‘‘ஊசி  மிளகாய்'' - பணக்காரர்களுக்குத்தான் ஏழுமலையான் தரிசனமா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 8, 2020

‘‘ஊசி  மிளகாய்'' - பணக்காரர்களுக்குத்தான் ஏழுமலையான் தரிசனமா

பணக்காரர்களுக்குத்தான் ஏழுமலையான் தரிசனமா?


- சாமானிய பக்தர்கள் குற்றச்சாட்டு!



திருமலை, அக்.8 பணக்காரர்களுக்குத்தான் திருப்பதி ஏழுமலையானின் தரிசன பாக்கியம் கிடைக்குமா? என இலவச தரிசனத்தை அமல்படுத்தாத காரணத்தால் அதிருப்தி அடைந்துள்ள சாமானிய பக்தர்கள் திருப்பதி தேவஸ்தானம் மீது குற்றம் சாட்டி வருகின்றனர்.


கரோனா பரவலை தடுக்க 82 நாட்கள் வரை பக்தர்களுக்கு ஏழுமலையானின் தரிசனத்தை ரத்து செய்திருந்த திருப்பதி தேவஸ்தானம், ரூ.300 சிறப்பு தரிசனத்தை ஆன்லைன் மூலமாகவும், மற்றும் தினமும் 3000 பேருக்கு இலவச தரிசனத்தையும் அமல்படுத்தியது. படிப்படியாக ஆன்லைன் டிக்கெட்டுகளை அதிகரித்தது.


ஆனால், இலவச தரிசனத்தை முழுமையாக ரத்துசெய்துவிட்டது. இலவச தரிசனடோக்கன் வாங்க அதிக அளவில் பக்தர்கள் திருப்பதியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் அருகே காத்திருக்கின்றனர். இதனால் கரோனா தொற்று வர வாய்ப்பு உள்ளது என கூறி, இலவச டோக்கன் வழங்குவதை தேவஸ்தானம் நிறுத்தி விட்டது.


ஆனால், படிப்படியாக ரூ. 300 ஆன்லைன் டோக்கன்களை அதிகரித்தது. தற்போது தினமும் 16,000 பக்தர்கள் ரூ.300 செலுத்தி ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகளை பெற்று ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர்.


இவர்களைத் தவிர, அறங்காவலர் குழு தலைவர், இதன் உறுப்பினர்கள், எம்.பி.,க்கள், ஆந்திர எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் பிரமுகர்களின் சிபாரிசு கடிதம்மூலம் விஅய்பி பிரேக் தரிசனங்கள், சுபதம் வழியாக ரூ.300சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை வழங்குகின்றனர்.


மேலும், ஒரு பக்தருக்கு ரூ. 10 ஆயிரம் செலுத்தினால் அவர் சிறீவாணி அறக்கட்டளை எனும் திட்டத்தின் கீழ் சுவாமியை தரிசிக்கலாம். ரூ.1000 ஆன்லைனில் செலுத்தினால், கல்யாண உற்சவம் டிக்கெட் பெற்று 2 பக்தர்கள் சுவாமியை 90 நாட்களுக்குள் தரிசிக்கலாம். பிரசாதம் அவர்களின் வீட்டிற்கே வரும்.


இப்படியாக பணம் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே திருப்பதி ஏழுமலையானின் தரிசன பாக்கியம் கடந்த ஒருமாதமாக தொடர்கிறது. இதனால், சாமானிய பக்தன்,சுவாமியை பணம் இல்லாமல் தரிசிக்க முடியாத நிலை உள்ளது. ஆதலால், தர்ம தரிசனத்தை மீண்டும் அமல் படுத்த வேண்டுமென சாமானிய பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ரூ.300 சிறப்பு தரிசனத்தைஆன்லைன் மூலம் வழங்குவதை போன்று, தர்ம தரிசன டோக்கன்களையும் ஆன்லைன் மூலம் விநியோகம் செய்தால் சாமானியபக்தர்களும் ஏழுமலையானை தரிசிக்கலாம் அல்லவா? எனகேள்வி எழுப்புகின்றனர். உலகின் பணக்கார கடவுள் ஏழுமலையான் என்பது தெரிந்ததே. ஆனால், இப்படி பணக்காரர்களுக்காக மட்டுமே என அதிகாரிகள் அவரின் தரிசனத்தை ஒரு குறிப்பிட்ட வளையத்திற்குள் வைக்கக் கூடாது என பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


‘இந்து தமிழ் திசை', 8.10.2020, பக்கம் 8.


அர்த்தமுள்ள ஹிந்து மதத்தைத் தவிர இப்படி வேறு  எந்த மதத்தில் அதிக பணம் - உடனே கடவுள் காட்சி என்ற நிலை உண்டு? ஹிந்து மதத்தை மட்டும் குறை கூறுகிறீர்களே என்று திராவிடர் கழகத்தைப் பார்த்துக் கேள்வி கேட்போரே! (அது உண்மையல்ல. திராவிடர் கழகத்திற்கு எம்மதமும் சம்மதமில்லை; ஆனால், அதற்காக ஒருவர்மீது மற்றவர் பாயவேண்டும்; வன்முறையில் ஈடுபடவேண்டும் என்பதை ஏற்காத மனிதாபிமானமே அதன் கொள்கையாகும்) வேறு மதங்களில் இப்படி பணத்துக்குப் பல்லிளிக்கும் 'தரிசனம்' தயாரா? ரெடிமேட் ஆக்கப்பட்டுள்ள கடவுளர் - காட்சிகள் உண்டா?


மனசாட்சியுடன் பதில் கூறுங்கள்! இல்லாத கடவுளைச் சொல்லி பொல்லாத முறையில் இப்படி பக்தி - சுரண்டல் - வியாபாரம் நடத்தலாமா?


No comments:

Post a Comment