புதையல் எடுத்துத் தருவதாகக் கூறி விவசாயியிடம் நகைகள் மோசடி- ஜோதிடர் கைது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 15, 2021

புதையல் எடுத்துத் தருவதாகக் கூறி விவசாயியிடம் நகைகள் மோசடி- ஜோதிடர் கைது


திண்டுக்கல், ஏப்.15 புதையல் எடுத்து தருவதாக கூறி விவசாயியிடம் ரூ.20 லட்சம் மற்றும் 44 பவுன் நகைகளை மோசடி செய்து கார், புல்லட் வாங்கிய ஜோதிடரை காவல் துறையினர் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேட சந்தூர் அருகே உள்ள அரியபித்தன் பட்டியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 50). விவசாயி. இவருக்கு ஓராண்டுக்கு முன்பு தொழிலில் நட்டம் ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த அவர், ஜாதகம் பார்க்க விரும்பி ஜோதிடரை தேடினார். அப்போது திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை தாலுகா மடத்துக்குளம் அருகே உள்ள கணியூரைச் சேர்ந்த ஜோதிடர் சசிகுமார் (51) என்பவரை பற்றி கேள்விப்பட்டார்.

இதையடுத்து அவர், கணியூருக்கு சென்று ஜோதிடர் சசிகுமாரை சந்தித்து தொழில் நட்டம் குறித்துப் பேசினார். அப்போது பூஜை மற்றும் பரிகாரம் செய்ய வேண்டும் என்று சசிகுமார் தெரிவித்தார். அந்த பூஜையை தங்கவேல் வீட்டில் வைத்து தான் செய்ய வேண்டும் என்றும், அதற்கு ரூ.1 லட்சம் தரும்படியும் சசிகுமார் கேட்டுள்ளார். அதை உண்மை என நம்பி தங்கவேல் பணத்தை கொடுத்தார்.

இதையடுத்து தங்கவேலின் வீட்டுக்கு வந்து சசிகுமார் பூஜை செய்துள்ளார். அந்த பூஜைக்கு ரூ.2 லட்சம் வரை தங்கவேல் செலவு செய்தார். அதன்பின்னர் 2 நாட்கள் கழித்து சசிகுமார் மீண்டும் தங்கவேல் வீட்டுக்கு வந்தார். அப்போது தங்கவேலின் தோட்டத்தில் புதையல் இருப்பதாகவும், அதை எடுத்து தருவதாகவும் சசிகுமார் கூறினார். அதன்மூலம் தங்கவேலின் துன்பம் அனைத்தும் தீர்ந்து விடும் என்று ஆசைவார்த்தை கூறினார்.

அதோடு புதையலை எடுப்பதற்கு மீண்டும் பூஜை செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். தொழில் நட்டத்தில் இருந்த தங்கவேல் குடும்பத்தினர் புதையல் கதையை உண்மை என்று நம்பி விட்டனர். அதை பயன்படுத்திக் கொண்ட ஜோதிடர் சசிகுமார் புதையல் எடுப்ப தற்கான பூஜை செலவுக்கு என்று கூறி பலமுறை பணம் வாங்கினார். அந்த வகையில் தங்கவேலிடம் இருந்து மொத்தம் ரூ.22 லட்சம் சசிகுமார் வாங்கி உள்ளார்.

மேலும் தங்கவேலின் மனைவி மற்றும் மருமகளிடம் புதையல் தொடர்பாக பேசி 44  நகைகளையும் சசிகுமார் பெற்றுள்ளார். அதுமட்டு மின்றி புதையல் இருப்பது போன்ற புகைப்படங்களை தங்கவேலிடம் காண்பித்தார்.

அதன்மூலம் கார், புல்லட் மோட்டார் சைக்கிள், விலை உயர்ந்த செல்போன் ஆகியவற்றையும் சசி குமார் வாங்கிக் கொண்டார். ஆனால், பேசியபடி புதையல் எதுவும் எடுத்துக் கொடுக்கவில்லை.

 இதனால் ஏமாற்றம் அடைந்த தங்கவேல் ரூ.20 லட்சம், 44  நகைகளை மீட்டுத்தரும்படி திண்டுக்கல் 2ஆவது மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அது குறித்து விசாரிக்கும்படி நீதிமன்றம் உத்தர விட்டது.

இதைத் தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையின் துணை கண்காணிப்பாளர் ஆறுமுகம் தலைமையில் காவல்துறை ஆய்வாளர் பானுமதி, துணை ஆய்வாளர் சேகர் பவுல்ராஜ் ஆகியோர் ஜோதிடர் சசி குமார் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் தனிப்படை அமைத்து ஜோதிடர் சசிகுமாரை கைது செய்தனர்.

மேலும் ஜோதிடருடன் வந்து தங்கவேலை மிரட்டிய 4 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment