'புனித தீர்த்தம்' எது? பா.ஜ.க சொல்லட்டும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 7, 2024

'புனித தீர்த்தம்' எது? பா.ஜ.க சொல்லட்டும்!

அமலாக்கத்துறை – வருமான வரித்துறை – சி.பி.அய். அமைப்புகளை பயன்படுத்தி குற்றவாளிகள் என வழக்கு புனையப்பட்டவர்களை
‘புனித நீர்’ தெளித்து பரிசுத்தமானவர்களாக மாற்றும் மந்திரம் என்ன?
‘புனித தீர்த்தம்’ எது? பா.ஜ.க சொல்லட்டும்!

சென்னை,ஏப்.7- திமுக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பா.ஜ.க. எதிர்க் கட்சிகளை பணியவைக்க அமலாக்கத்துறை, சி.பி.அய்,, வருமானவரித்துறை ஆகியவற்றைப் பயன்படுத்தி ஊழல் குற்றவாளிகள் என முத்திரை குத்தி அவமானப் படுத்துவது ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி மிரட்டுவது அவர்களுடைய வழக்கம்.
அதன்பின் பாதிக்கப்பட்டவர்கள் பா.ஜ.க.வில் சேர்ந்து பா.ஜ.க.வால் புனித நீர் தெளிக்கப்பட்டு பரிசுத்த மாக்கப்படுகிறார்கள்.
இப்படிப்பட்ட அநீதியான – அக்கிரமமான அரசியல் நடத்தி பழிவாங்கப்பட்ட எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த வர்கள் யார்யார் என்பதை கவனிக்கலாம்..

அஜித் பவார்,

இவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்.
இவர் மகாராட்டிரா மாநில கூட்டுறவு வங்கியில் முறைகேடு செய்ததாகக் குற்றம் சாற்றப்பட்டு அமலாக்கத்துறை விசாரணை நடத்தப்பட்டது. அதன் காரணமாக இவர் 2023இல் பி.ஜே.பி. கட்சியில் சேர்ந்தார். அவர் மீது விசாரணை நிறுத்தப்பட்டுள்ளது.
பிரஃபுல் படேல்

இவரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்.

2017, மே மாதத்தில் ஏர் இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ் இணைப்பில் ஊழல் செய்ததாக சி.பிஅய் எப்.அய்.ஆர்., பதிவு செய்தது.
2019 மே திங்களில் அமலாக்கத்துறை இவர் மீது நடவடிக்கை எடுத்தது.
2023 ஜூன் திங்களில் இவர் பா.ஜக.வில் சேர்ந்தார். இவர் மீதான வழக்கை மூடிவிட முயற்சிகள் நடக்கின்றன.

பிரதாப் சர்நாயக்

இவர் சிவசேனா கட்சியைச் சேர்ந்தவர். 2020இல் அமலாக்கத்துறை இவருடைய வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தி மிரட்டுகிறது. சிவசேனாவில் இருந்து பா.ஜ.க-வில் 2022இல் ஜூன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார்.
2022 செப்டம்பரில் அமலாக்கத்துறை அவர் மீதான வழக்கை மூடுவதாக அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து அவரைப் புனிதமானவர் என்கிறது.

ஹிமந்தா பிஸ்வா சர்மா

இவர் அசாம் முதலமைச்சராக இருந்தபோது, 2014 மற்றும் 2015இல் சி.பி.அய் மற்றும் அமலாக்கத்துறையால் விசாரணை செய்யப்பட்டார். அவருடைய வீடு மற்றும் அலுவலகத்தை சி.பி.அய் சோதனை செய்தது.

2015இல் அவர் பா.ஜ.க-வில் இணைந்தார். அவர் மீது நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுவிட்டன.
ஹசன் முஷ்ரிப்

இவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். இவர் பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆளாக்கப்பட்டார்.
2023இல் பிப்ரவரி மூன்று முறை அமலாக்கத்துறை இவரது வீட்டில் ரெய்டு நடத்தியது. 2023 ஜூலை பா.ஜ.க-வில் சேர்ந்தார். இவர் மீது அதன் பின் எந்த நடவடிக்கையும் இல்லை.

சுவேந்து அதிகாரி

இவர் மேற்குவங்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். 2017 ஏப்ரலில் சி.பி.அய். இவர் மீது வழக்கு பதிவு செய்தது. 2020 டிசம்பரில் பா.ஜ.க-வில் இணைந் தார். அதன்பின் இவர் மீது நடவடிக்கை இல்லை.

கே.கீதா

இவர் ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆர். கட்சியைச் சேர்ந்தவர்.
கீதா மற்றும் அவர் கணவர் பி.ராமகோடேஸ்வர்ராவ் மீது 2015இல் வங்கி மோசடிக்காக சி.பி.அய். குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து மிரட்டியது. 2019ஜூலையில் இவர் பா.ஜ.க-வில் இணைந்தார். 2022 செப்டம்பரில் சிறப்பு நீதிமன்றம் இவருக்கும் இவருடைய கணவ ருக்கும் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது. 2019ல் பா.ஜ.க-வில் சேர்ந்தார். 2022 செப்டம்பரில் தெலங்கானா உயர்நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி பிணை வழங்கியது. இவர் மீதான வழக்கு நிலுவையில் உள்ளது.

சுஜனா சவுத்ரி

இவர் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவர். மேனாள் ஒன்றிய அமைச்சர். இவர் மீது 3 எப்.அய்.ஆர்.போடப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. வங்கிகளின் கூட்டமைப்பில் இருந்து 360 கோடி ரூபாய்க்குமேல் கடன் பெற்று மோசடி செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. 2019 ஏப்ரலில் ரூ.315கோடி மதிப்புள்ள இவருடைய சொத்துக்களை அமலாக்கத் துறை பறிமுதல் செய்தது. 2019 ஜூன் திங்களில் இவர் பா.ஜ.க-வில் சேர்ந்தார். இவர்மீது நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.
இப்படி, எதிர்க்கட்சிகளை மிரட்டி, அச்சுறுத்தி அவர் களை பா.ஜ.க-வில் இணைத்துக் கொள்வது பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க-வின் தந்திரமாகும்.
ஒன்றிய அரசின் சுயேச்சை அமைப்புகளான அம லாக்கத்துறை, வருமானத்துறை, சி.பி.அய், முதலிய வற்றைப் பயன்படுத்தி எதிர்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களைக் குற்றவாளிகளாக்கி, மிரட்டி அவர்களை பா.ஜ.கட்சியில் சேர்த்துக் கொள்வதையும், பா.ஜ.க-வில் சேர்ந்தபிறகு அவர்கள் மீதான வழக்குகளை நிறுத்தி விடுவதையும் பா.ஜ.க வழக்கமாக கொண்டுள்ளது என்பதற்கு இவையெல்லாம் சான்றுகளாகும்.
இவை போல இன்னும் ஏராளம் உண்டு.

ஒரே ஒரு கேள்வி

குற்றவாளிகள் எனக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பா.ஜ.க-வில் சேர்ந்தபிறகு புனிதர்களாக மாற்றப்படு கிறார்களே அதற்குரிய மந்திரம் என்ன? புனித தீர்த்தம் என்ன? பா.ஜ.க-வினர் கூறுவார்களா?

-இவ்வாறு திமுக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment