வாசிங்டன், மார்ச் 27- அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பதவி ஏற்றபின் முதன் முறையாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அவர் அளித்த பதில் வருமாறு:-
நான் அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற பிறகு மக்களுக்காகவும், நாட்டின் நலனுக்காகவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. 2024ஆ-ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதே எனது இலக்கு. எனது எதிர்பார்ப்பும் அதுதான்.
நான் மீண்டும் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராவேன் என்ற நம்பிக்கை உள்ளது. கமலா ஹாரிஸ் 2-ஆவது முறையாக அமெரிக்க துணை அதிபராக தேர்வு செய்யப்படுவார் என்றும் முழுமையாக எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
ராணுவம் தாக்குதல்
27 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு
காபூல், மார்ச் 27- கத்தார் நாட்டின் தோகா நகரில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி வந்தாலும், ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் இன்னும் அச்சுறுத்தலாகவே விளங்குகிறார்கள். ராணுவம் மீதும், காவல்துறையினர் மீதும் அவ்வப்போது காட்டு மிராண்டித்தனமான தாக்குதல்களை நடத்தி பெருத்த உயிர்ச் சேதங்களை ஏற்படுத்துகிறார்கள். அவர்களுக்கு எதிராக அந்த நாட்டின் ராணுவமும் அவ்வப்போது சரியான பதிலடிகளை கொடுத்து வருகிறது. இந்த நிலையில் அங்கு தெற்கு ஜாபுல் மாகாணத்தில் மிஷான் மற்றும் ஷின்காய் மாவட்டங்களில் தலீபான் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்துக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன.
அந்த தகவல்களின் பேரில் அந்த நாட்டின் ராணுவம் 25.3.2021 அன்று இரவு அதிரடியாக தாக்குதல்களை நடத்தியது.
இந்த தாக்குதல்களில் 27 தலீபான் பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டதாகவும், 18 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் ராணுவ வட்டார தகவல்கள் கூறுகின்றன.
இது மட்டுமின்றி தலீபான் பயங்கரவாதிகளின் சுரங்கப்பாதை யும், வெடிமருந்துகளும் அழிக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த இழப்புகள் தலீபான் பயங்கரவாதிகளுக்கு விழுந்த பலத்த அடியாக பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment