திராவிடத் தத்துவத்தின் ஆளுமைமிக்க அடையாளம் கலைஞர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 31, 2020

திராவிடத் தத்துவத்தின் ஆளுமைமிக்க அடையாளம் கலைஞர்

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் சமூகநீதிக் கருத்தரங்கத்தில் தி.மு.க. கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆ.இராசா அவர்களின் உரை



சென்னை, ஆக. 31- தலைவர் கலைஞர் அவர்கள், வாக்கு வங்கி அரசியலுக்கு அப்பாற்பட்டு, பெரியாரு டைய தத்துவங்களை, ஆட்சி அதிகாரத்திற்கு அவர் வந்தபொழுது, நிறைவேற்றிக் காட்டினார் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினரு மான ஆ.இராசா அவர்கள் உரையாற்றினார்.


கலைஞர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் சமூகநீதி கருத்தரங்கம்


கடந்த 7.8.2020 அன்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் சமூகநீதி கருத்தரங்கத்தில்' (காணொலிமூலம்) திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினரு மான ஆ.இராசா அவர்கள் நினைவுரையாற்றினார்.


அவரது நினைவுரை வருமாறு:


அனைவருக்கும் வணக்கம். தலைவர் கலைஞர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளினை யொட்டி நடைபெறுகின்ற இந்தக் கருத்தரங்கத்தினு டைய தலைவர் தமிழர் தலைவர் வணக்கத்திற்கும், மதிப்பிற்கும் உரிய ஆசிரியர் பெருந்தகை அவர்களே,


தாய்க்கழகத்தின் சார்பில், தலைவர் கலைஞர் அவர்களுடைய இரண்டாவது நினைவு நாளினை சமூகநீதிக் கருத்தரங்கமாக நடத்திக் கொண்டிருக்கின்ற ஆசிரியர் அவர்களுக்கும், திராவிடர் கழகத்திற்கும் என்னுடைய நன்றியை, பாராட்டுதலை முதலில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.


எனக்கு முன்பாக உரையாற்றிய அரசியல் கட்சி களின் நம்முடைய கூட்டணித் தலைவர்கள், தலைவர் கலைஞர் அவர்களுடைய பல்வேறு பரிமாணங்களை இங்கே எடுத்துக் காட்டியிருக்கிறார்கள்.


அண்ணா அவர்கள் மறைந்தபொழுது


கலைஞரின் கவிதாதஞ்சலி!


தலைவர் கலைஞர் அவர்களைப்பற்றி, அவரு டைய சமூகநீதிக் கொள்கைகளைப்பற்றி பேசவேண் டும் என்று சொன்னால், அது ஒரு தொடர் கருத்தரங் கமாக நிகழ்த்தப்படவேண்டும். எனவே, நேரம் கருதி, நான் சுருக்கமாக உரையாற்றவேண்டும் என்ற எண் ணத்தோடு, தலைவர் கலைஞர் அவர்களின் பன்முக ஆளுமையை நினைவுகூர்கின்ற இந்த நேரத்தில், அண்ணா அவர்கள் மறைந்தபொழுது, அவருடைய ஆளுமையை, தலைவர் கலைஞர் அவர்கள் தன்னுடைய கவிதாஞ்சலியில் குறிப்பிட்டார்கள்.


தலைவரென்பார் தத்துவ மேதை என்பார்


நடிகரென்பார் நாடக வேந்தரென்பார்


சொல்லாற்றல் சுவைமிக்க எழுத்தாற்றல்


பெற்றார் என்பார்


மனிதரென்பார் மாணிக்கமென்பார் மாநிலத்து


அமைச்சரென்பார் அன்னையென்பார்


அருள்மொழிக் காவல் என்பார்


அரசியல்வாதி என்பார்


அத்தனையும் தனித்தனியே


சொல்வதற்கு நேரமற்றோர்


நெஞ்சத்து அன்பாலே


அண்ணா என்ற ஒரு சொல்லால்


அழைக்கட்டும் என்றே அவர் அன்னை


பெயரும் தந்தார்


என்று அண்ணாவிற்கு இருக்கின்ற பல்வேறு பன்முகங்களையெல்லாம் தன்னுடைய கவிதாஞ்சலியில்  கொண்டு வந்து காட்டியிருப்பார்.


