பிற இதழிலிருந்து...மக்கள் விரோதக் கொள்கையால் முற்றுகையிடப்பட்டுள்ள இந்திய மக்களாட்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 10, 2024

பிற இதழிலிருந்து...மக்கள் விரோதக் கொள்கையால் முற்றுகையிடப்பட்டுள்ள இந்திய மக்களாட்சி

ராகுல் முகர்ஜி
ஆதித்யா சிறீவாஸ்தவா

அரசமைப்புச் சட்டத்தால் உத்தரவாதம் அளிக்கப் பட்ட கோட்பாடுகளின்படி ஒரு சமூகம் சுதந்திரமாக இயங்கவேண்டும் என்பதே ஜனநாயகத்தின் அடிப்படைச்சாரம் ஆகும். நல்ல வாய்ப்பாக, இந்தியாவில் வழமைக்கு அதிகமாக பலதரப்பட்ட, துடிப்புமிக்க குடிமைச் சமூகங்கள் உள்ளன. ஆனால் இன்றோ அரசமைப்புச் சட்டம் உறுதி செய்யும் அடிப் படை உரிமைகளே முற்றுகையிடப்பட்ட நிலையில் உள்ளன. அரசமைப்புச் சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள சமூக இயக்கங்களும், அரசியல் சக்திகளும் ஒன்றிணைந்து அடிப்படைச் சுதந்திர உரிமைகள் அனைத்தையும் பாதுகாக்க வேண்டும். இதற்கு தெளிவான புரிதல் அவசியம். உணர்வுகள் எப்படி முற்றுகையிடப்பட்டுள்ளன என்பதை அறிந்து கொண்டு செயல்பட வேண்டியது மிகவும் முக்கியம்.
வகுப்புவாதத்திற்கு எதிராகவும் முற்போக்குச் சிந்தனையுடனும் செயல்பட்டு வரும் சமூகமானது அரசாங்கத்தின் தாக்குதலுக்கு ஆளாகி வருகிறது. மதச்சார்பற்ற நிலையினை வலியுறுத்தியும் அனைத்து மதங்களுக்கும் சமமான மரியாதை அளித்தும், பொருளாதார வளர்ச்சியிலான குடிமக்களின் நலன் கருதியும் உழைத்து வரும், எந்தக் கட்சியினரும் இந்த நலன் விரும்பும் சமூகத்தின் அங்கமே; அவர்களே இந்து தேசியத்திற்கு எதிரான ஒன்றிணைப்பை ஏற்படுத்திட முடியும்.

