குற்றப் பின்னணி வேட்பாளர்களின் வழக்குகளை பத்திரிகைகள்மூலம் தெரியப்படுத்த வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 3, 2021

குற்றப் பின்னணி வேட்பாளர்களின் வழக்குகளை பத்திரிகைகள்மூலம் தெரியப்படுத்த வேண்டும்

தேர்தல் ஆணையம் உத்தரவு

புதுடில்லி, மார்ச்3- குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் தங்கள் மீதான வழக்குகளை உள்ளூர் பத்திரிகைகளில் விளம்பரம் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்று அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டு  தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பி யுள்ளது.

 ஒரு வேட்பாளர் தேர்தலில் போட்டியிடுகிறார் எனில் அவரது குற்றப்பின்னணி, அவர் எந்த கட்சியை சார்ந்தவர், கட்சிக்கு குற்றப் பின்னணி குறித்த விவரங்களை அவர் அனுப்பியுள்ளாரா? என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை உள்ளூர் செய்தித்தாளிலோ அல்லது தேசியசெய்தித்தாளிலோ விளம்பரம் செய்திருக்க வேண்டும்.” என்று கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்தது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகள் அனைத்தும் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பதை உறுதிசெய்யுமாறு இந்திய தலைமை தேர்தல்ஆணையம், அனைத்து மாநில தேர்தல் ஆணையர்களுக்கும் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளது. மாநிலத்தில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட, அங்கீ கரிக்கப்படாத மற்றும் பதிவுசெய்யப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் தலைமை அலுவலகங்களுக்கு இது தொடர்பான விவரங்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் தொடர்பாக உரிய விளக்கங்களையும், உத்தரவுகளையும் பிறப்பிக்க வேண்டும் என்றும், தேர்தலில் போட்டியிடுவோர் விளம்பரங்கள் கொடுத்ததற்கான ஆதாரங்களை சீலிடப்பட்ட கவரில் தேர்தல் நடத்தக்கூடிய அதி காரிகள் கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும்  மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment