உ.பி. பா.ஜ.க. சாமியாரின் ஆட்சியின் ஜனநாயக விரோதப் போக்கு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 8, 2020

உ.பி. பா.ஜ.க. சாமியாரின் ஆட்சியின் ஜனநாயக விரோதப் போக்கு!

செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்மீது  தேசத்துரோக வழக்காம்!



புதுடில்லி, அக். 8 ஆதிக்க ஜாதியைச் சேர்ந்த 4 ஆண்களால் கொடூரமாக தாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்யப்பட்ட மாணவியின் உறவினர்களைச் சந்திப்பதற்காக சென்ற ஊடகவியலாளர்மீது தேசத் துரோக வழக்கைப் தொடுத்துள்ளது உ.பி. பா.ஜ.க. சாமியாரின் ஆட்சி.


மலையாள செய்தி நிறுவனங்களில் பணிபுரியும் 41 வயதான டில்லியைச் சேர்ந்த ஊடகவியலாளர் மற்றும் 3 பேர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புடன் தொடர்பு இருப்பதாகக் கூறி தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. மேலும், அவர்களுக்கு பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாணவர் அமைப்பான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (சி.எஃப்.அய்.) உடன் தொடர்பு உள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


ஆதிக்க ஜாதியைச் சேர்ந்த 4 ஆண்களால் கொடூரமாக தாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்யப்பட்ட மாணவியின் உறவினர்களைச் சந்திப்பதற்காக, அவர்கள் 3 பேரும் ஹத்ராசுக்குச் சென்று கொண்டிருந்தபோது, திங்கள்கிழமை (5.10.2020) பிற்பகல் மதுராவில் உள்ள ஒரு சுங்கச்சாவடியில் உத்தரப்பிரதேச காவல்துறை யினரால் தடுக்கப்பட்டனர்.


உ.பி. காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்ட ஊடகவியலாளர்  கேரள யூனியன் ஆஃப் ஒர்க் ஜர்னலிஸ்ட்ஸ் (கே.யு.டபிள்யூ.ஜே) செயலாளர், பத்திரிகையாளர் சித்திக் கப்பன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். தற்போது அவர் மதுரா காவல்துறையின் தடுப்புக் காவலில் உள்ளார். கப்பனைத் தவிர, சி.எஃப்.அய். அலுவலக பொறுப்பாளர்களான அதிக்-உர்-ரஹ்மான் மற்றும் மசூத் அஹமத் ஆகியோர்  ஆலம் என அடையாளம் காணப்பட்ட மற்றொரு நபருடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.


உபா சட்டம் (யு.ஏ.பி.ஏ) முதன்மையான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமாகும்.  இது தனிநபர்கள் மற்றும் சங்கங்களின் சில சட்டவிரோத நடவடிக்கைகளைத்  தடுப்பது மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராகக் கையாள்வதை நோக்கமாகக் கொண்டது ஆகும்.


சித்திக் கப்பன் கேரளாவைச் சேர்ந்தவர் என்றாலும் டில்லியின் நிஜாமுதீன் பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறார்.  ரஹ்மான் முசாபர் நகரைச் சேர்ந்தவர். அஹமத் பஹ்ரைச்சிலிருந்து வந்துள்ளார்.  ஆலம் ராம்பூரில் இருந்து வந்துள்ளார்.


விசாரணையின்போது, “அவர்கள் ​​பாதிக்கப்பட்ட வர்களின் குடும்பத்தினரை சந்திக்க டில்லியில் இருந்து ஹத்ராசுக்கு பயணிப்பதாக கூறினார்கள். மேலும், குடும்பத்தினரின் குரலை வெளிப்படுத்தி அவர்களுக்கு நீதி வழங்க விரும்புவதாகக் கூறினார்கள்” என்று மதுரா வில் உள்ள ஒரு காவல்துறை அதிகாரி கூறினார்.


