ஒற்றைப் பத்தி - ‘வாரிசுகள்!' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 5, 2021

ஒற்றைப் பத்தி - ‘வாரிசுகள்!'

‘‘அவர் ஊழல்வாதிதான்; குடும்பத்தை ஆட்சிக்கு கொண்டு வருபவர்தான், நாத்திகர்தான்; ஆனால், என்ன செய்ய? வேறு மாற்று இல்லையே'' என்று ஒவ்வொருமுறை வாக்களித்த பின் ''உங்களை நீங்களே தேற்றிக் கொண்டிருக்கிறீர்கள்'' - வாக்காளர்கள்மீது குற்றப் பத்திரிகை ஒன்றை 'துக்ளக்'கில் தாக்கல் செய்துள்ளார் திருவாளர் மாலன் என்ற பூணூலார்.

முதலில் மற்றவர்களுக்கு அறிவுரை கூறும் யோக்கியதை பார்ப்பனர்களுக்குக் கிடையவே கிடையாது.

மற்றவர்கள் எல்லாம் சூத்திரர்கள் (வேசி மக்கள்), நாங்கள் மட்டுமேதான் துவிஜாதியினர் - இரு பிறப்பாளர்கள் என்று அறிவிக்கும் பூணூலை அணிந்து கொள்வோர் யாராக இருந்தாலும், பார்ப்பனர் அல்லாதாருக்கு அறிவுரை கூறவோ, வழிகாட்டவோ யோக்கியதை கிடையாது.

சங்கர மடம் என்றால் குறிப்பிட்ட பார்ப்பனர்கள்தான் சங்கராச்சாரியாராக வர முடியும் என்பதை வரிந்து கட்டிக் கொண்டு பேசும் - எழுதும் கூட்டம் அரசியலில் வாரிசுகள்பற்றிப் பேசுவதற்குக் கிஞ்சிற்றும் உரிமை கிடையாது.

கோவில்களில் அர்ச்சகர்களாக பார்ப்பனர்கள்தான் வர முடியும் என்று உச்சநீதிமன்றம் வரை சென்று கூக்குரல் போடும் கூட்டம் குடும்ப அரசியல் குறித்துப் பேனா நகர்த்த எந்த வகையிலும் உரிமை படைத்ததல்ல.

‘‘கிரிக்கெட்டில் இப்பொழுது சாதனை படைத்த இளைஞர்கள் சாதாரண பின்னணியில் இருந்து வந்தவர்கள்; வாரிசு அடிப்படையில் வந்தவர்கள் அல்ல'' என்று எழுதுகிறார்.

ஜீவா என்ற திரைப்படம் வந்ததே நினைவு இருக்கிறதா?  முதுகில் பூணூல் இருக்கிறதா என்று தடவிப் பார்த்து ஆட்டத்தில் இடம் கொடுப்பது குறித்து முகரையில் அறைவது போன்ற காட்சி இடம்பிடித்ததே - மறந்து போயிற்றா?

'கிரிக்கெட்' என்றாலே அக்ரகாரவாசிக்கு உரியது என்ற நிலைபற்றி மா(பா)லன்கள் சிந்திக்கட்டும். முதலில் மற்றவர்களை சமமானவர்கள் என்று மதிக்கும் வகையில் பூணூலை அறுத்தெறிந்து விட்டு பேனா பிடிக்கட்டும்!

- மயிலாடன்

No comments:

Post a Comment