்:

‘‘வெறும் பொறாமை ஒரு நன்மையையும் உண்டாக்கிவிட முடியாது. பணக்காரர்களின் இயற்கை குணம் இன்னது என்பது யாரும் அறியாததல்ல.''

பல காலகட்டத்திலும், அந்தத் தத்துவங்கள் பயன்படக்கூடிய வித்தகங்கள்!

எவ்வளவு தத்துவ ரீதியான உண்மைகள். இதுபோன்ற புத்தகங்களை வாங்குபவர்கள், படிக்காமல் இருக்கக்கூடாது. படித்துவிட்டு சிந்திக்கவேண்டும். பெரியாருடைய தலையங் கங்கள், அறிக்கைகள் இவற்றையெல்லாம் ஒருமுறை படித் தால் போதாது. பெரியார் ஒரு தத்துவ ஞானி. அவரின் அரசியல் விளக்கங்கள் - மிகப்பெரிய ஆழமான கருத்து களாகும். பல காலகட்டத்திலும், அந்தத் தத்துவங்கள் பயன் படக்கூடிய வித்தகங்கள்.

மேலும் எழுதுகிறார் பெரியார்:

‘‘யார் பணக்காரர்களானாலும் இப்படித்தான் இருப் பார்களே தவிர, இதற்குமேல் யோக்கியர்களாய் இருக்க முடியாது. இன்று காங்கிரசிலும் முழு சமதர்மத்திலும் இந்த யோக்கியதையுடன்தான் பல பணக்காரர்கள் இருந்து வரு கிறார்கள். ஆனால், இப்படிப்பட்ட மந்திரிகளுடைய யோக் கியதையை யார் பார்த்தாலும், இப்படித்தான் இருக்க முடியும்.

பெரிய அரசியல் பிரச்சினை; போட்டி, உள் கலகம், எதிரிகள் தொல்லை, அரசாங்கத்தின் ராஜதந்திரம், தங்கள் சுயநலம் ஆகியவைகளின் மத்தியில், மந்திரிகள் அரசியல் நிர்வாகம் செய்வது என்பது சுலபமான காரியம் என்று யாரும் நினைத்துவிட முடியாது.

அன்றியும், மந்திரிப் பதவிகளுக்கு எவ்வித யோக்கியப் பொறுப்பான நிபந்தனையும் இல்லாமல், ‘லாட்டரி சீட்டு' விழுவதுபோல் இருப்பதால், மந்திரிகளால் நாம் அடிக்கடி ஏமாற்றம் அடையவேண்டியதாகவும் ஏற்பட்டுவிடுவதில் அதிசயமில்லை.

எப்படி இருந்தபோதிலும், ஜஸ்டிஸ் கட்சியை அனாதரவு செய்யவோ, மந்திரிகளைக் கவிழ்க்கவோ சுயமரியாதை இயக்கம் ஒருபட முடியாது என்பதுடன், அவற்றை ஆதரிக்க வேண்டியதும் முக்கிய கடமையாகும்.''

கடைசியாக பெரியார் சொல்கிறார்,

‘‘சிலருக்கு அக்கட்சியிடம் காட்டும் அபிமானம், மந்திரி களுக்குப் பரிந்து பேசும் தன்மையும் - சாதாரண மக்களுக்கு இந்த மாதிரி பணம் வாங்காமல் பேச முடியுமா? அல்லது மந்திரிகள் பண உதவி இல்லாமல் .வெ.ரா.வுக்கு இவ்வளவு பிரச்சாரம் செய்ய முடியுமா? என்றெல்லாம் தோன்றலாம்.

சிலருக்குத்தாங்கள்வேண்டும்போதெல்லாம்ஈ.வெ.ரா. பணம் கொடுக்காததால், கோபித்துக் கொள்ளும் கார ணம், கொடுத்ததும் போதாமல், அயோக்கியத்தனமாய் விஷமப் பிரச்சாரம் செய்வது காரணமும், தோழர் .வெ.ரா. மந்திரிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு தங்களுக்குப் பங்கு சரியாகக் கொடுக்கவில்லை என்ற குறைபாடு என்பதுகூட நமக்கு நன்றாய் விளங்குகிறது.

அதேநேரத்தில், என்னைப் பொறுத்தவரையில், உண்மையிலேயே சில தோழர்கள் தவறுதலாய் கருதிக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்காக இதனை எழுதுகிறோம்.