அண்ணாவிற்குப் பொருந்துகின்ற அத்துணை ஆளுமைகளும் உங்களுக்கும் பொருந்திப் போகிறது!


தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுது ஒருமுறை அவரை மேடையில் வைத்துக்கொண்டு நான் பேசுகிறபொழுது சொன் னேன்,


‘‘அண்ணா அவர்களுக்கு நீங்கள் என்னென்ன ஆளுமைகளைத் தரவேண்டும் என்று உங்களுடைய கவிதைகளில் கொண்டுவந்து குவித்தீர்களோ - அத்தனை ஆளுமைகளும் - உங்களுக்கும் பொருந் திப் போகிறது கால ஓட்டத்தில் என்பதை நான் அன்றைக்கு, அவர் உயிரோடு இருக்கின்றபொழுதே அந்த மேடையில் சுட்டிக்காட்டினேன்.


எனவே, அப்படிப்பட்ட பல்வேறு ஆளுமை களைக் கொண்ட தலைவர் கலைஞர் அவர்களுடைய ஆளுமையைப்பற்றி நம்முடைய தலைவர்கள் எல்லாம் சிறப்பான முறையில் இங்கே உரையாற்றியிருக்கிறார்கள்.


நான் தலைவர் கலைஞர் அவர்களை, அருகிலி ருந்து மட்டுமல்ல, மாணவப் பருவத்திலேயிருந்து அவருடைய எழுத்துகளைப் பேச்சுகளை எல்லாம் உள்வாங்கியவன் என்ற முறையில், திராவிடர் கழகத் தில் இருந்த காலத்திலேயே, மாணவர் அணியில் நான் பணியாற்றிய காலத்திலேயே, திராவிடர் கழக மாநாடு களில் நிறைவுப் பேருரையை அழகாக ஆற்றிக் கொண்டிருந்ததையெல்லாம் கண்ணுற்றவன் என்ற வகையில், தலைவர் கலைஞர் அவர்களை நான் எப்படிப் பார்க்கிறேன் என்றால், திராவிடர் தத்துவத்தி னுடைய ஆளுமைமிக்க ஓர் அடையாளமாக, ஒரு தத்துவத்தின் தலைவராக அவரைப் பார்க்கிறேன் என்று நான் பலமுறை குறிப்பிட்டு இருக்கிறேன்.


ஏனென்றால், ஓர் அரசியல் கட்சியினுடைய தலை வர் என்பவர், வாக்கு வங்கி அரசியலை முன்னிறுத் தித்தான் அரசியல் செய்யவேண்டும். என்னதான் ஒரு தத்துவத்தை தன்னகத்திலே சுவீகரித்துக் கொண்டி ருந்தாலும்கூட, என்னதான் தந்தை பெரியாரைத் தன்னுடைய தலைவராக ஏற்றுக் கொண்டாலும்கூட, பெரியார் தந்த தத்துவத்தை, அண்ணா கொண்டிருந்த கொள்கையை, தன்னுடைய தத்துவார்த்தத் தடமாக ஏற்றுக் கொண்டிருந்தாலும்கூட, வெகுஜனமக்கள் அரசியல் என்று வருகிறபொழுது, பொதுமக்களைக் கவர்ந்திழுக்க வேண்டும் என்று வருகிறபொழுது, தத்துவத்தை நேரிடையாக, வெளிப்படையாக அல் லது ஒரு விசையோடு கூடிய நேரிடையான அழுத் தத்தை தர முடியாத சூழல்தான், ஒரு தத்துவார்த்த ரீதியான இயக்கத்தில் இருப்பவர்களுக்கு ஏற்படுகின்ற சவால், சங்கடம்.


அப்படிப்பட்ட சவால்களை, சங்கடங்களை தலை வர் கலைஞர் அவர்கள் எவ்வளவு மதிகூர்மையுடனும், பண்பாட்டு அணுகுமுறையோடும் நிறைவேற்றிக் காட்டினார்கள் என்கிறபொழுது நான் உள்ளபடியே வியந்து போகிறேன்.


