இதுதான் இந்தியா!
* ரூ.1001 கோடியில் சொகுசு பங்களா ஒன்றை மும்பையில் வாங்கியுள்ளார் - டி.மார்ட் எனும் நிறுவனத்தின் உரிமையாளர் ராதாகிருஷ்ணன் தமானி.
>> கோடிக்கணக்கான மக்கள் தெருக்கோடிகளில் - நடைபாதைகளில் வாழும் மக்கள் ஒரு பக்கம் - இப்படியும் இன்னொரு பக்கம்.
வச்சுக்கிட்டா வஞ்சனை!
* தி.மு.க.வும், அ.இ.அ.தி.மு.க.வும் ஏடுகளில் விளம்பரங்கள்.
>> அ.தி.மு.க. விளம்பரம் தி.மு.க.வைக் குறை கூறுவது. தி.மு.க. விளம்பரமோ தங்கள் திட்டங்களை விளம்பரப்படுத்திக் கூறுவது.
கையில் சரக்கு இல்லாதவர்கள் குறை கூறித்தான் தீர்வார்கள்.
குற்றம் உள்ள நெஞ்சு
குறுகுறுக்கும் என்பது பழமொழி
* தி.மு.க. குற்றம் செய்திருந்தால் நடவடிக்கை எடுக்காதது ஏன்?
- தளபதி மு.க.ஸ்டாலின் கேள்வி
>> ‘தான் திருடி பிறரைத் திருடி' என்பார் என்பது நம் நாட்டுப் பழமொழி. அது அ.தி.மு.க.வுக்கு மிகவும் பொருந்தும்.
ஆயிரத்தில்
ஒரு வார்த்தை
* மத்திய பா.ஜ.க.விடமிருந்து அ.தி.மு.க.வை மீட்க தி.மு.க. கூட்டணி வெற்றி பெறவேண்டும்.
- இரா.முத்தரசன், மாநில செயலாளர், சி.பி.அய்.
>> இதனைத் தான் செல்லும் இடங்களில் எல்லாம் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சொல்லி வருகிறார்.
நல்லாதான் சொன்னார்!
* தமிழ்நாட்டில் மீண்டும் நல்லாட்சி அமைய வாக்களியுங்கள்!
- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
>> நல்லாட்சியா? அப்படி என்றால் வாக்கு தி.மு.க.வுக்குத்தான்.
இப்ப மட்டும் என்ன வாழுது?
* அரசியலுக்கு இடையூறாக இருந்தால், சினிமாவை விட்டு விலகி விடுவேன்.
- நடிகர் கமலகாசன்
>> சினிமா ஓய்வுக்குப் பிறகுதானே அரசியலில் குதித்திருக்கிறார்.
ஞாபகம் வருதே,
ஞாபகம் வருதே!
* புதுச்சேரியில் 144 தடை - பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கவில்லை என்றால், உத்தரவு ரத்து செய்யப்படும்.
- சென்னை உயர்நீதிமன்றம்
>> தமிழ்நாட்டில் 144 தடை போட்டு பண பட்டுவாடா நடந்ததே!
‘பூத்' கேப்ச்சரிங்கா?
* தமிழ்நாட்டில் 10,727 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை.
- தேர்தல் ஆணையர்
>> பதற்றம் என்றால் அதன் பொருள் கலவரமா? பண பட்டுவாடாவா?
எல்லோரும் இந்நாட்டு
மன்னர்கள்
* தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 234 இடங்களுக்குப் போட்டியிடுவோர் எண் ணிக்கை 4220. கரூரில் அதிகபட்சமாக 77 பேர்.
>> இதன் பின்னணியில்கூட அரசியல் இருக்கக் கூடும்.
காலத்தின் குரல்!
* பா.ஜ.க.வுக்கு எதிரான ஒன்றிணைய வேண்டிய நேரம் வந்துவிட்டது.
- மேற்கு வங்க முதல்வர் மம்தா
>> சேலத்தில் ராகுலை அருகில் வைத்துக்கொண்டு தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கூறிய கருத்தின் எதிரொலி!
ஆம், காலத்தின் குரல்!
தேர்தல் நேரத்தில் செத்தவர் பிழைப்பார்!
* கோவை மாவட்டத்தில் இறந்தவர்கள் பெயரால் தபால் வாக்குப் போட விண்ணப்பம் - அதிகாரிகள் விசாரணை.
>> தேர்தல் நேரமல்லவா! தேர்ந்தெடுத்த தில்லு முல்லுகள் கோலோச்சுமே!
செத்தவர்கள் சிவலோக பதவி அடைந்து அங்கிருந்து நேராக வாக்களிக்க விரைந்து வருவர் என்று நம்புவோமாக!
No comments:
Post a Comment