பன்னாட்டு ஊடகங்களின் விமர்சனங்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 30, 2021

பன்னாட்டு ஊடகங்களின் விமர்சனங்கள்!

பன்னாட்டு ஊடகங்கள், `இந்த கரோனா விவகாரத்தை இந்தியா சரியாகக் கையாளவில்லைஎனக் கடுமையாகக் கண்டித்து வருகின்றன.

சக மனிதன் மீதான நம்பிக்கையும், இக்கட்டான சூழலில் அவனுக்குத் தரும் ஆறுதலும் மட்டுமே இவ்வுலகை ஜீவிக்கவைக்கிறது. ஆம், இந்த இக்கட்டான சூழலில் சக நாடுகள் இந்தியாவைக் கைவிடவில்லை. பகை நாடு என்று கருதப்பட்ட பாகிஸ்தான் முதல் சிறிய நாடான பூட்டான் வரை இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டிவருகின்றன. `We stand with Indiaஎன்ற ஹாஷ்டேக் பல நாடுகளில் டிரெண்டாகிவருகிறது. இடர் மிகுந்த காலத்தில் நாம் தனித்துவிடப்படவில்லை என்ற ஆறுதலே நாம் விரைவாகத் தேறி வர உதவும். நாம் நிச்சயம் மீள்வோம்.

சரி. இந்த நேர்மறையான விடயங்கள் ஒருபக்கம் இருக்கட்டும். பன்னாட்டு ஊடகங்கள், `இந்த கரோனா விவகாரத்தை இந்தியா சரியாகக் கையாளவில்லைஎனக் கடுமையாகக் கண்டித்து வரு கின்றன. இதை மோடியின் தோல்வியாக வர்ணித்து வருகின்றன.

உலகப் புகழ்பெற்ற 'டைம்' இதழில் இந்திய இதழியலாளர் ராணா அய்யூப் எழுதியிருக்கும் கட்டுரையில் மோடியை மிகக் கடுமையாக விமர்சித்திருக்கிறார். 'ஓர் இக்கட்டான காலகட்டத்தில் தமது பொறுப்பை அவர் கைகழுவிவிட்டார்' என அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

அந்தக் கட்டுரையில் மத்திய அமைச்சர்களையும், இந்தியாவின் மேல்தட்டு மக்களையும் விமர்சித்திருக்கிறார்.

கரோனா அலை முற்றுப்பெறாதபோதே, `வெற்றிகரமாக கரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவந்தவர் மோடிஎன மத்திய அமைச்சர்களும், இந்தியாவின் மேல்தட்டு மக்களும் புகழ்ந்து தள்ளினர். உண்மை நிலை என்ன? பொருளாதார ரீதியாகப் பின் தங்கிய மக்கள் எத்தகைய இடரை எதிர்கொள்கின்றனர் என்பதைக் கிஞ்சித்தும் உணராமல் தட்டுகளைத் தட்டியவர்கள் அவர்கள்.

இப்படியான சூழலில் கும்பமேளாவை அனுமதித்தது பெருந் தவறு என்றும் அந்தக் கட்டுரையில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இந்தத் தோல்விக்கான பொறுப்பை மோடி ஏற்றுக்கொள்ள வேண்டும் எனப் பெரும்பாலான இந்தியர்கள் நினைப்பதாக அவர் அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

'வாஷிங்டன் போஸ்ட்', தனது எடிட்டோரியல் பக்கத்தில் எழுதியுள்ள ஒரு கட்டுரையில், `நிலைமையை உணராமல் மிக விரைவாகத் தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள்தான் இந்தியாவின் இப்போதைய நிலைக்குக் காரணம்எனக் குறிப்பிட்டிருக்கிறது.

திரையரங்கங்கள், விளையாட்டரங்கங்கள், கும்பமேளா என எங்கும் எதிலும் கூட்டம். இதுதான் வைரஸ் பரவலைத் துரிதப்படுத்தியது. கொத்துக் கொத்தாக மக்கள் மருத்துவ மனைகளுக்குப் படையெடுக்கின்றனர். ஆக்சிஜன் இல்லை. இதனால் இந்தியாவின் மருத்துவ உள்கட்டமைப்பே சிதையும் நிலையில் உள்ளது என்றும், இவ்வளவு மோசமான நிலை வராமல் தவிர்த்திருக்க முடியும் என்றும் அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் அதீத நம்பிக்கைதான் இந்தியாவின் இந்த நிலைக்குக் காரணம் என 'கார்டியன்' தளத்தின் ஒரு கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

திமிர் பிடித்த மற்றும் திறமையற்ற அரசின் செயல்பாடுகள்தான் இந்தியாவை இந்தநிலைக்குக் கொண்டுவந்து விட்டிருப்பதாக அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தவறுகள் அனைத் தையும் மத்திய அரசு செய்துவிட்டு, இப்போது பொறுப்பை மாநில அரசுகளிடம் திணிப்பதாகவும் அந்தக் கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சுயதிருப்தியும், தவறான நடவடிக்கைகளும்தான் இந்தியா வின் இந்த நிலைக்குக் காரணம் என்ற தொனியில் 'தி நியூயார்க் டைம்ஸ்' ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது.

'ஆஸ்திரேலியன் பிராட்கேஸ்டிங் கார்ப்பரேஷன்' வெளி யிட்டுள்ள ஒரு கட்டுரையும் இந்திய அரசைக் கடுமையாகச் சாடியுள்ளது. இந்தநிலையைத் தவிர்த்திருக்க முடியும் என்று உறுதிபடக் கூறியுள்ளது. உலக ஊடகங்கள் மட்டுமல்ல, விகடன் இணையமும் 'உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு இந்தியரின் நிலைக்கு பிரதமர் மோடி என்ன பதிலளிக்கப் போகிறார். குறைந்தது தார்மீகப் பொறுப்பாவது ஏற்பாரா?' என்று கேள்வி எழுப்பியுள்ளது.

'இந்து' ஏடும் தனது தலையங்கப் பகுதியில் (27.4.2021) மத்திய அரசின் தோல்வியை கடுமையாக விமர்சித்துள்ளது.

இவற்றின் மீதெல்லாம் அரசியல் சாயம் பூசப் போகிறீர்களா? வெளிநாட்டு ஊடகங்கள் சொல்லித்தான் நாம் தெரிந்துகொள்ளும் நிலையில் இல்லை. கண்முன்தான் நிதர்சனமாக, யதார்த்தமாகப் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம். 'கைப்புண்ணுக்குக் கண்ணாடி எதற்கு?'

சுட்டிக்காட்டுவதை தாராள சிந்தனையோடு, சிந்தனைக்கு ஆட்படுத்தாவிடின் கெடுப்பார் இல்லாமலேயே கெட்டுப் போக வேண்டியதுதான்.

No comments:

Post a Comment