மூடநம்பிக்கை நிறைந்த சமுதாயத்தைத் தன்னுடைய ஓங்கிய குரலால் எதிர்த்து எழுந்தார்


தந்தை பெரியார் இந்த சமூகத்தின் இரண்டாயிரமாண்டு காலமாக கட்டமைக்கப்பட்டு இருக்கின்ற, கெட்டிப்பட்டுப் போன, ஜாதீய சமுதாயத்தை, மூட நம்பிக்கை நிறைந்த சமுதாயத்தை தன்னுடைய ஓங்கிய குரலால் எதிர்த்து எழுந்தார் என்றால், அவருக்கிருந்த எதிர்ப்பு எப்படி அடங்கிப் போயிற்று என்றால், அவர் தன்னலமற்றவர்; அவருடைய தொண்டு தன்னலமற்ற தொண்டு. அவருக்கு ஏற்பட்ட இழப்புகளையெல்லாம், பொருளாதார இழப்பு என் றாலும் அல்லது வேறு எந்த இழப்பாக இருந்தாலும், இந்த சமுதாயத்திற்கு ஒரு புது நோக்கத்திற்காகச் செலவிட்டார்.


இன்னும் குறிப்பாக, சொல்லவேண்டுமென்று சொன்னால், செல்வாக்குள்ள ஜாதி என்று சொல்லக் கூடிய ஜாதியில் பிறந்தவர் பெரியார். ஜாதிப் பெரு மையை, நினைத்திருந்தால் அவர் பேசியிருக்க முடியும். ஆனால், பெரியார் அவர்கள் தாழ்த்தப்பட்ட ஜாதியினருக்காகவும் பேசினார்; சக மனிதனுக்காகப் பேசினார்; அடுக்கு மூட்டையிலிருக்கிற கடைசி மூட்டைக்காகவும் அவர் பேசினார்.


தனவந்தரா என்று கேட்டால், செல்வம் என்று எடுத்துக்கொண்டால், அந்தக் கால கட்டத்திலேயே வருமான வரி செலுத்துகின்ற அளவிற்கு, மிகப்பெரிய தனவந்தராக இருந்த அவர், வறியவர்களுக்காக, ஏழைகளுக்காகப் போராடினார்.


ஆணாதிக்க சமுதாயத்தில், அதுவும் உயர்ந்த ஜாதி என்று கருதப்படுகின்ற ஒரு சமுதாயத்தில் பிறந் தவருக்கு, ஆணாதிக்கத் திமிர் இருந்திருக்கவேண்டும். ஆனால், அவர் பெண்களுக்காகப் போராடினார்.


ஆக, ஒரு தனவந்தராக இருந்துகொண்டு, ஏழை களுக்காக-


ஓர் ஆணாக இருந்து கொண்டு, பெண்களுக்காக-


பெரிய ஜாதி என்று சொல்லக்கூடிய ஒரு சமு தாயத்தில் பிறந்து - தாழ்த்தப்பட்ட மக்களுக்காக, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகப் போராடியவர்.


தன் சுகத்தை இழந்தவர் - இந்த மானுடப் பரப்பில், தனக்கு சமுதாயத்தில் வழங்கப்பட்டு இருக்கின்ற எல்லா அங்கீகாரங்களையும், அது சரியோ, தவறோ - அப்படிப்பட்ட அங்கீகாரம் எல்லாம் போலியான அங்கீகாரம் என்று ஒதுக்கிவைத்துவிட்டு,


மானுட சமுத்திரம் நானென்று கூவுவேன் என்ற பாரதிதாசன் கவிதையைப் போல,


அம்பேத்கர் சொல்வாரே, 'யுனிவர்சல் பிரதர் ஹூட்‘


அப்படிப்பட்ட ஒரு மானுட சகோதரத்துவத்திற்காக தன்னலமற்று உழைத்தவர் தந்தை பெரியார் என்பதால், அவர் எதிர்த்துப் பேசிய பேச்சுகளை இந்த சமுதாயம் தாங்கிக் கொண்டது.