தாக்குதலின் அளவு
இப்படிப்பட்ட குடிமைச் சமூகத்தில் சிறியதும் பெரியதுமான பதினைந்து அமைப்புகளை இன்றைய ஒன்றிய அரசாங்கம் ஏவிவிடும் — கட்டுப்படுத்திடும் வழிமுறைகள் பற்றியும் ஆய்வு செய்யப்பட்டது.
நம் நாட்டிலிருந்தும் அயல்நாடுகளிலிருந்தும் நன்கொடைகள் பெற்று இயங்கிவரும் அமைப்புகள் அவை. அப்படிப்பட்ட அமைப்புகளில் பலரும் அறிந்த — தெரிந்த அமைப்புகள் தான் பெரும் கட்டுப்படுத்திடும் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளன.
ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல்(Amnesty International)
சென்டர் ஃபார் ஈக்விட்டி ஸ்டடீஸ்(Center for Equity Studies)
சிட்டிஸன்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் அண்ட் பீஸ் (Citizens for Justice and Peace)
லாயர்ஸ் கலெக்டிவ் (Lawyers’ Collective)
சென்டர் ஃபார் பிரமோஷன் ஆஃப் சோஷியல் கன்ஸர்ன்ஸ் (Center for Promotion of Social Concerns)
ஆக்ட் நவ் ஃபார் ஹார்மனி அண்ட் டெமாக்ரசி (Act Now for Harmony and Democracy)
ஆகிய ஆறு அமைப்புகள் அவை. எங்கள் ஆய்வுக்கு உட்பட்ட அமைப்புகளுள் முக்கியமான மேற்கண்ட ஆறும். நடுநிலைக் கண்ணோட்டம் உள்ளவை; தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப் பினரின் உரிமைகளுக்காகவும் சமத்துவத்திற்காகவு மான கருத்தியலைக் கொண்டவை; சிறுபான்மையினரின் நலனுக்காக குரல் கொடுக்கும் சமூக அக் கறை கொண்டவை; நியாயத்தை முன்னேற்றப்படுத் திடும் எண்ணம் கொண்டவை அந்த அமைப்புகள்.
வகுப்புவாதத்தை எதிர்த்து செயல்பட்டு வரும் அமைப்புகள்தான் பெரிய அளவில் தாக்குதலுக்கு ஆளாகின்றன. நிதிப் பற்றாக்குறையுடன் செயல்பட்டு வரும் அமைப்புகள் என்பதோடு – சிறைக்கு அனுப்பப்பட்ட – சிறைக்கு அனுப்பப்படும் நிலையிலிருக்கும் தலைவர்களைக் கொண்டுள்ள அமைப்பு களின் மீதான தாக்குதல்களும் விரைவுப்படுத்தப் பட்டன.
வரையறைத் தாக்குதல்களுக்கு ஆளான சில அமைப்புகள் செயல்பட முடியாத நிலைமைக்கு வந்து விட்டன. அரசின் தாக்குதல்களால் அந்த அமைப்புகள் ஏறக்குறைய முடங்கிப் போயே விட்டன. இயங்குவதையே நிறுத்திவிட்டன.
அவற்றுள் ஒன்று சென்டர்: ஃபார் பாலிஸி ரிஸர்ச் [Center for Policy Research (CPR)]. அரசு சாரா (NGO) இன்னொரு அமைப்பும் அந்தப் பட்டியலில் அடக்கம். அமெரிக்க நிதி உதவியுடன் இயங்கி வந்த அந்த தன்னார்வ தொண்டு அமைப்புகள் (NGOs), வகுப்பு வாதமற்ற தளத்தில் இயங்கியவை.
‘ஆக்ட் நவ் ஃபார் ஹார்மனி அண்ட் டெமாகரஸி’ (Act Now For Harmony and Democracy) [ANHAD]யும் வரையறை தாக்குதலுக்கு ஆளான ஓர் அமைப்புதான். இத்தகைய அமைப்புகளில் சிலர், வகுப்புவாதத்திற்கு எதிராகச் செயல்படாமல் நடுநிலை வகித்தவையாகும்.
வகுப்புவாதமே இல்லாத சென்டர் ஃபார் பாலிஸி ரிஸர்ச் (Center for Policy Research) (CPR) அமைப்பும் அரசு தாக்குதலுக்குத் தப்பவில்லை. கவுதம் அதானி என்ற தொழிலதிபருக்கு, சுரங்கப் பணிகளில் தாக்கம் ஏற்படுத்திய ஆதிவாசிகளின் உரிமை இயக்கங்களுடன் இந்த (CPR) அமைப்பு தொடர்பில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இதே CPR அமைப்பைச் சேர்ந்த ஒரு நபர் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் (Economic Advisory Council to the Prime Minister) தலைமைப் பதவியில் உள்ளார். மற்றொருவர் பிரதமரின் நிட்டி ஆயோக் (NITI AYOG) அமைப்பின் துணைத்தலைவராக உள்ளார்.
பல்வேறு அமைப்புகளின் மீது அரசின் நடவ டிக்கைகள் பற்றிய எங்கள் ஆய்வின் மூலம் அந்தத் தாக்குதல்களின் அளவு வீச்சு அறியப்பட்டது. சில அமைப்புகள் ஒன்றிய அரசால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. சில அமைப்புகள் ஒரு வரைய றைக்குள் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கின்றன.
அதிகமாக தாக்கப்பட்டுள்ள அமைப்புகளும் வரையறையுடன் தாக்கப்பட்டுள்ள அமைப்புகளும் மட்டுமின்றி, மிகக்குறைந்த அளவில் தாக்குதல்களுக்கு ஆளான இன்னொரு வகையும் உண்டு. இவை வகுப்புவாதத்திற்கு எதிரான செயல்பாடுகளில் அக்கறை காட்டாதவை. அடிப்படை உரிமைகளுக்காக போராடி வந்தபோதிலும் அவை வகுப்புவாதத்தினை தீவிரமாக எதிர்க்கவில்லை. இத்தகைய அமைப்பு களுள் ‘நவசர்ஜன்’ (Navsarjan) ஒன்றாகும். தாழ்த்தப் பட்டவர்களின் உரிமைகளுக்காகப் போராடும் அமைப்புகளுள் ‘நவசர்ஜன்’ (Navsarjan) முன்னிலை வகிக்கிறது.

