பெரியார் உலகமயமாவதைக் கண்டு தலைவர் ஆசிரியர் மகிழ்ச்சியில் திளைப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 13, 2024

பெரியார் உலகமயமாவதைக் கண்டு தலைவர் ஆசிரியர் மகிழ்ச்சியில் திளைப்பு

featured image

தொகுப்பு:
வி.சி.வில்வம்

திருச்சி, ஜன.13 திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சி மலர்கள் பூத்துக் குலுங்க பொங்கலிட்டு, தமிழர் தலைவர் இன்புற்றார். பெரியார் கல்வி வளாகத்தில் படித்து முடித்தோர் ஆயிரக்கணக்கில் புகழுடன் ஒளி வீசித் திகழ்கின்றனர் என்று கல்வி நிறுவனங்களின் தலைமை ஆசிரியர்களும், முதல்வரும் சொன்னபோது, தமிழர் தலைவர் ஆசிரியர் இன்ப அதிர்ச்சியில் திளைத்தார்.
திருச்சி, கலைஞர் கருணாநிதி நகரில் அமைந்துள்ள பெரியார் கல்வி நிறுவனங்களின் சார்பில், பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது! இந்நிகழ்வில் பங் கேற்க தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் குறித்த நேரத்திற்கு வளாகம் வந்து சேர்ந்தார்கள். உடன் ஆசிரியரின் வாழ்விணையர் மோகனா அம்மையார், திருச்சி கல்வி நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் தங்காத்தாள், மாவட்டத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் உள்ளிட்ட கழகத் தோழர்களும் வருகை தந்தனர்.

பொங்கிய கல்விப் பானைகள்!
நுழைவாயிலில் கம்பீரமாய் காட்சியளிக்கும் அய்யா தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது! தொடர்ந்து விழா எடுக்கும் மைதானம் நோக்கிச் சென் றார்கள். அங்கே இருபால் பிஞ்சுகள் ஆசிரியரை வர வேற்றனர். இதில் எல்.கே.ஜி, யு.கே.ஜி குட்டிப் பையன் கள்கூட வேட்டி அணிந்திருந்தார்கள். குழந்தைகளின் வரவேற்பே மொத்த நிகழ்ச்சிக்கும் கட்டியம் கூறின!
தொடர்ந்து 6 பானைகளில் பொங்கல் தயாராகிக் கொண்டிருந்தது. 3 கரும்புகளைச் சேர்த்துக் கட்டி, ஒவ்வொரு பானைக்கும் அழகு சேர்த்திருந்தனர். “என்ன, இத்தனை பானை?” என்று கேட்டபோது, இது 1957 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பெரியார் தொடக்கப் பள்ளியின் பொங்கல் பானை என்றனர், அடுத்தது 1961 இல் தொடங்கப்பட்ட நாகம்மை ஆசிரியர் பயிற்சிப் பள்ளியின் பானை, மூன்றாவதாக இருந்தது 1974 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் பொங்கல் பானை, தொடர்ந்து பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் பள்ளியின் (ஆண்டு 1978) பொங்கல், அய்ந்தாவதாக அமர வைக்கப்பட்ட பொங்கல் 1980 இல் தொடங்கப்பட்ட பெரியார் மருந்தியல் கல்லூரி சார்பானது, இறுதியாகப் பெரியார் இலவச மருத்துவமனை தம் பங்கிற்குப் பொங்கல் வைத்திருந்தது.