“திங்கள்கிழமை காலை மான்ட் சுங்கச் சாவடியில் நடத்தப்பட்ட சோதனையின்போது, சுவிஃப்ட் டிசைர் காரின் வருகை சந்தேகத்திற்குரியதாக இருப்பதைக் கண்டோம். நாங்கள் அதில் இருந்த 4 நபர்களிடம் விசாரித்தோம். அவர்கள் குற்றவிசாரணைப் பிரிவு 151-இன் கீழ் தடுப்பு கைதுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் ஹத்ராஸை நோக்கி சென்று கொண்டிருந்ததாக தெரிகிறது. அவர்கள் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புடன் தொடர்பு வைத்துள்ளதாக கூறியது குறித்து விசாரித்து வருகிறோம்'' என்று மதுரா எஸ்.எஸ்.பி கவுரவ் குரோவர் கூறினார்.


மதுரா காவல்துறையினர் அவர்களிடம் இருந்து மடிக்கணினிகள், தொலைபேசிகள் ஆகியவற்றில் இருந்த ஆர்ப்பாட்டங்கள் தொடர்பான செய்திகள், ஆவணங்களைக் கைப்பற்றியதாகக் கூறினர். அவை அப்பகுதியில் சட்டம் -ஒழுங்கை பாதிக்கக்கூடும் என்று மதுரா காவல்துறையினர் கூறுகின்றனர்.


இது குறித்து மலையாள செய்தி இணையதள ஆசிரியர் கே.என்.அசோக் கூறுகையில், “சித்திக்கப்பன் ஜனவரி முதல் டில்லி-என்.சி.ஆரில்  வசித்து வந்து எங்களுக்காக எழுதுகிறார். திங்கள்கிழமை அவர் ஒரு செய்திக்காக ஹத்ராஸுக்குப் போவதாகக் கூறி எனக்கு குறுஞ்செய்தி அனுப்பினார். அவருடன் வந்த 3 பேர் யார் என்று எனக்குத் தெரியாது. நேற்று மாலை அவரை அழைக்க முயற்சித்தோம். ஆனால், அவரை எங்களால் தொடர்பு கொள்ளமுடியவில்லை. பின்னர், அவர் மதுரா காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை நாங்கள் அறிந்தோம்” என்று கூறினார்.


திங்கள்கிழமை மதியம் 2 மணியளவில் மான்ட் சுங்கச்சாவடியில் சித்திக்கப்பன் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கே.யு.டபிள்யூ.ஜே.யின் முன்னாள் செயலாளர், பத்திரிகையாளர் மணிகாந்தன் தெரிவித்தார். “கப்பன் இந்த ஆண்டு ஆழிமுகம் என்ற மலையாள ஊடகத்திற்காக பணியாற்றி வருகிறார். அவருக்கு பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் (பி.எஃப்.அய்.) இந்தியா உடன் எந்த தொடர்பும் இல்லை. முன்னதாக, அவர் பி.எஃப்.அய். பிரச்சார பத்திரிகையாக இருக்கும் தேஜாஸுக்கு எழுதுவார். அது நிதி நெருக்கடியால் 2018 இல் மூடப்பட்டதால் அவர் வேலையை இழந்தார். பின்னர், அவர் ‘தல்சமயம்’ என்ற மற்றொரு செய்தித்தாளில் வேலை செய்யத் தொடங்கினார்'' என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதனிடையே, கே.யு.டபிள்யூ.ஜே.யின் டில்லி பிரிவு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு கப்பன் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளது குறித்து கடிதம் எழுதியுள்ளது. “ஒரு பத்திரிகையாளரை சட்டவிரோதமாக தடுத்து வைத்ததற்கு எதிராக நாங்கள் உச்சநீதிமன்றத்தில் ஒரு ஹேபியஸ் கார்பஸ் மனுவை தாக்கல் செய்துள்ளோம் .  நம் நாட்டின் அரசமைப்பு  ஊடகச் சுதந்திரத்தை பாதுகாக்கிறது. சித்திக்கப்பனின் கைது அரசமைப்பு விழுமியங்களை மீறுவதாகும்” என்று யூனியனின் டில்லி பிரிவு தெரிவித்துள்ளது.