ஆனால், பெரியார் அளவிற்கு ஒரு மிகப்பெரிய தன்னலமற்ற, தன்னுடைய செல்வத்தையெல்லாம் இழக்கக்கூடிய அளவிற்கு தலைவர் கலைஞர் அவர் களுடைய அரசியல் வாழ்க்கை இல்லாவிட்டாலும்கூட, தலைவர் கலைஞர் அவர்களுடைய எழுத்தும், பேச்சும் - இந்த சமூகத்தை ஏதாவது ஓர் அங்குல மாவது உயர்த்திடவேண்டும் என்ற அவாவில் பிறந்தவை என்ற நீண்ட நெடிய, அவருடைய பேச்சு, எழுத்து.


மிகப்பெரிய ஒரு தத்துவ அடையாளம்


மேற்கத்திய நாடுகளில் சொல்வார்கள், கலை என்பது கலைக்காகவே. ஆனால், திராவிடத் தத்துவம் என்பது, கலை என்பது கலைக்காக அல்ல. கலை மக்களுக்காகவே என்கிற காரணத்தினால், தன்னு டைய எழுத்து, பேச்சு எல்லாவற்றையும் இந்தத் தமி ழர்களுக்காக அர்ப்பணித்த காரணத்தினால், தந்தை பெரியார் அவர்கள் எப்படி, எதிர்நீச்சல் போட்டவராக - சமூகத் தளத்திலும், தத்துவார்த்த தளத்திலும் இந்தத் தமிழ்ச் சமுதாயம் ஏற்றுக்கொண்டதோ, அதைப்போல, தலைவர் கலைஞர் அவர்கள், வாக்கு வங்கி அரசி யலுக்கு அப்பாற்பட்டு, பெரியாருடைய தத்துவங் களை, ஆட்சி அதிகாரத்திற்கு அவர் வந்தபொழுது, நிறைவேற்றிக் காட்டினார் என்பது, அவருக்கு இருக் கிற மிகப்பெரிய ஒரு தத்துவ அடையாளம் என்று நான் கருதுகிறேன்.


எனக்கு முன்பு இங்கே உரையாற்றிய தலைவர்கள் எல்லாம் சொன்னார்கள், சமத்துவபுரத்தைக் கொண்டு வந்தார் என்று. சமத்துவபுரம் என்பது, ஒரு மிகப்பெரிய புரட்சிக்கான ஒரு அடிவித்து - அடையாளம்.


ஜாதி என்பது கண்ணுக்குப் புலப்படாத ஒன்று!


நான் இந்த சமுதாயத்தில் ஜாதி எங்கே இருக்கிறது என்று கேட்டால், மூளைக்குள் இருக்கிறது ஜாதி.


யார் வன்னியர்? யார் செட்டியார்? யார் கவுண்டர்? என்று ஓர் அறையில் இருக்கின்றவர்களையோ அல்லது ஒரு பேருந்தில் பயணிக்கின்றவர்களையோ அல்லது ஒரு புதுத் தளத்தில் இயங்கிக் கொண்டிருக் கின்ற, ஓர் ஆயிரம் பேர் கூடுகின்ற இடத்தில், முகத்தை வைத்து, முடியை வைத்து அல்லது அவரு டைய மூக்கை வைத்து, காதுகளை வைத்து யார் பிற்படுத்தப்பட்டவர்? அந்தப் பிற்படுத்தப்பட்ட ஜாதி யில் உட்ஜாதி எது? தாழ்த்தப்பட்டவர் யார்? அந்தத் தாழ்த்தப்பட்டவர்களிலேயே மேலே யார்? கீழே யார்? என்றெல்லாம் பவுதீகத்தனமான ஓர் அடை யாளத்தை நாம் பார்க்க முடியாது.


எனவே, ஜாதி என்பது கண்ணுக்குப் புலப்படாத ஒன்று. எந்தப் புலனுக்கும் உட்படாத ஒன்று என்பதை, ஜாதீயத்தைப்பற்றிய ஆய்வு செய்த எல்லா அறிஞர் களும், அம்பேத்கர் உள்பட, பெரியார் உள்பட ஒப்புக்கொண்டார்கள்.


அதனால்தான், அது ஒரு கருத்தாக்கம் - மூளையில் இருக்கிறது என்று சொன்னார்கள்.


