காமராசர் பெயரிலுள்ள கல்லூரியில் ஏ.பி.வி.பி.க்கு அங்கீகாரமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 24, 2021

காமராசர் பெயரிலுள்ள கல்லூரியில் ஏ.பி.வி.பி.க்கு அங்கீகாரமா?

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் Extra currivular Activity பிரிவில் NSS/NCC வரிசையில் ABVP-க்கு இடம் வழங்கப்பட்டுள்ளது

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியின் இணையப்பக்கத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் பிரிவாகிய அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) மாணவர்களுக்கான என்.எஸ்.எஸ்., என்.சி.சி. போன்ற பொதுசேவைக்கான ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்புபோல் கொள்ளப்பட்டு அதற்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்களிடையே வகுப்பு வாத வெறியை விதைத்து, பரப்பிவரும் அமைப்புதான் ஏபிவிபி.; அய்தரா பாத் மத்திய பல்கலைக்கழகம், டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், டில்லி பல்கலைக்கழகம், அலிகார் முசுலீம் கல்லூரி உள்ளிட்ட நாடுமுழுவதும் உள்ள கல்லூரிகளில், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வகுப்புவாத வன்முறைக்கு அடித்தளமிட்டு செயல்பட்டு வரும் அமைப்பாக ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பான ஏபிவிபி உள்ளதை காமராஜ் பெயரில் தூத்துக்குடியில் இயங்கும் கல்லூரி நிர்வாகம் அறிந்திருக்கவில்லையா?

வருணாசிரமத்தை திணித்து வகுப்புவாத வெறியாட் டம்போடும் அமைப்பான ஏபிவிபி போன்றவற்றுக்கு கல்வி நிறுவனங்களில் இடமளிப்பது - கல்லூரியின் அமைதி சூழ்நிலையை ஒழித்திடத் தனக்குத் தானே தலையில் கொள்ளி வைத்துக் கொள்வதற்குச் சமமாகும்.

சமூக நீதி அடிப்படையில் அனைவருக்கும் கல்வி வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று செயல்பட்ட கல்வி வள்ளல் காமராசர் பெயரில் இயங்கும் கல்லூரிக்குள் காவி பயங்கரவாதத்துக்கு இடம் அளிக்கலாமா? பச்சைத்தமிழர் காமராஜர்மீது ஆர்.எஸ்.எஸ். சங் பரிவார் கும்பல் கொலைமுயற்சி வெறியாடட்டம் போட்ட வரலாறு உண்டே!  அவர் பெயரில் இயங்கும் கல்லூரியிலேயே ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான ஏபிவி பிக்கு இடமளிப்பதா?

1966 நவம்பர் 7ஆம் தேதியை நாடு மறக்குமா? ஆர்.எஸ்.எஸின் ஜனசங்கம், வி.எச்.பி. சாதுக்கள், பூரி சங்கராச்சாரியார், நிர்வாண சாமியார்கள் சூலங்களைக் கையில் ஏந்தி பசுவதைத் தடுப்பு என்ற பெயரால் கல்வி வள்ளல் காமராசரை புதுடில்லியில் உயிரோடு கொளுத்த முயன்ற கும்பலைச் சேர்ந்த ஓர் அமைப்புக்கு காமராசர் பெயரில் உள்ள ஒரு கல்லூரியில் இடம் அளிப்பதா?

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியின் இணையதளத்தில் ஏபிவிபி குறித்து கூறப்பட்டுள்ளதாவது:

ஏபிவிபி பழைமையான மிகப்பெரிய மாணவர் அமைப்புகளில் முதன்மையானதாகும்.சமூக சேவைக் கான நீண்ட வரலாறைக் கொண்டுள்ளது.  ஏபிவிபி  சரியான திசையில், மாணவர்களிடையே புனிதத்தையும், நிலையான வளர்ச்சியையும் முன்னெடுக்கிறது.

நாடுதழுவிய மாணவர் அமைப்பான ஏபிவிபி தேசிய மறுகட்டமைப்பு குறிக்கோளுடன், பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தின் ஒவ்வொரு அசைவுகளிலும் உள் ளது. முழுமையான கல்விச் சகோதரத்துவத்தில் மூழ்கிய நம்பிக்கையைக் கொண்டுள்ளது.

ஏபிவிபி கீழ்க்கண்டவற்றை உள்ளடக்கிய செயல்பாடு களை முதன்மையானவையாகக் கொண்டுள்ளது.

இயற்கைப் பேரிடர் காலங்களில் நிவாரண பணிகள், மரக்கன்றுகளை நடுதல் மற்றும் பருவநிலை மாற்றங்களுக் கான சூழலியல் திட்டங்கள்,  குருதிக்கொடை முகாம்களை நடத்துதல்என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபோன்ற முகமூடிகளை அணிந்துதான் காந்தியா ரின் உயிரைக் குடித்தது - காமராசரின் உயிரைக் குடிக்க நிர்வாண ஆட்டம் போட்டது இந்தக் கும்பல் என்பது நினைவிருக்கட்டும்?

வடலூர் வள்ளலார் கசாப்புக் கடை என்றால் மக்கள் ஏற்பார்களா? காமராசர் பெயரால் உள்ள ஒரு கல்லூரியில் ஏபிவிபி என்பதையும் எவரால்தான் ஏற்க முடியும்?

கல்லூரி நிர்வாகம் இந்த ஏபிவிபி எனும் மதவாத அமைப்பை என்.சி.சி., என்.எஸ்.எஸ். அமைப்புகளோடு சமப்படுத்தி மாணவர்களிடையே அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறோம் - இல்லையெனில் இது மக்கள் பிரச்சினையாகி வீதிக்கு வரும் என்றும் எச்சரிக்கிறோம்!

No comments:

Post a Comment