ஆசிரியரின் அன்பில் நனைந்தோர்!
ஆக அறுசுவையில் ஆறு பொங்கல் பானைகள் வரிசை கட்டி நின்றன. ஆசிரியரின் வாழ்விணையர் மோகனா அம்மையார் மற்றும் தங்காத்தாள் இருவரும் இறுதியாகப் பொங்கல் பானையை ஒரு கிளறு, கிளறவும் சுவையான பொங்கல் தயாரானது. துறுதுறுவென சுற்றி நின்ற குழந்தைகளுக்கு ஆசிரியர் பொங்கல் ஊட்டி விட்டார். அடடா! காணக் கிடைக்காத அக்காட்சியைப் படம் பிடிக்காதோர் எவருமிலர்! எத்தனை, எத்தனை குழந்தைகளுக்கு, அத்தனை, அத்தனை நேரமாய் ஆசிரியர் அன்பைப் பொழிந்தார்! ஒவ்வொரு குழந் தையும் “ஆவென” வாயைத் திறக்கும் போது ஏற்பட்ட நகைச்சுவையும், சிரிப்பொலியும் பொங்கலை விடவும் தித்தித்தது!

போராட்டம் எங்கள் குருதி ஓட்டம்!
இப்படியான நிலையில் மைதானத்தைச் சுற்றியுள்ள அமரும் பகுதிகளில் (Gallery), சற்றொப்ப 3 ஆயிரம் மாணவச் செல்வங்கள் குழுமியிருந்தனர்! திடீரென ஆசிரியர் மைதானத்தின் உட்பகுதிக்குச் சென்றார். ஒரு கையை உயர்த்தியவாறே மாணவர்களுக்குத் தம் அன்பையும், வணக்கத்தையும் வெளிப்படுத்தினார். ஆசிரியரின் வேக நடையும், புன்சிரிப்பும், எளிமையும் மாணவர்களை உற்சாகத்தின் எல்லைக்கே இட்டுச் சென்றது என்றால் மிகையில்லை!
இப்படியான உணர்வுப்பூர்வமான தருணத்தில், “போராட்டம் எங்கள் குருதி ஓட்டம், இலட்சியத்தைக் காணாமல் ஓயமாட்டோம்” என்கிற பாடல் ஒலிபரப்பு செய்யப்பட்டு, அது காற்றில் கலந்து, அனைவரின் காதுகளுக்குள்ளும் போய் உடல் முழுக்க சிலிர்ப்பை உண்டாக்கியது! இது ஏதோ… உணர்ச்சிகளால் உந்தப்பட்டு, வந்து விழும் வார்த்தைகள் அல்ல!

பாட்டன் வாங்கிக் கொடுத்த உரிமை!
மூவாயிரம் மாணவர்களில் 75 விழுக்காட்டினர் பெண்களே இருந்தனர் என்பது நம் கொள்கைக்கு ஏற்பட்ட எழுச்சி அல்லவா! அந்த இருக்கைகள் (Gallery) பகுதியில் நின்றவாறு விண்ணைப் பிளக்கும் உற்சாகக் குரல் எழுப்பினார்களே மாணவிகள்… அது “விடுதலைக் குரல்” அல்லவா! அது அந்த மாணவர்களின் பாட்டன் பெரியார் வாங்கிக் கொடுத்த உரிமைக் கீதமல்லவா! “விண்ணைத் தொட முயலுங்கள்; மேகங் களாவது கிடைக்கும்” என்பார்கள், பெரியார் பள்ளி மாணவர்கள் மேகத்தையும் அடைவார்கள்; விண்ணையும் தொடு வார்கள்!
தமிழர் தலைவரும், மாணவர்களும் பரஸ்பரம் அன்பை வெளிப்படுத்திய பின் ஒவ்வொரு பள்ளி, கல்லூரி மாணவர்களும், ஆசிரியருடன் குழுப்படம் எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து சாமி.கைவல்யம் முதியோர் இல்லத்தின் பெரியவர்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டு, புத்தாடைகளும் கொடுக்கப்பட்டன. தித்திக்கும் இந்தத் தமிழர் திருநாள் நிகழ்ச்சியில் கல்வி நிறுவனத் தலைமையாசிரியர்கள், முதல்வர்கள், அலு வலகப் பணியாளர்கள் உள்ளிட்ட வளாகத்தின் அத் தனை ஊழியர்களும் கலந்து கொண்டு சிறப்பு
செய்தனர்!

No comments:

Post a Comment