மூளையில் இருக்கின்ற ஜாதி, இன்னோர் இடத்தில் ஃபிசிக்கல் ஆஃப்ஜெக்ட் என்று சொல்லக்கூடிய ஒரு பவுதீகக் கட்டுமானமாக இருந்தது. அது எங்கே இருந் தது  என்று சொன்னால், ஒவ்வொரு கிராமத்திலும் இருந்தது. நகர்ப்புறத்தில் யார் வேண்டுமானாலும், எங்கே வேண்டுமானாலும் குடியேறலாம் - ஜாதி யில்லை - மனதிலே இருந்தது.


ஜாதி இன்றுவரை எங்கே இருக்கிறது?


ஆனால், மனதிலே இருந்த ஜாதி - நகர்ப்புறத்திலே தெரியாத ஜாதி - பல ஆயிரம் ஆண்டுகாலமாக - இன்றுவரை எங்கே இருக்கிறது என்று சொன்னால், கிராமங்களில்தான் இருக்கிறது. கிராமங்களில்தான் தெருக்களாகக் கிடக்கிறார்கள், வெவ்வேறு ஜாதி களாக - ஊர் வேறு - சேரி வேறு என்றெல்லாம் தனித் தனியாக கிராமங்களில் இருக்கிறது.


எனவே, இந்தக் கட்டுமானத்தை உடைக்க வேண் டும் என்று தேர்தல் அறிக்கையிலே சொல்லவில்லை. அப்படி சொல்லியிருந்தால், அதற்கு எதிர்ப்புகள்கூட வந்திருக்கும். அப்படி சொல்லியிருந்தால், அதற்காக ஒரு பெரிய விமர்சனம்கூட வந்திருக்கக் கூடும். ஏனென்றால், ஜாதி அடையாளத்தை, ஜாதிப் பெரு மிதத்தை விரும்புகின்றவர்கள் இந்தக் கட்டுமானத் தைப் கலைஞர் கொண்டு வருகிறார். இது தன்னுடைய ஜாதிப் பெருமிதத்தைத் தகர்க்கின்ற ஒரு செய்தி என்று, இந்த சமுதாயத்தில் அப்படிப்பட்ட ஒரு எதிர் மறை எண்ணம் வந்திருக்கக் கூடும்.


இரண்டாயிரம் ஆண்டுகாலமாக இருந்த பவுதீகக் கட்டுமானங்களைத் தகர்த்தெறிந்தார்


ஆனால், பெரியாரின் தத்துவத்தை ஏந்திக் கொண் டிருக்கக்கூடிய தலைவர் கலைஞர் அவர்கள்,


 தேர்தல் அறிக்கையில் இப்படிப்பட்ட யுக்தி வந்தால், அதற்கு எதிர்மறையான கருத்துகள் வரக்கூடும் என்று எண்ணியிருந்த காரணத்தினால், ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகு, சமத்துவபுரம் என்று 100 சமத்துவபுரங்களைக் கட்டினார்கள் என்று சொன்னால், இரண்டாயிரம் ஆண்டுகாலமாக இருந்த பவுதீகக் கட்டுமானங்களைத் தகர்த்தெறிந்து, முதல் முயற்சியாக, அவர் பெரியாரின் தத்துவத்தை, திராவிடத் தத்துவத்தை ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டு வந்தார் என்பதுதான் உண்மை.


எனவே, அந்த இடத்திலே தலைவர் கலைஞர் அவர்கள், வாக்கு வங்கி அரசியலுக்குக் கட்டுப்படாத, தனித்து நிற்கின்ற, தன்னுடைய ஆளுமையை வெளிப்படுத்துகின்ற பெரியாரின் பெருந்தொண்டராக நின்றிருக்கின்றார் என்பது உண்மை.


அதேபோல, பெண்களுக்குச் சொத்திலே சம பங்கு வேண்டும் என்று சொல்லியிருந்தால், ஆண் களுக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வாக்க ளிக்க வேண்டுமா? என்ற ஒரு எண்ணத்தை ஏற்படுத் தியிருக்கக் கூடும்.


- தொடரும்


No comments:

Post a Comment