தோழர் .வெ.ரா.வின் முடிந்த முடிவு

யாரிடமும் பணம் வாங்காமலும், சுயநலத்திற்கு ஒரு காரியமும் செய்துகொள்ளாமல் இருக்கிற ஒருவன், எப்போதும், எதற்கும் பயப்பட வேண்டியதில்லை என்ப தோடு, அவனுக்கு எவ்வித குறையும் வராது என்பது தோழர் .வெ.ரா.வின் முடிந்த முடிவாகும்.''

இதுதான் நமக்கு அரசியல் பாடமாகும். இயக்கத்தை நடத்தக் கூடிய முக்கிய பாடமாகும்.

இதுதான் நமக்கு பாதுகாப்பு - இதுதான் நமக்குக் கேடயம் - இதுதான் நமக்கு வாள்.

மேலும் பெரியார் சொல்கிறார்,

‘‘இந்தக் காரணத்தினாலேயே, அவர் யாரையும் நான் சொல்கிறபடி கேட்டால் கேள், இல்லாவிட்டால் போ என்றும், நான் அப்படித்தான் செய்வேன் என்று சொல்லவும், தனது கொள்கையையும், இஷ்டத்தையும் யாருக்கும் அடிமைப்படுத்தாமல் இருக்கவும் முடிந்து வருகின்றது.''

பெரியார் அவர்கள் சுயநலத்திற்காக எந்தக் காரியத்தையும் செய்யவில்லை

பெரியார் எப்படி ஒரு சர்வாதிகாரியாக இருக்கிறார்; இப்படித்தான் செய்வேன், இஷ்டமிருந்தால் இரு, இல்லை யென்றால் போ என்று சொல்லக்கூடிய துணிச்சல் ஏன்?

அவர் யாரிடமும் கைநீட்டி பணம் வாங்கியது கிடையாது. அவர் சுயநலத்திற்காக எந்தக் காரியத்தையும் செய்யவில்லை. ஆகையால் அவர் யாருக்கும் பயப்படவேண்டிய அவசியமில்லை.

மேலும் பெரியார் சொல்கிறார்,

‘‘இந்த இயக்கம் தோழர் .வெ.ரா.வுக்கு ஒரு ஜீவன மார்க்கமோ, சுயநல லாபமோ, புகழுக்கு என்று இல்லாமல், வெறும் பொதுநலக் காரியத்திற்காகவே நடத்துகிறார்.''

அன்றைக்கு அவருக்கு மட்டும் இல்லை; இயக்கத்தை இன்றும், இனியும் நடத்தக்கூடியவர்களுக்கு எடுத்த வகுப்பு. அதைத்தான் நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.

தமிழகத்தின் முதல் பேராசிரியர் தந்தை பெரியார்!

ஒரு பேராசிரியருடைய நினைவு சொற் பொழிவை ஏன் நடத்துகிறோம் என்றால், பேராசி ரியர்களுக்கெல்லாம் பேராசிரியரான தமிழகத்தின் முதல் பேராசிரியர் என்று அண்ணாவால் வருணிக் கப்பட்ட தந்தை பெரியார், அரசியல்  வகுப்பெடுத்து, பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு வகுப்பெடுத்து சொல்கிறார்.

ஒரு காரிய வீரரே தவிரவெறும் கொள்கை வீரரல்ல!

மேலும் பெரியார் சொல்கிறார்,

‘‘இந்த இயக்கம் தோழர் .வெ.ரா.வுக்கு ஒரு ஜீவன மார்க்கமோ, சுயநல லாபமோ, புகழுக்கு என்று இல்லாமல், வெறும் பொதுநலக் காரியத்திற்காகவே நடத்துகிறார்.

அதுவும் அவரது ஜீவன் உள்ளவரை ஒரு நேர்மையும், பொதுநலப் பயனும் உள்ள ஏதாவது ஒரு வேலையை செய்யவேண்டுமே என்பதற்காகவே செய்கிறாரே ஒழிய, மற்றபடி இன்ன காரியத்தை சாதிப்பதற்காக கடவுளால் அனுப் பப்பட்டவர் என்பதற்காகவோ அல்லது அதை செய்துதான் முடிக்கவேண்டும் என்கிற அவதார தன்மைக்காகவோ, வீரத் தன்மைக்காகவோ அவர் அவ்வாறு வேலைகளைச் செய்யவில்லை. அன்றியும், அவர் ஒரு காரிய வீரரே தவிர, வெறும் கொள்கை வீரரல்ல.''

வாயால் கொள்கையைப் பேசிவிட்டு, கடைசி நேரத்தில் கீழே விழுந்து போகிறவர் அல்ல.

பெரியாரிடம் தீவிரம் பேசியவர்கள் இன்றைக்கு எங்கே போனார்கள்?