கே.யு.டபிள்யூ.ஜே. தலைவர் மிஜி ஜோஸ் கையெழுத்திட்டு உ.பி. முதல்வருக்கு எழுதிய கடிதத்தில், “அவர் கே.யு.டபிள்யூ.ஜே.யின் செயலாளர் மேலும் இப்பகுதியில் தற்போதைய சூழ்நிலையை செய்தியாக்க திங்கள்கிழமை காலை ஹத்ராசுக்குச் சென்றிருந்தார் ஹத்ராஸ் சுங்கச் சாவடியில் இருந்து அவர் உ.பி மாநில காவல்துறையால் காவலில் எடுக்கப்பட்டுள்ளார் என்பதை நாங்கள் அறிந்துகொண்டோம். அவரை தொடர்பு கொள்ள எடுத்த முயற்சிகளும், டில்லியைச் சேர்ந்த சில வழக்குரைஞர்களும் எடுத்த முயற்சிகளும் வெற்றிபெறவில்லை” என்று தெரிவித்துள்ளார்.


பிரஸ் கிளப் ஆஃப் இந்தியாவும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. சித்திக்கப்பனை தாமதமின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளது.


பஹ்ரைச் கூடுதல் எஸ்.பி. கே. ஞானஜெய் சிங் கூறுகையில், “மசூத் அகமது (23) என அடையாளம் காணப்பட்டவர் ஜர்வால் வட்டாரத்தில் வசிப்பவர். பி.எஃப்.அய். சி.எஃப்.அய். மற்றும் எஸ்.டி.பி.அய். போன்ற அமைப்புகள் மத பதற்றத்தையும், கலவரங்களையும் தூண்ட சதி செய்தல், அமைதியை சீர்குலைத்தல் ஆகிய ஒத்த சித்தாந்தத்தில் செயல்படுகின்றன. இந்த நபர் மதுராவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்; கடந்த காலங்களிலும், அயோத்தியில் உள்ள ராம் ஜென்மபூமியில் பூமி பூஜையின் போது கலவரங்களைத் தொடங்க முயன்றதற்காக பி.எஃப்.அய். மற்றும் எஸ்.டி.பி.அய். உடன் தொடர்புடைய நபர்களை ஜர்வால் வட்டாரத்தில் நாங்கள் கைது செய்துள்ளோம்” என்று கூறினார்.


மத்தியில் உள்ள அரசும், சாமியார் ஆதித்யநாத் அரசும் அரசமைப்புச் சட்டத்தை சிறிதளவும் மதிக்காமல் தான் தோன்றித்தனமாக தொடர்ந்து  நடந்து கொண்டு இருக்கின்றன.  ஹத்ராஸ் நிகழ்வை மறைப்பதற்காக அரச நிர்வாகமே முன்வந்து பெண்ணின் உடலிலிருந்த சாட்சியங்களை அழித்த பிறகு 11 நாட்கள் கழித்து மருத்துவ சோதனைக்கான மாதிரிகள் சேகரித்துள்ளது, அதே போல் இறந்த உடன் உடற்கூறு ஆய்வு அறிக்கையையும் இதுவரை பொதுவெளியில் வைக்காமல் ஊடகவியாளர்கள் கேட்டதற்கு நீங்கள் என்ன அப்பெண்ணின் குடும்பத்தினரா என்று எதிர்க்கேள்வி கேட்கிறது. குடும்பத்தார் கேட்டால் உங்களுக்கு ஆங்கிலமும் தெரியாது, இந்தியும் தெரியாது ஆகவே இதை வைத்து ஒன்றும் செய்யமுடியாது என்று கூறி உடற்கூறு ஆய்வு அறிக்கையை தரமறுக்கிறது.


 உடலை இரவோடு இரவாக வயல் ஓரத்தில் காய்ந்த குட்டை ஒன்றில் வைத்து எரித்துவிட்டு எரித்த இடத்தைக்கூட மறு நாள் தூய்மைப்படுத்தி அங்கே தண்ணீரை நிரப்பிவிட்டார்கள். ஒருபயங்கரப் படுகொலையை மறைக்க தொடர்ந்து துணை போன அரசு அந்த செய்திகளை சேகரிக்கச் சென்றவர்களைக் கூட தேசத் துரோக வழக்கில் கைது செய்ததன் மூலம் சாமியார் முதல்வர் ஆதித்யநாத் மக்களாட்சியின் மாண்பை நொறுக்கிவிட்டார்.


No comments:

Post a Comment