நாகரீக காலத்திலும் நுணுக்கமாக தங்களை அறியாமலேயே அடிமையாகி உள்ள பெண்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 13, 2024

நாகரீக காலத்திலும் நுணுக்கமாக தங்களை அறியாமலேயே அடிமையாகி உள்ள பெண்கள்!

தலைமுடி என்பது உடலில் உள்ள உறுப்புகளான தலையில் நேரடியாக ஏற்படும் பாதிப்பை தவிர்க்க இயற்கையான முறையில் உருவான ஒரு பாதுகாப்பு அமைப்புதான் ரோமம், தலையில் அதிகம் வளர்வதால் முடி என்று அழைக்கப்படுகிறது.
வனங்களில் வாழ்ந்த மனித இனத்திற்கு உடல் முழுவதுமே அடர்த்தியான முடிகள் இருந்துள்ளது. பின்னர் நாகரீக வாழ்க்கை வாழத்துவங்கியபோது உடலில் ஆடைகள் போர்த்திக்கொண்ட காரணத்தால் மரபணுக்களில் சிறிய மாற்றம் ஏற்பட்டு தலை மற்றும் உடலில் உள் பாகங்களில் மட்டுமே முடிகள் வளரும் நிலை இன்று உள்ளது
அவ்வளவே தலையில் முடி வளர்வதில் ஆண் பெண் என்ற பேதம் இல்லை. சீக்கிய ஆண்கள் மற்றும் சில அரபுவாழ் பழங்குடியின ஆண்கள் நீண்ட தலைமுடியை வளர்ப்பதை தங்களின் கலாச்சாரங்களில் ஒன்றாக வைத்துள்ளனர்.
இந்த தலைமுடியை ஹிந்துமதத்தில் பெண்களை அடிமைப்படுத்தும் ஒன்றாக வைத்துவிட்டனர். இதனால் படித்த பெண்கள் கூட இந்த அடிமைத்தனத்திற்கு பலியாகிவிடுகின்றனர் என்பது கொடுமையான ஒன்று ஆகும்.

முடியை பின்னினால் ஒரு சக்தி என்றும் முடியை முடிந்துவைத்தால் வேறுவகையான காரணங்களையும் கூறுவார்கள்.
முடியை விரித்துவிடுவது தலைவிரி கோலம் என்று கூறுவார்கள்.ஆகையினால்தான் இறந்தவர் வீட்டிலும் பிணத்தின் பின்னும் தலைவிரி கோலமாக செல்வர். இதற்கு ஒரு பயித்தியக்காரத்தனமாக காரணத்தைக் கூறுவார்கள். அது என்னவென்றால் “என்னவரே சென்ற பின் எனக்கேது உறவு. இனி எந்த உறவும் எனக்கில்லை” என்பதாகும். ஆனால், இன்று கணவனை இழந்தவர்கள் மறுமணம் செய்துகொள்கிறார்கள். அப்படி இருக்க தலைவிரிகோலத்திற்கான காரணம் ஒன்றுமில்லாமல் போகிறது.

அடுத்து தொலைக்காட்சியில் வரும் ஆன்மீக பிதற்றல் காரர்கள் கூறுவது, நீங்கள் மதநம்பிக்கை இல்லாமல் இருந்தாலும் சரி தலை முடியின் நுனி வழியாக ஆத்ம சக்தி வெளியேறுகிறது நல்ல / தீய உணர்வுகள் (அ) அதிர்வுகள் வந்து செல்வதற்கான ஊடகம் (னீமீபீவீuனீ) போன்றது முடியின் நுனி..மேலும் சந்நியாசிகள் மொட்டை அடித்துக் கொள்வதற்கு இதுவும் ஒரு காரணம்..ஏனெனில் வெளியிலிருந்து பெறுவதற்கும் ஒன்றுமில்லை. நம்மிடமிருந்து போவதற்கும் ஒன்றுமில்லை.. என்பதை உணர்த்துவதற்காக.. ஆகையினால் தான் முற்காலத்தில் நுனி முடி வெளியில் தெரியாமல் இருக்க நார். புல் அல்லது குஞ்சம் கட்டிக்கொள்வார்கள். தற்போது அந்தப் பழக்கம் இல்லை.
மூன்று சடைக்கும் ஒரு கட்டுக்கதை விட்டிருக்கிறார்கள். இந்த மூன்று பின்னல் அமைப்பு த்ரிவேணி சங்கமத்தை ஒத்தது. மூன்று நதிகள் சேரும் போது இரண்டு நதிகள் (கங்கை, யமுனை) கண்களுக்கு புலப்படுகின்றன. ஒரு நதி (ஸரஸ்வதி) புலப்படுவதில்லை. இதே போலவே பின்னலின் மூன்று பகுதிகளில் இரண்டு பகுதிகளே புலப்படுகின்றன.

பின்னலின் வலது – பிறந்த வீடு. இடது – புகுந்த வீடு. நடுப்பகுதி – பெண் தன்னை மறைத்து இரு வீட்டாரையும் இணைத்து அழகுற தோற்றமளிக்கச் செய்வதே இதன் பொருளாகும். தன்னை முன்னிறுத்தும் பெண்ணை காட்டிலும் தன் குலத்தை முன்னிறுத்துபவளே உயர்ந்தவள் ஆவாள். ஆகையினால் பின்னல் வெறும் அலங்காரம் அல்ல வாழ்வின் தத்துவமாகும் இது லோகத்தில் வாழும் அனைத்துப் பெண்களுக்கு பொதுவானது என்று கதை விடுவார்கள். அதுவும் தலைவிரிக் கோலமாக இருந்தால் உறவின் மீதான பிடிப்பு அறுந்து போகுமாம். பெண்களின் வாழ்க்கையில் மூடநம்பிக்கைகள் பலவற்றை கடந்துவந்த போதும் அவர்களை அச்சுறுத்துவதற்கு அவர்களின் உடல் அமைப்பைக் கூட பயன்படுத்தி உள்ளனர். இன்று காலம் மாறிவிட்டது. ‘பாப் கட்’ என்ற குட்டை முடிக் கலாச்சாரம் பெண்கள் அதிகம் வேலைக்குச் செல்லும் 1990ஆம் ஆண்டிலிருந்தே பிரபலமாகிவிட்டது. அவர்கள் வேலைக்குச் சென்று பொருளாதாரத்தில் தங்களை மேம்படுத்திக் கொண்டனர். ஆனால், மதவாதப் பிடியில் மூடநம்பிக்கை கட்டுக் கதைகளுக்குள் கட்டுண்ட பெண்கள் வாழ்க்கையை போராட்டத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர்.

No comments:

Post a Comment