பெரியாரிடம் தீவிரம் பேசியவர்கள் இன்றைக்கு எங்கே போனார்கள்? அவர்களுடைய வரலாறு என்ன? கடைசிவரை அவர்கள் ஆரம்பித்த முயற்சிகளைத் தொடர முடிந்ததா?  அவர்களுடைய முயற்சிகள் ஏன் தோற்றுப் போனது? ஏன் பெரியாரிடமே அவர்கள் வரவேண்டிய காலகட்டம் வந்தது. பெரியாரிடமே அடையாளம் தெரியாத அளவிற்கு ஆக்கப்பட்டார்கள்.  வீழ்ந்தவர்களை, பெரியார் அவர்கள் மீண்டும் தூக்கி நிறுத்திய கட்டமெல்லாம் விலகிப் போனவர்கள் பலருக்கு உண்டு. அதில் மிகப்பெரிய அளவிற்கு, சிறப்பாக உணர்ந்து வந்து, பெரியாருடைய காலடியில் தன் வெற்றிக்கனியை வைத்த ஒரே ஒருவர் அண்ணா அவர்கள்தான்!

ஏனென்றால், பெரியாருடைய பலம், மக்கள் பலம். பெரியாருடைய பலம் என்பது அனுபவத்தின்மீது கட்டப்பட்ட பாறைகளைக் கொண்டு கட்டப்பட்ட கற்கோட்டை என்பதை நன்றாக உணர்ந்தவர் அண்ணா ஒருவர்தான்.

திருச்சிக்குச் செல்லவேண்டும்; தான் பெற்ற வெற்றியை உடனடியாக பெரியாருடைய காலடியில் வைக்கவேண்டும். 18 ஆண்டுகால பிரிவு. பெரியாருக்கும் - அண்ணாவிற்கும் கொள்கை ரீதியான போராட்டம்தான்.

எனவே, இரண்டும் அந்தந்த காலகட்டத்திற்கு, அவரவர் நிலைப்பாட்டில், சரியான நிலைப்பாடாகும்.

தந்தை பெரியார் அவர்கள் கண்ணோட்டத்தில், அவர் சமரசம் செய்துகொள்ளாத கொள்கை வீரர். ஆகவே, அதைச் சுட்டிக்காட்டினார், கண்டித்தார், எதிர்களத்திலே நின்றார் என்பதை அவரும் தெளிவாகப் புரிந்துகொள்ளக்கூடிய நிலையில் வந்ததும்,

எப்படி அன்றைக்குச் சுயமரியாதை இயக்கம் முழுக்க முழுக்க நீதிக்கட்சியை ஆதரிப்பதைத் தவிர, அதற்காகவே தோற்றுவிக்கப்பட்டது என்பதைப்போல, பிறகு இருந்தார்கள் என்பதைத் தவிர வேறு கிடையாது.

எனவே, இந்தப் பாடம் சாதாரணமான பாடமல்ல.

கொள்கைக்கு அன்றியும், அவர் காரிய வீரரே தவிர, கொள்கை வீரரல்ல. கொள்கையைச் சொல்பவர்கள் வண்டி வண்டியாய் இருக்கிறார்கள்.

சிலர் கருத்து தானத்தை ஏராளமாகச் செய்வார்கள்!

எந்தக் கொள்கையை வேண்டுமானாலும் பேசலாம். சில பேர் பார்த்தீர்களேயானால், இயக்கத்தில் செயல்பட மாட்டார்கள். கருத்துதானத்தை ஏராளமாகச் செய்வார்கள்.

அதை அப்படிச் செய்யவேண்டும்; இப்படி செய்ய வேண்டும் என்று சொல்வார்கள்.

‘‘உங்கள் பங்களிப்பு என்ன?'' என்று யாரும் அவர்களிடம் கேள்வி கேட்டுவிடக் கூடாது.

ஆனால், இதையெல்லாம் பேசத் தெரியாதவர்கள், செயல்பட்டுக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் எந்தத் துரும்பையும் எதிர்பார்ப்பதில்லை.

