செய்தி வெளியீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 6, 2024

செய்தி வெளியீடு

செய்தி வெளியீடு எண்: 582 நாள்: 16.3.2024
சீர்மரபினர் வகுப்பினர்களுக்கு Denotified Communities மற்றும் Denotified Tribes என இரண்டு சான்றிதழ்கள் வழங்குவதற்குப் பதிலாக ஒரே சான்றிதழ் வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவு.
சுதந்திரம் பெறுவதற்கு முன் ஆங்கிலேய ஆட்சியில் குற்றப் பரம்பரை சட்டத்தினால் (Criminal Tribes Act) பாதிக்கப்பட்ட வகுப்பினர்கள், சீர்மரபினர் வகுப்பு என வகைப்படுத்தப்பட்டு மிகப் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினரு டன் சேர்த்து 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு 68 வகுப்பினர்கள் சீர்மரபினர் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர். முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான அரசால் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் சார்பில் 29.7.2008இல் அரசாணை (நிலை) எண்: 85இல் தமிழ்நாடு சட்டம் 45/1994இன் கீழ் அறிவிக்கை வெளியிடப்பட்டு, சீர்மரபினர் வகுப்பினர் என சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

பின்னர், அரசாணை (நிலை) எண்: 26, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, நாள் 8.3.2019இல் வெளியிடப்பட்ட ஆணையில், மாநில அரசின் இடஒதுக்கீடு (20% reservation) மற்றும் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு இந்த 68 வகுப்பினர்களும் சீர்மரபினர் (DNC) என அழைக்கப்படுவர், எனவும் ஒன்றிய அரசின் நலத்திட்ட பயன்களைப் பெறுவதற்கு இந்த 68 வகுப்பினர்களும் சீர்மரபினர் (DNT) என அழைக்கப்படுவர் என ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

மேற்கண்ட அரசாணைகளின்படி இரண்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், அவற்றை பெறுவதில் நடைமுறையில் சிரமம் உள்ளதாகவும் அதற்கு பதிலாக ஒரே சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன. அந்த கோரிக்கைகளை அரசு ஆய்வு செய்து, சீர்மரபினர் வகுப்பினர்களுக்கு Denotified Communities / Denotified Tribes என இரண்டு சான்றிதழ்களுக்குப் பதிலாக ஒரே சான்றிதழ் வழங்க தெளிவுரைகள் வழங்குமாறு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள். வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய தெளிவுரையின்படி, இனி வருவாய் அலுவலர்கள் சீர்மரபின வகுப்பினர்களுக்கு ஒரே சான்றிதழ் வழங்குவார்கள்.
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை, சென்னை-9

– நன்றி: ஏப்ரல் 2024, ஓபிசி வாய்ஸ்

No comments:

Post a Comment