வகுப்புவாதத்தை தீவிரமாக எதிர்க்காத மற்றொரு அமைப்பு குழந்தைகளின் உரிமைகளுக்காகப் போராடும் – ‘Save the Children’s Work on Child Rights’ (ஸேவ் த சில்ட்ரன்ஸ் ஒர்க் ஆன் சைல்ட் ரைட்ஸ்) என்னும் அமைப்பாகும். இவ்விரண்டு அமைப்பு களும் அனுபவித்து வரும் தாக்குதல் துயரம் மற்ற வகை அமைப்புகளை ஒப்பிட்டுப் பார்த்தால் மிகவும் குறைவே.

பல வகையான
அளவுகோல்களும், கருவிகளும்
தொண்டு நிறுவன அமைப்புகளைக் கட்டுப்படுத்த ஒன்றிய அரசு பயன்படுத்தும் வழிமுறைக் கருவி களும் பலவிதமானவை. பல தாக்குதல்கள் தண்டனை வடிவங்களில் உள்ளன. சட்ட விரோத பணப்பரி மாற்றம், வேவு பார்த்தல் போன்ற குற்றங்கள் சிறை வாசத்திற்கே வழி வகுக்கக்கூடியவை. எங்கள் ஆய்வில் தன்னார்வ தொண்டு அமைப்புகளை அதிக அளவில் பாதிக்கக்கூடிய நடவடிக்கைகளையே நாங்கள் முக்கியமாக எடுத்துக் கொண்டோம். சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டப்பிரிவை எங்கள் ஆய்வின் போது நாங்கள் கருத்தில் கொள்ளவில்லை.
நிதிச் சட்டத்தின் மூலம் 2002 ஆம் ஆண்டின் பணப் பரிவர்த்தனைச் சட்டத்தில் 2019 ஆம் ஆண்டு சில திருத்தங்கள் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து வருவாய்த்துறை அத்தகைய குற்றங்களை மேலும் விரிவுப்படுத்தி வரையறுத்திருந்தது. இதன் விளைவாகத் தான் இன்று தன்னார்வத் தொண்டு (NGO) அமைப்புகள் மீதும் எதிர்க்கட்சிப் பிர முகர்கள் மீதும் அமலாக்கத்துறை (Enforcement Directorate) தொடர் தாக்குதல்களை நடத்திவருகிறது.
1976ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையில் இருந்த அவசர கால நெருக்கடிச் சட்டமான வெளிநாட்டு செலாவணி பங்களிப்புச் சட்டம் Foreign Contribution Regulation Act) (FCRA), அய்க்கிய முன்னணி கூட்டணியின் (UPA), ஒன்றிய ஆட்சியில், 2010 ஆம் ஆண்டு கடுமையாக்கப்பட்டது. 2020 இல் பா.ஜ.க. ஆட்சியின் போது மேலும் கடுமையாக்கப் பட்டது. 2010 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளின் மாற்றத்தை பா.ஜ.க. பயன்படுத்திக்கொண்டது.

2015 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில், 18000 தன்னார்வத் தொண்டு (NGO) நிறுவனங்களை நிதியுதவி பெற முடியாமல் செய்துவிட்டது பா.ஜ.க. FCRA  என்னும் வெளிநாட்டு செலாவணி பங்களிப்புச் சட்டத்தின் தாக்கத்தால் அரசியல் கட்சிகளுக்கு அயல்நாட்டு நிதிவரவு குறைந்துவிட்டது. அந்த அளவுகோலால் தன்னார்வத் தொண்டு அமைப்புகள் (NGO) பெரிய அளவில் இன்று பாதிக்கப்பட்டுள்ளன.
அயல்நாட்டு கொடையாளர்கள் கட்டுப்படுத்தப் பட்டுள்ளனர். ஏறத்தாழ 80 அயல்நாட்டு அமைப்புகள் அரசின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளன. நிதி உதவியில் புகழ்பெற்று விளங்கும் இந்த அமைப்புகள் மனித உரிமைகள் சார்ந்த விவகாரங்களில் தலையிடாத வண்ணம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிலும் அவற்றில் பணிபுரிபவர்களின் இல்லங்களிலும் சோதனைகள் செய்திட FCRA சட்டப்படி Central Bureau of Investigation (CBI) சி.பி.அய்.க்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆம்னெஸ்டி இண்டியா (Amnesty India) அமைப்புக்கு எதிராக சி.பி.அய். புகார் அளித்துள்ளது. அதன் நிர்வாகக் குழுவின் தலைவர் ஆகார் படேல் (Akar Patel) மீது புகார் செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் சிக்கலான நடவடிக்கையாக இருக்கும். அந்த தொண்டு நிறுவனத்திற்கு மிகப் பெரிய தண்டனை கிடைக்கக் கூடும்.