அவர்கள் தங்களால் முடிந்ததை இயக்கத்திற்குக் கொடுத்துக் கொண்டிருப்பார்கள். அது உழைப்பாக இருக்க லாம்; ஒரு ரூபாயாக இருக்கலாம்; அல்லது அவர்களுடைய ஆதரவாக இருக்கலாம் அல்லது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

கருத்து ஒருமித்தவர்களுடன் கலந்து தொண்டாற்றுவதே, துணிவுடைமை, அறிவுடைமை

மேலும் தொடர்கிறார் பெரியார்,

‘‘அன்றியும், அவர் ஒரு காரிய வீரரே தவிர, வெறும் கொள்கை வீரரல்ல. கொள்கையை சொல்பவர்கள் வண்டி வண்டியாக இருக்கிறார்கள்; கொள்கைகளைக் கொண்ட புத்தகங்களும் ஏராளமாய் இருக்கின்றன. சிறிது காரியமாவது செய்ய சவுகரியமாய் இருந்தால், செய்துவிட்டுப் போவதுதான் மேலே ஒழிய, கொள்கைகளை மட்டும் சொல்லிவிட்டு, ஜெயிலுக்குப் போவது மேலானதாகிவிடாது.

ஆகையால்தான், காரியத்தில் சாத்தியமானதையே எவ்வளவோ எதிர்ப்புகளுக்கும், தொல்லைக்கும் இடையில் செய்ய முயற்சிக்கிறார். இதற்குப் பெயர் கோழை என்றாலும், துரோகம் என்றாலும் எனக்குக் கவலையில்லை.

கோழை என்பது செய்வதற்குச் சவுகரியமுள்ள காரியங் களை விட்டுவிட்டு ஓடுவதேயாகும்.

துரோகம் என்பது மக்களுக்குத் தொல்லை கொடுத்து விட்டு சுயநலத்திற்குப் பின்வாங்குவதாகும்.

இன்று அவருக்குச் செய்வதற்கு சவுகரியமுள்ள காரியம் எதையும் விட்டுவிட்டு ஓடவில்லை.

இரண்டாவதாக, யாரிடத்தில், எவ்வித வாக்குறுதி கொடுத்தோ, கடுகளவாவது தன் சுயநலத்திற்குப் பிரதி பிர யோஜனம் அடைந்தோ, வேறு எந்த சுயநலக் காரியத்திற்கோ ஆசைப்பட்டு பின்வாங்கிவிடவில்லை.

ஆகையால், பாமர மக்கள் என்ன நினைப்பார்கள் என்றோ, பண்டித மக்கள் என்ன நினைப்பார்கள் என்றோ - கூட்டுத் தோழர்கள் என்ன நினைப்பார்களோ என்றோ பயந்து கஷ்டப்படுவது துணிவுடைமையாகாது.

அந்தத் துணிவுடைமை என்பது இருக்கிறதே, கருத்து ஒருமித்தவர்களுடன் கலந்து தொண்டாற்றுவதே, துணிவுடை மையும், அறிவுடைமையும் ஆகும்.

கருத்து ஒருமித்தவர்களே அவரது உயிர்த் தோழர்கள். கருத்து வேறுபாடு உடையவர்கள் மற்றவர்களேயாவார்கள் என்று கூறி, இதை முடிக்கிறோம்.''

என்று அந்தத் தலையங்கத்தில் எழுதியிருக்கிறார்.

ஆகவே நண்பர்களே, இந்தத் தலைப்பில், இன்றைக்கு இந்த அளவிற்குத்தான் நம்மால் பயணம் செய்ய முடிந்திருக்கிறது.

அடுத்த பகுதிதான் மிக முக்கியம். அதை இன்னொரு நாளைக்குத் தொடருவோம்.

இயக்கம் எதிர்காலத்தைக் கருதியும், நிகழ்காலத்தைக் கருதியும் சிறப்பாக இயங்கும். காரணம், அய்யா அவர்கள், கடந்த காலத்தில் எப்படி பாடம் எடுத்தார்களோ - அது காலத்தை வென்ற பாடங்கள் - காலத்தைத் தாண்டிய அறிவுரைகள் - அவை என்றைக்கும் நமக்குப் போதனைகள்.

எனவேதான், அந்த போதனைகளை சாதனைகளாக்க வேண்டும். நாம், நம்மைப் பக்குவப்படுத்தவேண்டும்.  நம் மனதை நாமே உழுதுகொள்ளவேண்டும்.

எதுகளை?' எதுபயிர்?' என்று பிரித்துப் பார்க்கத் தெரியவேண்டும்

நாம் அசை போடவேண்டும். எது களை? எது பயிர்? என்று பிரித்துப் பார்க்கத் தெரியவேண்டும்.

ஆகவேதான், நான் இந்தத் தலைப்பை முழுமையாக முடிக்கவில்லை. இந்த அளவோடு இன்றைக்கு நிறுத்துகிறேன்.

வாய்ப்பிருக்கும்பொழுது, தொடர்ச்சியாக இதை மறுபடியும் தொடருவோம்.

நன்றி, வணக்கம்!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

No comments:

Post a Comment