வகுப்புவாதம் சாராத, மற்றும் வகுப்புவாதத்திற்கு எதிரான தொண்டு அமைப்புகளுக்கும் (NGOs) நிதி யுதவி கிடைப்பதில் சிரமம் ஏற்படக்கூடும். தன் னார்வத் தொண்டு அமைப்புகளை தண்டிக்க வேறு வழிகிடைக்காமல் ஒன்றிய அரசு வருமானவரித் துறை ஆய்வுகளைப் பயன்படுத்தி விவரங்களைச் சேகரிக்கிறது. தக்க நேரத்தில் பயன்படுத்திக் கொள்ள சி.பி.அய். அல்லது வரித்துறை மூலம் மேலும் அதிக வழக்குகள் கிடைக்க இந்தத் தகவல்கள் ஒன்றிய அரசுக்குப் பயன்படலாம்.

எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு
இந்திய ஜனநாயகத்தின் கடைசி மதில் சுவர் (bastion) மக்களின் அமைதியான வாழ்வும் சமூக அமைப்புமே ஆகும். ஒரு கோட்டையின் அரண் போன்றதே அந்த நிலை; என்றே நம்பலாம். அந்த அரணை முற்றுகையிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தல்கள் வாயிலாக கருநாடக முதலமைச்சர் சித்தராமையாவும், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியும் பா.ஜ.க.வுக்கு எதிராக வலுவான நிலையில் உள்ளனர். காங்கிரஸ் தலைவர்களாக இருந்தவர்கள் இன்று இரு மாநிலங்களிலும் முதலமைச்சர்களாகி உள்ளனர். மக்களின் நலனுக்காக பாடு படப் போவதாக இருவரும் உறுதிமொழி அளித்து பல நல்ல திட்டங்களையும் அறிவித்துள்ளனர். பா.ஜ.க.வின் வகுப்பு வாதத்திற்கு எதிராக செயல்பட்டு, குடிமைச் சமூகம் நியாயப் படி அமைய இருவ்ருமே போராடப் போவதாக அறிவித்துள்ளனர்.

இண்டியா (I.N.D.I.A.) கூட்டணிக்கு உள்ள மிகச் சிரமமான பணி வலிமையும் ஆற்றலும் நிறைந்த மாநில / மாவட்டத் தலைவர்களை கவனமாகத் தேர்வு செய்வதுதான்.
கருநாடகாவில் “எத்தெளு கருநாடகா (பொங்கி எழு கருநாடகமே!) என்ற முழக்கம் எழத் தொடங்கி விட்டது. தெலங்கானாவிலும் வெவ்வேறு உறுதி முழக்கங்களுடன் மக்கள் எழுச்சியோடு போராட ஆரம்பித்துவிட்டனர். இரு மாநிலங்களுக்கும் இப்போது பொதுவாக உள்ள இலக்கும் லட்சியமும் ஒன்றே ஒன்று தான் – மதச்சார்பின்மைப் பார்வை யுடனும் முற்போக்குக் கண்ணோட்டத்துடனும் செயலாற்றி வெற்றியைக் காண்பது. இந்த நோக்கத் துடன் சமூக அமைப்புகளும், அரசியல் சக்திகளும் இந்த இரு மாநிலங்களிலும் ஒன்றிணைந்து வரு கின்றன.

இண்டியா கூட்டணி (I.N.D.I.A.) ஒரு தனிக்கட்சி போலவே இயங்க வேண்டியது அவசியம். ஒரே கட்சி போல் அது செயல்படவேண்டும். வகுப்புவாதத்தை எதிர்ப்பவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து தங்களோடு இணைத்துக்கொள்ள வேண்டும். முற்போக்குவாதி தொண்டர்களின் ஒத்துழைப்புடன் குடிமைச் சமூகம் அமைத்துக் கொள்ள இரு மாநிலங்களும் செயல்படவேண்டும். ஜனநாயகத்தைக் காத்திடும் பணியில் எதிர்க்கட்சியான (I.N.D.I.A. bloc) இண்டியா கூட்டணி திட்டமிட்டுச் செயலாற்ற வேண் டும். அப்போது தான் ஒன்றிய அரசின் குடிமைச் சமூகத்திற்கு எதிரான தாக்குதல்களையும் முற்றுகைச் சதிகளையும் முறியடிக்க முடியும்.

(நன்றி: ‘தி இந்து’ நாளிதழ் – 05.01.2024)
மொழியாக்கம்: எம்.ஆர். மனோகர்

No comments:

Post a Comment